திங்கள், 22 நவம்பர், 2010

செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் முதன்முதல் நிகழ்த்திய சிறிய பெரு வெடிப்புகள்

பிரபஞ் சத்தின் ஆதிமுதல்
பெரு வெடிப்புச்
சிறு காட்சியை
அரங்கேற்றம் செய்தது
முதன்முதல்
உலகப் பெரும் விரைவாக்கி !
ஆய்வகத்தில் உருவாக்க முடியும்
அடிப்படைத் துகள்கள் !
ஈயத்தின் கன அயனிகளை
மோத விட்டு
ஒரு மில்லியன் பரிதிகளின்
உஷ்ணத்தில்
உட்கருவை உருக்கி
உருவாக்கும்
சிறு பெரு வெடிப்பை !
பரமாணுக் குழம்பில்
இருப்பது
குவார்க்கு குளுவான்
ஒளிப்பிழம்பு !
பிரபஞ்சம் தோன்றிய உடனே
பின்ன விநாடி நேரத்தில்
மின்னிய கண்காட்சி !
முதலில் முளைத்த பரமாணுக்கள் !
முதலாய்த் திரண்ட பிண்டம் !
ஆய்வக அரங்கேற்றம்
செய்யும் !
"செர்ன் விரைவாக்கியில் அலிஸ் (ALICE) சாதனத்தோடு அட்லாஸ் (ATLAS) & சியெம்மெஸ் (CMS - Compact Muon Solinoid) சாதனங்களும் தற்காலியமாக கன ஈய அயான் (Lead Ions) மோதல் சோதனையில் பயன்படுத்தப் பட்டன. அந்த ஆய்வுகள் 13.7 பில்லியன் ஆண்டுகட்கு முன்னே பெரு வெடிப்பு நேர்ந்த உடனே இருந்த நிலைகளின் அடிப்படையை எடுத்துக் காட்டும்."

ஜேம்ஸ் கில்லிஸ் (James Gillies, CERN Scientist)

"பிண்டம் (Matter) பல்வேறு நிலைகளில் தோன்றும். நீரைக் குளிர வைத்தால் பனிக்கட்டி ஆகும். நீரைச் சூடாக்கினால் ஆவியாகும். அதுபோல் ஆய்வுக் கூடத்தில் அணுக்களில் எலெக்டிரான்களை நீக்கிச் சூடாக்கினால் அவை பிளாஸ்மா (Plasma - ஒளிப்பிழம்பு) என்னும் ஒரு புதிய நிலை அடைகிறது. எல்லாம் ஒரே உட்கரு கொண்ட பிண்டம்தான். ஆனால் பிரபஞ்சத் தோற்றத்தின் போது இன்னொரு விதப் பிண்டம் இருந்திருக்கலாம். அதைத்தான் பௌதிக விஞ்ஞானிகள் "குவார்க்-குளுவான் பிளாஸ்மா" (Quark-gluon Plasma) என்று குறிப்பிடுகிறார்."

ஜேம்ஸ் கில்லிஸ் (James Gillies, CERN Scientist)


"செர்ன் பரமாணு உடைப்பி ஒரு கால யந்திரம் (Time Machine) ! இது நுண்துகள் விஞ்ஞானிகளுக்கு ஒரு பூர்வீகப் பூங்கா (Jurassic Park for Particle Physicists). இப்போது உண்டாக்கியுள்ள அல்லது உண்டாக்கப் போகும் சில அடிப்படை நுண்துகள்கள் 14 பில்லியன் ஆண்டுகளாகக் காணப் படாதவை !"

•பிலிப் சூவே (Philip Schewe, Science Writer, American Institute of Physics)

"இம்மாதிரி (நுண்துகள்) பௌதிகத்தில் புதிய நிகழ்ச்சிகளை நோக்க முதலில் புள்ளி விவரச் சேமிப்பே முக்கியமானது. அவற்றில் நாம் முதலில் எவ்விதம் படைக்கப் பட்டோம் என்பதை அறியும் தடக்குறி கிடைக்கும். மேலும் பிரபஞ்சத்தில் மொத்தம் 96% உள்ள புலப்படாத கரும் பிண்டம் (Invisible Dark Matter) பற்றி அறியும் குறிக்கோளும் அதன் மூலம் கருஞ்சக்தி வி¨சையைப் (Dark Energy -Antigravity Force) புரிந்து கொள்வதும் திட்டமிடப் பட்டுள்ளன.

டெஸ்பியோனா ஹாட்ஷி•போடியாடு (Despiona Hatzifotiadu, CERN Scientist)


"பிரபஞ்சப் பெருவெடிப்பு நிகழ்ந்து பில்லியன்த் தசம விநாடியில் (Billionth of a Second of the Big Bang) தோன்றிய திரைக் காட்சியைக் கண்டு விட்டோம். இந்தப் புதிய கட்டம் "முதல் பௌதிகம்" என்று பெயர் அளிக்கப் படுகிறது ! இவற்றைப் போல் இன்னும் ஈராண்டுகள் செய்யப் போகும் பல பில்லியன் புரோட்டான் மோதல்களின் துவக்கக் கட்டம் இது."

ஜேம்ஸ் கில்லிஸ் (James Gillies, CERN Scientist)

"இது உலகத் தோற்றத்தைக் கூறும் முதற்பிரிவு (Genesis Chapter -1) விளக்கம் நோக்கி மனிதர் வைக்கும் மாபெரும் கால்தடம் ! செர்ன் உடைப்பி பிரபஞ்சத் தோற்றப் படைப்பு யந்திரம் (Genesis Machine) ! பிரபஞ்ச வரலற்றின் மாபெரும் மகத்தான காட்சியை மீண்டும் திரையிட்டுக் காட்ட செர்ன் உதவுகிறது ! புதிரான இந்த நுண்துகள்களின் கண்டுபிடிப்பு பிரபஞ்சத்தில் நாம் யாரென்னும் கருத்தை மாற்றி விடலாம் !"

மிஸியோ காக்கு, பௌதிக மேதை (Michio Kaku, New York)


"மேற்கட்ட செர்ன் சோதனையில் விரைந்து பாயப் போகும் எதிர் எதிர் ஒளிக்கற்றைகள் நேரிணைப்பு (Alignment of Beams) செய்யப் படவேண்டும். அது நிபுணருக்குப் பெரும் சவாலானது. அட்லாண்டிக் கடலின் அகண்ட இருபுறக் கரைகளிலிருந்து இரண்டு எதிர், எதிர் ஊசிகளை அனுப்பிக் கடல் நடுமையத்தில் அவற்றை மோத வைக்கும் சவாலைப் போலாகும்,"

ஸ்டீவ் மையர்ஸ் (Steve Myers, Director of CERN Accelerators & Technology)

மனித இனம் தொடுவானுக்கு அப்பால் விண்வெளியை நோக்கி அங்கே என்ன உள்ள தென்று எப்போதுமே அறிய விரும்பியுள்ளது ! 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த பிரபஞ்சப் பெருவெடிப்பு நிகழ்ச்சி ஓர் வரையறைக் குட்பட்ட காலத்தில்தான் எழுந்திருக்கிறது ! அதாவது 15 பில்லியன் ஆண்டுக்கு முந்தி உண்டான வடிவுகளை (Objects) நாம் காண முடியாது ! காரணம் அதுவரைப் பயணம் செய்யும் கால வரம்பு ஒளிக்குப் போதாது ! ஆதலால் இன்னும் ஆழமாய் நோக்கி உளவச் சக்தி வாய்ந்த மிகக் நுண்ணிய மின்னலைகளை (Short Waves) நாம் பயன்படுத்த வேண்டி யுள்ளது. ஆகவேதான் (செர்ன் போன்ற) பூத விரைவாக்கி யந்திரங்கள் பரமாணுக்களை மிகச் சக்தியூட்டிச் சோதிக்கத் தேவைப்படுகின்றன !

விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டி•பென் ஹாக்கிங் (பிப்ரவரி 3, 1994)


"புரோட்டான் ஒளிக்கற்றைச் சோதனை துகள் உடைப்புச் சோதனைச் சாதனங்கள் செம்மையாக இயங்குவதைக் காட்டுகிறது. இந்தச் சாதனை இயக்கம் சீரிணைப்புச் செம்மை வினை (Work of Synchronization). துரிதக் காந்தங்கள் முதலில் சீரிணிப்பாகி ஒளிக்கற்றையை வேகத்தை வளர வைத்து ஒரு விரைவாக்கியிலிருந்து மறு விரைவாக்கிக்கு மாற்றி முடிவில் பெரு உடைப்பு யந்திரத்துக்குத் திருப்ப வேண்டும். அப்போது யந்திரத்தின் சீரிணைப்பும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அத்தகைய நிகழ்ச்சி 100 பிக்கோ வினாடிக்குள் (Pico-sceconds) நேர்ந்து விடும்." (One Picosecond = 1 /10^12 Sec)

கியான்லுயிகி அர்துயினி (Gianluigi Arduini) (LHC Deputy Head of Hardware Commissioning)

மனதைக் துள்ள வைக்கும் உச்ச சக்தி வானியல் பௌதிகம் (High Energy Astrophysics) நுட்பத் துகளை பிரமாண்டத்துடன் பிணைக்கிறது. இத்துறையில் எழுந்த முன்னேற்றக் கோட்பாடுகள் பிரபஞ்சத் துவக்கத்தின் நிகழ்ச்சிகளையும், அப்போது தோன்றிய பேரளவுச் சக்தி வாய்ந்த இயக்கங்களையும் உளவு செய்ய விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது. அத்துடன் அடுத்த சில ஆண்டுகளுக்கு மேலும் புதுக் கண்டுபிடிப்புகள் தோன்றுவதற்கு உறுதி அளிக்கின்றன.

கெல்லி ஜாகர், (Kellie Jaeger, Astronomy Magazine)

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே புரோட்டான்களும், நியூட்ரான்களும் முதன்முதல் கண்டுபிடிக்கப்பட்ட மூலாதாரப் பரமாணுக்கள் (Subatomic Particles). அவை கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் அவைதான் அணுவின் பிளக்க முடியாத மூலப் பரமாணுக்களாய்க் கருதப்பட்டன. 1960 ஆண்டுகளில் அவற்றுக்கும் நுட்பமான துகள்களால் பரமாணுக்கள் உருவாகியுள்ளன என்று அறியப் பட்டது. புதுமுறைச் சோதனைகள் மூலம் புரோட்டான், நியூட்ரான் ஆகிய பரமாணுக்களின் உறுதியற்ற உள்ளமைப்பை இப்போது அழுத்தமாய்ச் சொல்ல முடிகிறது.

கிளாஸ் ரித் & ஆன்டிரியா சே•பர் (Klaus Rith & Andreas Schafer)


உலகப் பெரும் செர்ன் உடைப்பி உண்டாக்கிய சிறு பெரு வெடிப்புகள்

2010 நவம்பர் 7 ஆம் தேதி செர்ன் பரமாணு உடைப்பு யந்திரம் முதன்முதலாக புரோட்டானுக்குப் பதிலாக ஈயத்தின் கன அயானிகளை மோத வைத்துச் சிறு பெரு வெடிப்புகளை நிகழ்த்தியுள்ளது. பரிதியின் மையத்தைப் போல் மில்லியன் மடங்கு உஷ்ணத்தை மோதலில் உண்டாக்கி இந்த விந்தையைச் செய்திருக்கிறது. இதுவரை செர்ன் எளிய புரோட்டான் கணைகளை மோதவிட்டு ஹிக்ஸ் போஸான் துகளைக் காண முயன்று வந்தது. இப்போது ஈயத்தின் கன அயனிகளை விரைவாக்கியில் ஒளிவேகத்துக்கு ஒட்டிய விரைவில் வேகமூட்டி மோத வைத்து ஆராய்ச்சிகள் செய்து வருகிறது. இந்தப் புதிய ஆராய்ச்சிக்காக கடந்த 4 வாரங்கள் முன்னோடி இயக்கங்கள் நடத்தப் பட்டன. 27 கி.மீடர் (16.7 மைல்) நீளமான குகை வட்டத்தில் பூமிக்குக் கீழ் 100 மீடர் ஆழத்தில் (328 அடி) செர்ன் விரைவாக்கி இத்தகைய அசுரச் சோதனைகளை ஆராய்ந்து வருகிறது. அலிஸ் என்னும் சாதனத்தில் (ALICE) (A Large Ion Collider Experiment) இந்தப் புது ஆராய்ச்சியில் 30 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1000 பௌதிக விஞ்ஞானிகளும், பொறியியல் நிபுணரும் பங்கெடுக்கிறார்.

அலிஸ் என்னும் அசுர சாதனம் 85 அடி நீளம், 53 அடி அகலம் கொண்டு சுமார் 10,000 டன் எடை உள்ளது. அலிஸ் குறிப்பாக ஈயத்தின் அயனிகளை மோத வைப்பதற்காகத் தயாரிக்கப்பட்டது. இந்தத் துகள் மோதல் சோதனைகளின் குறிக்கோள் "பிள்ளைப் பிரபஞ்சம்" (Infant Universe) எப்படி இருந்தது என்பதை அறிவதற்கே. செர்ன் விரைவாக்கியில் பங்கு கொள்ளும் பிரதம பிரிட்டீஷ் விஞ்ஞானி ஜேம்ஸ் கில்லிஸ் அலிஸ் சாதனமோடு அட்லாஸ் (ATLAS - A Toroidal LHC ApparatuS), சியெம்மெஸ் சாதனங்களும் கன அயனிகளைத் தற்காலியமாக மோத வைத்து ஆராயப் பயன் படுகின்றன என்று சொல்கிறார். அவற்றில் செய்யும் சோதனைகள் 13.7 பில்லியன் ஆண்டுகட்கு முன்னர் பிரபஞ்சம் தோன்றிய சில மில்லி விநாடிக்குப் பிறகு எந்த நிலையில் இருந்தது என்னும் உள்நோக்கைக் (Insight) காட்டும். அப்போது பேரளவுத் திணிவுள்ள நுண்ணிய பிண்ட நிறை வெடித்த பின் பிரபஞ்சத்தில் என்ன விளைவுகள் நேர்ந்தன என்று அறிய உதவும்.


பல்வேறு நிலைகளில் தோன்றும் பிரபஞ்சப் பிண்டம்

பிண்டம் (Matter) பல்வேறு நிலைகளில் தோன்றும். நீரைக் குளிர வைத்தால் பனிக்கட்டி ஆகும். நீரைச் சூடாக்கினால் ஆவியாகும். அதுபோல் ஆய்வுக் கூடத்தில் அணுக்களில் எலெக்டிரான்களை நீக்கிச் சூடாக்கினால் அது பிளாஸ்மா (Plasma - ஒளிப்பிழம்பு) என்னும் ஒரு புதிய நிலை அடைகிறது. அவை எல்லாம் ஒரே உட்கரு கொண்ட பிண்டம்தான். ஆனால் பிரபஞ்சத் தோற்றத்தின் போது இன்னொரு விதப் பிண்டம் இருந்திருக்கலாம். அதைத்தான் பௌதிக விஞ்ஞானிகள் "குவார்க்-குளுவான் பிளாஸ்மா" (Quark-gluon Plasma) என்று குறிப்பிடுகிறார். "செர்ன் ஆராய்ச்சியாளர் அவ்விதப் பிளாஸ்மா பிண்டத்தை உருவாக்க முடிந்து ஆராய்ந்தால், எந்த விதப் பிண்டம் உம்மையும் எம்மையும் உண்டக்கும்," என்று அறிய முடியும் என்று ஜேம்ஸ் கில்லிஸ் கூறுகிறார். செர்ன் பிரிட்டீஷ் விஞ்ஞானிகளில் ஒருவரான டேவிட் எவன்ஸ், "நுண்ணிய பொறிப் பரல்கள் (Tiny Fireballs) மிகச் சிறு மில்லி விநாடிகள் நிலைப்ப தானாலும் அவற்றின் உஷ்ணம் 10 டிரில்லியன் டிகிரி ஆகி (10 Trillion Degree) (One Trillion = 10^12) கன அயனிகளின் அணுக்கருக்கள் உருகி குவார்க்-குளுவான் திண்ணிய குழம்பாக (Dense Soup of Quark & Gluons) மாறிவிடும்," என்று கூறுகிறார்.

"எங்களுக்குப் புல்லரிப்பு ஏற்பட்டது அந்த வெற்றி நிகழ்ச்சியால்," என்று டேவிட் எவன்ஸ் கூறுகிறார். அந்த அணுக்கரு இயக்கம் ஒரு பாதுகாப்பான் சூழ்நிலையில், பேரளவு உஷ்ணத்தில் (10 டிரில்லியன் டிகிரி) திண்ணிய பரமாணுக்களின் பொறி உருண்டைகளை (Dense Sub-atomic fireballs) உண்டாக்கியது. அந்த அசுர உஷ்ணம் பரிதியின் மைய உஷ்ணத்தைப் போல் மில்லியன் மடங்கு மிகையாகும் ! பரிதியின் மையக் கரு உஷ்ணத்தை விட மில்லியன் மடங்கு அளவில் சிறு பெரு வெடிப்பு செர்ன் பரமாணு உடைப்பில் நிகழ்ந்தது. அந்த அசுர வெப்பத்தில் அணுக்கருவில் உள்ள புரோட்டான், நியூட்ரான் போன்ற பரமாணுக்கள் கூட உருகிக் குவார்க்-குளுவான் பிளாஸ்மா எனப்படும் சூடான குழம்பாகி (Soup of Quarks & Gluons known as Quark-gluon Plasma) விடும். இந்த பிளாஸ்மாவை ஆராய்ந்து அணுக்கருவில் பரமாணுக்களை இறுக்கிப் பிணைத்திருக்கும் "வலுவான விசையை" (Strong Force) ஆழ்ந்து அறிவார் விஞ்ஞானிகள். அந்தப் பிணைப்புப் பசையே அவற்றின் 98% நிறைக்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்.


கன அயனிகளை மோத வைக்கும் அலிஸ் சாதனச் சோதனை !

அலிஸ் சாதனம் (ALICE Equipment) செர்ன் விரைவாக்கியில் ஈயத்தின் கன அயனிகளை (Lead Heavy Ions) மோத வைக்க அமைக்கப் பட்டது. செர்ன் வட்டக் குகை பூமிக்குக் கீழ் 100 மீடர் ஆழத்தில் 27 கி.மீ. நீளமுள்ளது. செர்ன் விரைவாக்கியில் பரமாணுக்களை ஒளிவேகத்துக்கு ஒட்டிய வேகத்தில் விரைவாக்க 9300 மின்காந்தச் சாதனங்கள் அமைக்கப் பட்டுள்ளன. மின்காந்தங்கள் வட்டக் குகையில் விண்வெளியின் உஷ்ணத்தில் (-271.3 டிகிரி C) (1.9 F) கணைகளுக்கு வேகமூட்டின. ஏழு டிரில்லியன் எலெக்டிரான் வோல்ட் (7 TeV) சக்தியில் ஒளிவேகத்துக்கு ஒட்டிய வேகத்தில் அவை மோதி இயங்கின. செர்ன் விரைவாக்கி முழுச் சக்தியில் இயங்கும் போது டிரில்லியன் கணக்கான புரோட்டான்கள் வட்டக் குகையில் 99.99% ஒளிவேகத்தில் விநாடிக்கு 11,245 தடவை சுற்றி வரும். ஒரு விநாடியில் 600 மில்லியன் மோதல்கள் நிகழக் கூடும். செர்ன் சிறு பெரு வெடிப்புச் சோதனைக்கு கன அயனிகளை மோத வைக்க அட்லாஸ் சாதனமும் (ATLAS), சியெம்மெஸ் (CMS) சாதனமும் பயன்பட மாற்றம் செய்யப் பட்டன. அடுத்து 4 வாரங்கள் செர்னில் விஞ்ஞானிகள் 2010 நவம்பர் 8 ஆம் தேதியில் சிறு பெரு வெடிப்பு மோதல்களில் கிடைத்த தகவல் இலக்கத்தை (Data) ஆழ்ந்து ஆராய்வார். அவற்றில் பிரபஞ்சம் தோன்றிய பிழம்பைப் (Plasma from Which the Universe Came) பற்றி அறிய முடியும். 13.7 பில்லியன் ஆண்டுகட்கு முன்னிகழ்ந்த பெரு வெடிப்புக்குப் பிறகு சில மில்லியன்த் விநாடிகளில் உண்டான காட்சியைப் பற்றிய விளக்கம் கிடைக்கும்.


குவார்க்ஸ், குளுவான் ஆகியவை அணுக்கருவில் உள்ள புரோட்டான், நியூட்ரான்களை உண்டாக்கும் அடிப்படைப் பரமாணுக்கள். புரோட்டான், நியூட்ரான் போல குவார்க், குளுவான் பரமாணுக்கள் தனியாக நிலைத்துக் காணப்படுபவை அல்ல. அவை பிணைந்து எப்போதும் புரோட்டான், நியூட்ரான் உருவில்தான் உலவுகின்றன. குவார்க்குகள், குளுவான்களே பிண்டத்தை வடிக்கும் அடிப்படைத் துகள்கள். புரோட்டான் நியூட்ரான் ஒரு மில்லியன் பரிதி உட்கரு உஷ்ணத்தில் உருகிய பிளாஸ்மா நிலையில் (Quark-Gluon Plasma) குவார்க்குகள், குளுவான்களாகத் தனியே விடுவிப்பாகி அவற்றின் கவர்ச்சி விசையிலிருந்து அறுபடுகின்றன. இம்மாதிரிக் குவார்க்-குளுவான் பிளாஸ்மா (துகள் ஒளிப்பிழம்பு) 13.7 மில்லிய ஆண்டுகட்கு முன் நிகழ்ந்த பெரு வெடிப்புக்குப் பிறகு உடனே விளைந்ததாகக் கருதப் படுகிறது.

பிரபஞ்சப் புதிர்களை விடுவிக்கும் புதுச் சாதனம் செர்ன் விரைவாக்கி

செர்ன் செய்து காட்டும் சோதனையில் விண்வெளியில் இணைப் பிரபஞ்சம் (Parallel Universe) ஒன்றிருப்பதைக் காட்டலாம் ! பிரபஞ்சத்தின் முதற் காட்சியைத் திரையிட்டுக் காட்டலாம். புதிய நூற்றாண்டின் நூதனக் கண்டுபிடிப்பான நுண் கருந்துளையை (Nano-Blackholes) உருவாக்கிக் காட்டலாம் ! சில விஞ்ஞானிகள் அவ்விதம் நுண் கருந்துளைகள் உண்டாக்க செர்ன் அசுர விரைவாக்கிக்கு ஆற்றல் போதாது என்று கூறுகிறார் ! ஆனால் ஓர் இணைப் பிரபஞ்சம் இருக்குமானால் மிகைப்பட்ட ஈர்ப்பாற்றல் கிடைத்து நுண் கருந்துளைகள் உருவாகலாம் என்றும் கருதப்படுகிறது. பல்வகைப் பிரபஞ்ச நியதிப்படி (Multiverse Theory) நமது பிரபஞ்சத்துக்கு மிக்க அருகில் அடுத்தோர் பிரபஞ்சம் இருக்கலாம் என்று அனுமானம் செய்கிறது. இந்தக் கோட்பாடு பிரபஞ்சத்தில் 96% இருப்பாக உள்ள கருஞ்சக்தி, கரும் பிண்ட (Dark Enerrgy & Dark Matter) உற்பத்திக்குக் காரணமாகும் ஈர்ப்பாற்றல் கசிவு போன்ற சில விளைவுகளுக்குப் பொறுப்பேற்றும் விளக்கம் அளிக்கலாம்.

நமது பால்வீதியும் பேரடுக்கு ஒளிமந்தைக் கொத்துக்களும் (Milkyway Galaxy & Super-Clusters of Galaxies) கொண்ட பிரம்மாண்டமான விண்வெளிக் கொள்ளளவு கண்ணுக்குப் புலப்படாத ஏதோ ஒரு பூதக் கவர்ச்சி நிறையின் (The Great Attractor) இழுப்பை நோக்கிப் போய்க் கொண்டுள்ளது. அந்தக் கவர்ச்சி நிறை பரிதி மண்டலத்திலிருந்து சுமார் 250 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ளது ! பால்வீதி காலக்ஸியிலிருந்து 2.2 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ள ஆன்றோமெடா காலக்ஸி (Andromeda Galaxy) பால்வீதி நோக்கி மணிக்கு 200,000 மைல் வேகத்தில் நெருங்கிக் கொண்டு வருகிறது ! இம்மாதிரிக் கவர்ச்சி ஈர்ப்பாற்றல் இழுப்பாகத்தான் இருக்க முடியும். ஆனால் நமக்கு தெரிந்த அவ்வித இழுப்புக்கு ஏற்ற நிறை அங்கே இல்லை. அதாவது பத்து பால்வீதி அளவுக்குச் சமமான ஏதோ ஒரு புலப்படாத நிறை இரண்டு காலக்ஸிகளுக்கும் இடையே இருந்து ஆன்றோமெடா ஒளிமந்தை நகர்ச்சியை இயக்கி வருகிறது.

பிரபஞ்சத்தில் பெரும்பான்மையாக இருப்பது கண்ணுக்குப் புலப்படாத 96% கருஞ் சக்தியும், கரும் பிண்டமும் (Dark Energy & Dark Matter) என்று விஞ்ஞானிகள் கருதுகிறார். எறும்பிலிருந்து காலக்ஸி வரை நாம் பிரபஞ்சத்தில் காணும் அனைத்தும் சில அடிப்படைத் துகள்களால் உருவாக்கப் பட்டவை. அவற்றை தொகுத்து பிண்டம் என்று குறிப்பிடுகிறோம். அந்த நிறை பிரபஞ்சத்தில் 4% அளவே. மீதம் பிரபஞ்சத்தில் இருக்கும் 96% நம் கண்ணுக்குப் புலப்படாத கருஞ்சக்தியும், கரும் பிண்டமும் என்று கருதப் படுகிறது. ஆனால் அத்தகைப் பேரளவு நிறையும் சக்தியும் நேரடியாகத் தெரிவதில்லை. அவற்றை உளவிக் காணுவது அரிது. அவற்றின் ஈர்ப்பு விசையை மட்டும் அறிய முடிகிறது. கருச்சக்தி காலக்ஸிகள் துரிதமாய் விரைவாக்கம் செய்வதை வைத்து அறியப் படுகிறது. ஆயினும் கரும் பிண்டத்தையும் கருஞ்சக்தியையும் உளவி அறிவது சவாலான அகிலவியல் விஞ்ஞானமாகவும் துகள் பௌதிகமாகவும் (Cosmology & Particle Physics) தெரிகிறது. அட்லாஸ், சி.எம்.எஸ் சோதனைகள் பெரும் சீர்வடிவத் துகள்களைத் (Supersymmetric Particles) தேடிக் கரும்பிண்டம் கட்டமைப்பு நியதியை ஆராயும். செர்ன் விரைவாக்கி பிரச்சனை எதுவும் எழாமல் சீராக இயங்கினால் சோதனைகள் 2011 இறுதிவரைத் தொடர்ந்து ஓராண்டு நிறுத்தமாகி பராமரிப்பு வேலைகளில் செம்மைப் படுத்த முனையும்.

தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.

1 CERN Large Hadron Collider - Particle Physics - A Giant Takes on Physics' Biggest Question By : The New York Times (May 15, 2007)
2 CERN Fires up the New Atom Smasher to Near Big Bang By : Alexander Higgins [Sep 7, 2008]
3 World's Largest Atom Smasher (CERN) Completion [March 26, 2008]
4. Time Magazine Report - The Moment [September 10, 2008] Geneva [Sep 22, 2008]
5 CERN Atom Smasher - Latest Wikipedia Report.

திங்கள், 8 நவம்பர், 2010

வால்மீன் ஹார்ட்லியைச் சுற்றி ஆராய்ந்த நாசாவின் விண்ணுளவி

காலவெளிப் பிரபஞ்சத்தில்
வால்மீன்கள்
வைர ஒளிவீசும் விந்தையாய் !
பரிதி ஈர்ப்பு வலையில்
ஈசலாய்த்
திரிபவை வால்மீன்கள் !
வையகத்தில் உயிரினம் வளர
விதையிட்டவை !
பரிதியை நெருங்கும் போது
வால்மீனின்
நீண்ட ஒளிவால்
நமது பூமியைத் தொடுமென
நர்லிகர் கூறுகிறார் !
வால்மீனில் விந்தையாய்
சையனைடு
வாயுக்கள் வெளியேறும் !
வால்மீனில் எழுந்திடும்
வாயுத் தூள்களை
வடிகட்டிப் பிடித்து வந்தோம் !
வால்மீன்
வயிற்றில் அடித்து
உட்கருவை ஆய்ந்தது
ஓர் விண்ணுளவி !
அதே ஆழ்மோதி விண்கப்பல்
அடுத்தோர்
வால்மீனைச் சுற்றி வந்து
ஆராயும் இப்போது !
"நாசா எபாக்ஸி விண்ணுளவியை அனுப்பி வால்மீன் ஹார்டிலியை வெற்றிகரமாகச் சுற்ற வைத்து, தனது சூரிய மண்டல முன்னோடி ஆய்வுத் தேடலை நீடித்தது. அப்போது விண்ணுளவி மணிக்கு 27,000 மைல் வேகத்தில் சுற்றி வந்து பிரமிக்கத் தக்க புதிய வால்மீன் படங்களை அனுப்பியுள்ளது."


சார்லஸ் போல்டன் (NASA Administrator)


"ஆரம்ப நோக்குகளில் முதன்முதலாக விண்ணுளவி வால்மீனின் தனித்துவ உட்கருவை உளவ முடியும் என்று அறிந்தோம். படத் தகவல் நிரம்ப சேமித்துள்ளோம் இப்போது. அவற்றில் நாங்கள் எதிர்பார்த்தபடி வால்மீன் பற்றிய அரிய தகவல் உள்ளன."


மைக்கேள் அ'ஹார்ன் (NASA's Spacecraft EPOXI Pricipal Investigator)
"ஹார்ட்லி வால்மீனின் உடலிலிருந்து வெகு வேகத்தில் வெளியேறும் சையனடு வாயு வீச்சே (Cyanide Jet - CN) அதன் உட்கருச் சுழற்சியை (Comet Nucleus Spin) மாற்றுகிறது."


நளின் சமரஸின்ஹா, வானியல் விஞ்ஞானி (National Observatory, Tucson, USA)


"விண்ணுளவி எபாக்ஸி வரலாற்றுப் பெருமை தரும் வால்மீன் ஒன்றின் புது நோக்குத் தகவலை அனுப்பியுள்ளது. விஞ்ஞானிகளும், பொறியியல் நிபுணரும் உயர்தர விஞ்ஞான நுணுக்கத்தில் பழைய விண்ணுளவிக்குப் புத்துயிர் நீட்சி அளித்து, சிறிதளவு நிதிச் செலவில் ஒரு புதிய விஞ்ஞானத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளார்."


எட்வேர்டி வெய்லர் (NASA Science Mission Directorate)


"டெம்பெல் வால்மீனுக்குக் கிடைத்த அடி ஒரு பேரடி மட்டுமன்று! நாங்கள் நெடுங்காலமாய் வாதித்து வரும் ஆய்வுரைகளுக்கு ஓர் அரிய சோதனையாகவும் ஆயிற்று! வால்மீன்கள் வெறும் குப்பைப் புழுதி கொண்டவை அல்ல! அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் பனித்தளக் கட்டிகளின் களஞ்சியமும் அல்ல! கரித் தூள்கள் நிரம்பிய மேற்தட்டுக்கு அடியே துளைகளுள்ள ஆர்கானிக்ஸ் பிண்டமும் (Porous Organic Mass), உறைந்த பனித்தளமும் அமைந்திருப்பதை வால்மீனின் ஆழ்மோதிச் (Deep Impact) சோதனை நிரூபித்துக் காட்டும்."


டாக்டர் சந்திரா விக்கிரமசிங், பேராசிரியர் கார்டி•ப் பல்கலைக் கழகம், இங்கிலாந்து
“வால்மீன்களைப் பற்றி ஏன் அறிந்து கொள்ள வேண்டும்? வால்மீன்களை விண்வெளியில் ஏன் உளவு செய்ய வேண்டும்? காரணம்: பரிதி மண்டலத்தில் திரியும் வால்மீன்களே பிரபஞ்சத்தின் பூர்வீகக் கோள்கள் என்று கருதப் படுகின்றன! அவற்றில் காணப்படும் பிண்டப் பொருட்களில்தான் அனைத்து அண்ட கோள்களும், பரிதியும் ஆக்கப் பட்டுள்ளன என்று ஊகிக்கப் படுகிறது! ஆழ்மோதல் திட்டம் [Deep Impact Project] உயிரினத் தோற்றத்தின் ஆரம்ப உதயத்தை ஆராய உதவும். இதுவரைச் செய்யாத, துணிச்சலான, புத்துணர்வு மூட்டும், ஒரு பரபரப்பான முதல் விஞ்ஞான முயற்சி, அது!”


ஆண்டிரூஸ் டான்ஸ்லர் [Acting Diretor, Solar System Division, NASA]


"பணித்திட்ட வேலைகள் கடிகார வேலை போல அடுத்தடுத்துச் சீராக நிறைவேறின! விண்சிமிழ் எந்தவிதச் சேதமில்லாமல் பாலை மண்ணில் இன்று காலையில் காணப் பட்டது எங்களுக்கு மிக்க பூரிப்பை அளிக்கிறது. 2004 செப்டம்பரில் மாதிரி எடுத்து வந்த ஜெனிஸிஸ் விண்சிமிழ் [Genesis Capsule] குடை விரிக்காமல் போனதால் தரையில் மோதி உடைந்து போனது. அது பெருத்த ஏமாற்றம் அளித்தாலும், அத்தோல்வி மூலம் நாங்கள் கற்றுக் கொண்டவை அநேகம்."


தாமஸ் டக்ஸ்பரி பணித்திட்ட மேலதிகாரி [Thomas Duxbury, Mission Project Manager (ஜனவரி 15, 2006)]
"வால்மீன் ஒன்றைக் காணச் சென்றோம். அதன் துணுக்கு மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்து வந்திருக்கிறோம். இந்த விண்சிமிழின் உள்ளே இருப்பது எங்கள் விஞ்ஞானக் களஞ்சியம்! பரிதி மண்டலத்தின் விளிம்பிலிருக்கும் மெய்யான வால்மீன் துணுக்குகளின் மாதிரிகளைக் கொண்டு வந்துள்ளது ஸ்டார்டஸ்ட் விண்சிமிழ்!


டொனால்டு பிரௌன்லீ பணித்திட்ட பிரதம ஆய்வாளி [Donald Brownlee, Mission Principle Investigator (ஜனவரி 15, 2006)]


"ஸ்டார்டஸ்ட் விண்சிமிழ் யூடா பாலை மணலில் பாதுகாப்பாய் வந்திறங்கியது ஒரு மகத்தான விண்வெளி வெற்றிச் சாதனை! பரிதி மண்டல அண்டங்களின் தோற்ற அறிவைப் பெருக்கப் போகும் ஒரு மாபெரும் குறிப்பணி அது!"


கார்ல்டன் அல்லன் விஞ்ஞானி, நாசா ஜான்ஸன் விண்வெளி மையம் [Carlton Allen]


"பறவைகள் ஏன் பாடுகின்றன என்று நாம் கேட்பதில்லை! பாடிப் பரவசம் அடையத்தான் அவை படைக்கப் பட்டுள்ளன! அதுபோல மனிதனின் வேட்கை மனம் அண்ட கோளங்களின் புதிர்களை ஆழமாய் ஏன் உளவிச் செல்கிறது என்று கேட்கக் கூடாது! ... பல்வேறாக இயற்கை நியதிகள் பேரளவில் வழிய, சீரிய ஒழுக்க முறையில் இயங்கும் அண்ட கோள்களின் புதிர்க் களஞ்சியங்கள் செழுமையாய்க் கொட்டிக் கிடக்க, புத்துயிர் பெற்று ஆர்வமுடன் கிளம்பும் மானிடத் தேடல் மனத்துக்குப் பஞ்சமே யிருக்காது."


ஜொஹானெஸ் கெப்ளர், விண்வெளி விஞ்ஞானி [பிரபஞ்சத்தின் புதிர்கள்]

வால்மீனைச் சுற்றிவந்த நாசாவின் விண்ணுளவி


2010 நவம்பர் 4 ஆம் தேதி நாசாவின் எபாக்ஸி விண்ணுளவி (EPOXI Spacecraft) 1.4 மில்லியன் மைல் தூரத்தில் பயணம் செய்த ஹார்ட்லி 2 வால்மீனின் (Comet Hartley 2) திசை நோக்கித் திருப்பப் பட்டு அதை 435 மைல் தொலைவில் நெருங்கிச் சுற்றி அரிய புதிய படத் தகவல் பல அனுப்பியுள்ளது. முதன்முதலாக வால்மீன் ஹார்ட்லியிலிருந்து சையனைடு (Cyanide Jet - CN) நச்சு வாயு வெளிவருவதை எபாக்ஸி விண்ணுளவி படத்துடன் காட்டியது. மணிக்கு 27,500 மைல் வேகத்தில் பரிதியைச் சுற்றும் ஹார்ட்லியின் நீளம் 1.36 மைல் (2.2 கி.மீ) என்றும் அறிய முடிந்தது. "ஆழ்மோதி" (Deep Impact) என்னும் பெயர் பெற்ற அந்தப் பழைய விண்ணுளவி ஏற்கனவே 2005 ஜூலை 4 ஆம் தேதி டெம்பல் 1 (Tempel 1) என்னும் வால்மீனில் முதன்முதல் ஓர் எறிகணையை வீசி அதன் உட்கலவைகளை ஆராய்ந்தது. 2010 ஜூன் 27 ஆம் தேதி விண்ணுளவி எபாக்ஸி பூமியைச் சுற்றி ஈர்ப்பாற்றல் சுழல்வீச்சில் (Flyby Swing) 3470 mph (விநாடிக்கு 1.5 கி.மீ.) வேகம் அதிகரித்து வால்மீன் ஹார்ட்லியை நோக்கிச் சென்றது.
ஐந்தாண்டு பூமியைச் சுற்றிக் கொண்டிருந்த பழைய ஆழ்மோதியின் குறிப்பணி நீட்சி செய்யப் பட்டு இப்போது இரண்டாவது வால்மீன் ஹார்ட்லியை வலம் வந்தது. "எபாக்ஸி விண்ணுளவியை நாசா அனுப்பி வால்மீன் ஹார்டிலியை வெற்றிகரமாகச் சுற்ற வைத்து, தனது சூரிய மண்டல முன்னோடி ஆய்வுத் தேடலை நீடித்தது. அப்போது விண்ணுளவி மணிக்கு 27,000 மைல் வேகத்தில் சுற்றி வந்து பிரமிக்கத் தக்க புதிய வால்மீன் படங்களை அனுப்பியுள்ளது." என்று நாசா ஆளுநர் சார்லஸ் போல்டன் கூறுகிறார்.


நாசா பொறியியல் நிபுணர் ஏற்கனவே கணித்தபடி வால்மீனுக்கு 435 மைல் தூரத்தில் எபாக்ஸி விண்ணுளவி வலம் வந்தது குறிப்பிடத் தக்கது. நாசா இட்ட "எபோக்ஸி" (EPOXI) என்னும் புதிய பெயர் இரண்டு பழைய திட்டப் பெயர்களை இணைத்துச் சுருக்கியது. ஆழ்மோதி விண்கப்பலின் திட்டப் பணி இரண்டு : முதலாவது திட்டப் பணி புறப் பரிதி மண்டலக் கோள்களைத் தேடி அவற்றின் இயற்கைப் பண்பாடுகளை அறிவது (Extrasolar Planet Observations & Characterization - EPOCh). இரண்டாவது திட்டப் பணி ஆழ்மோதி வால்மீன் ஒன்றில் எறிகணை ஏவி எழும் தூசி, துணுக்குகளை ஆராய்வது (Deep Impact Extended Investigation -DIXI).


மூன்றாவது திட்டப் பணி ஹார்ட்லி நோக்கிப் போகும் தற்போதைய நீட்சிக் குறிக்கோள் ஆகும். அதன் குறிக்கோள் வால்மீன் ஒன்றைச் சுற்றி விண்கப்பல் ஈர்ப்பியல் விரைவாக்கம் (Gravity Flyby Swing) அடைவது. (EPOCh) + (DIXI) ---> (EPOXI) என்று அதனால் மூன்றாவது பயணத்துக்குப் பெயரிடப் பட்டது. புதிதாகக் கிடைத்த வால்மீன் படங்களில் நமது சூரிய மண்டலம் எப்படி தோன்றியது என்பதற்கு மூல ஆதாரங்கள் கிடைக்க உதவலாம் என்று வானியல் விஞ்ஞானிகள் கருதுகிறார். இந்த மூன்று வால்மீன் ஆய்வுப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கம் மொத்தம் 333 மில்லியன் டாலர் (2005 நாணய மதிப்பு).
நாசாவின் சூரிய குடும்ப வால்மீன்கள் ஆராயும் திட்டங்கள்
4.5 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு உண்டான சூரிய மண்டலத்திலே ஒருவிதப் பனிக்கட்டி எச்சமாகத் தோன்றியவை வால்மீன்கள் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார். அவற்றை ஆராய்ந்தால் பூமி போன்ற அண்டக் கோள்கள் எப்படி உருவாயின என்று நாம் அறியலாம். ஹார்ட்லியைச் சேர்த்து இதுவரை ஐந்து வால்மீன்களை ஆழ்ந்து நோக்கித் தகவல் சேமித்துள்ளது நாசா. பூமியிலிருந்து ஹார்ட்லி வால்மீன் 13 மில்லியன் மைல் தூரத்தில் இருந்த போது நாசாவின் புதிய திட்டம் ஆரம்பமானது.
2005 இல் ஆழ்மோதி டெம்பல் 1 மோதலுக்குப் பின் நாசா 2008 இல் அடுத்து வால்மீன் போதின் (Comet Boethin) மீது குறி வைத்தது. ஆனால் எதிர்பார்த்தது போல் வால்மீன் போதின் விண்வெளியில் திடீரெனக் காணப்படாமல் போனது ! காரணம் அது உடைந்து சிதைந்து போயிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார். அடுத்து பூமியைச் சுற்றும் எபாக்ஸி விண்ணுளவி திசை மாற்றம் செய்யப் பட்டு வால்மீன் ஹார்ட்லி 2 மீது குறிவைக்கப் பட்டது. அத்திட்டம் 2010 நவம்பர் 4 ஆம் தேதி வெற்றிகர நிறைவேறியது. அப்போது எபாக்ஸி விண்கப்பல் ஹார்ட்லியைப் பற்றி புதிய படத் தகவல் பல அனுப்பியது. இதுவரை ஆழ்ந்து நோக்கியதில் ஹார்ட்லியே மிகச் சிறிய வால்மீன். அதன் அகலம் 1.5 மைல் விண்கப்பல் வலம் வரும் போது அதன் தூரம் பூமியிலிருந்து 13 மில்லியன் மைல். 1986 இல் பிரிட்டீஷ் வானியல் விஞ்ஞானி மால்கம் ஹார்ட்லி என்பரால் ஹார்ட்லி 2 வால்மீன் முதன்முதலில் கண்டுபிடிக்கப் பட்டது.
நாசா & ஈசாவின் முப்பெரும் விண்வெளித் திட்டங்கள்

இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் நாசாவின் முப்பெரும் விண்வெளித் திட்டங்கள் தயாராகி, அமெரிக்க அரசின் ஆசியைப் பெற்றன. முதல் திட்டம், விண்மீன்தூசி [Stardust]. இரண்டாம் திட்டம், ரோஸெட்டா [Rosetta]. மூன்றாம் திட்டம், ஆழ்மோதி [Deep Impact]. முதல் திட்டப்படி நாசாவின் ஏவுகணை தூக்கிச் செல்லும் எறிகணை, வால்மீன் ஒன்றின் பனிமுகில் [Coma -the Cloud of Ice] ஊடே நுழைந்து, அதன் மாதிரிகளை எடுத்துக் கொண்டு பூமிக்கு மீளும். அத்திட்டம் 2006 ஜனவரி 15 இல் முடிந்து, வால்மீனின் பனித்துணுக்கு மாதிரிகள் பாராசூட் குடையில் வந்திறங்கியது. ரோஸெட்டா வென்னும் இரண்டாம் திட்டத்தில் ஈசா [European Space Agency (ESA)] 2004 மார்ச் 2 ஆம் தேதியில் அனுப்பிய விண்சிமிழ் ஒரு வால்மீன் கருமீது [Comet Nucleus] இறங்கித் தடம் பதித்து தளத்தின் உட்கலவைப் பண்டங்களையும், அமைப்பையும் உளவு செய்தது. அத்துடன் வால்மீனின் ஆதிகாலத் தோற்றத்தை அறிந்து, பிரபஞ்சத்தின் அண்டங்களையும், பரிதியின் மண்டலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க விளக்கம் அளித்தது.. மூன்றாவது திட்டம்தான் -"ஆழ்மோதி" எனப்படும் நாசாவின் தற்போதைய வால்மீன் தாக்குதல் பயணம். 2005 ஜூலை மாதம் வால்மீன் ஆழ்மோதி உளவுத் திட்டத்தை (டெம்பல் 1 வால்மீன் மீது எறிகணை ஏவல்) நாசா வெற்றிகரமாகச் செய்து காட்டியது.
சுவீடன் துணைக்கோள் வால்மீன் ஹார்ட்லியில் நீர் உற்பத்தியைக் கண்டுபிடித்தது.

2010 அக்டோபர் 29 இல் சுவீடனின் துணைக்கோள் ஓடின் (Odin Satellite) வால்மீன் ஹார்ட்லியில் நீர் இருக்கும் தளப் படத்தை எடுத்து அனுப்பியது. ஓடின் துணைக் கோள் பூமியைச் சுற்றி வரும் ஒரு சிறிய துணைக்கோள். சுவீடன் கனடா, பிரான்ஸ், பின்லாந்து ஆகிய நாடுகளின் உதவியில் 2001 பிப்ரவரி 20 இல் துணைக்கோளை அமைத்தது. இதுவரை ஓடின் துணைக்கோள் 15 வால்மீன்களை நோக்கிப் படம் எடுத்துள்ளது. ஓடின் படம் அனுப்புதல் நிகழ்ச்சி அக்டோபர் 29 முதல் நவம்பர் முதல் தேதி வரை நீடித்தது. துணைக் கோளின் நோக்குகளில் விநாடிக்கு 180 முதல் 300 கி.கிராம் (400 - 600 பவுண்டு) உற்பத்தியாகும் பகுதிகள் தெரிந்தன. வியப்பாக வால்மீனில் நீர் உற்பத்தி அளவு நேரத்துக்கு நேரம் வேறுபட்டது. மேலும் நீர் உற்பத்தி வால்மீனின் உட்கரு சுழற்சியைச் (Rotation of Comet's Nucleus) சார்ந்தது என்பதும் அறியப் பட்டது. வால்மீனின் உட்கருச் சுழற்சி ஒரு சுற்றுக்கு 17 மணி நேரம் எடுத்தது (One Rotation took 17 Hours) !
ஹார்ட்லி வால்மீனில் சையனைடு நச்சு வாயு வெளியேற்றம் !

பூதக்கோள் வியாழன் குடும்பத்தைச் சேர்ந்த வால்மீன் ஹார்ட்லி 6.5 ஆண்டுக்கு ஒருமுறை வீதம் பரிதியை நீள்வட்டத்தில் சுற்றி வருகிறது. ஹார்ட்லி வால்மீன் 2010 அக்டோபர் 28 இல் பரிதியிலிருந்து நீள் ஆரம் (Perihelion) 98 மில்லியன் மைல் (158 மில்லியன் கி.மீ) தூரத்தில் இருந்தது. அக்டோர் 20 இல் பூமிக்கு அருகே வால்மீன் ஹார்ட்லி 11 மில்லியன் மைல் (18 மில்லியன் கி.மீ) தூரத்தில் வந்தது. அப்போதுதான் நாசா பூமியைச் சுற்றிய எபாக்ஸி விண்கப்பலை ஹார்ட்லி வால்மீனை நோக்கித் திசை திருப்பியது. விந்தையாக முதன் முதலாக ஹார்ட்லி 2 வால்மீனிலிருந்து நச்சு வாயு சையனைடு (Cyanide Jet - CN) வெளியேறுவதை நாசாவின் எபாக்ஸி விண்ணுளவி கண்டுபிடித்தது. "வால்மீன் ஹார்ட்லி உடலிலிருந்து வெகு வேகத்தில் வெளியேறும் சையனைடு வாயு வீச்சே (Cyanide Jet - CN) அதன் உட்கருச் சுழலற்சியை மாற்றுகிறது." என்று வானியல் விஞ்ஞானி நளின் சமரஸின்ஹா கூறுகிறார். வால்மீன் பரிதியைக் குறு ஆரத்தில் நெருங்கும் போது அதன் ஒளிவீசும் நீண்ட வால் பல மில்லியன் மைல் தூரம் உலவுகிறது என்று இந்திய விஞ்ஞானி ஜெயந்த் நர்லிகர் கூறுகிறார். அதாவது 2010 அக்கோடபர் - நவம்பரில் ஹார்ட்லியின் நீண்ட வால் நமது பூமியைத் தொட்டிருந்தால் அதன் சையனைடு நச்சு வாயு எங்கெல்லாம் பரவி உள்ளது, அதன் கோர விளைவுகள் என்ன என்பது இனிமேல்தான் தெரிய வரும் !
வால்மீனைப் பற்றி நாசா, ஈசா நிகழ்த்திய விண்வெளி ஆய்வுகள்

இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் நாசாவின் முப்பெரும் விண்வெளித் திட்டங்கள் தயாராகி, அமெரிக்க அரசின் உத்தரவைப் பெற்றன. முதல் திட்டம், விண்மீன்தூசி [Stardust]. இரண்டாம் திட்டம், ரோஸெட்டா [Rosetta]. மூன்றாம் திட்டம், ஆழ்மோதல் [Deep Impact]. முதல் விண்மீன்தூசித் திட்டப்படி நாசாவின் ஏவுகணை தூக்கிச் செல்லும் வடிகட்டி, வால்மீன் ஒன்றின் பனிமுகில் [Coma -the Cloud of Ice] ஊடே நுழைந்து, அதன் மாதிரிகளை எடுத்துக் கொண்டு பூமிக்கு மீளும்! அத்திட்டம் 2006 ஜனவரியில் முடிந்து, வால்மீனின் பனித்துணுக்கு மாதிரிகள் பாராசூட் குடை மூலம் பூமியில் வந்திறங்கும்! ரோஸெட்டா வென்னும் இரண்டாம் திட்டத்தில் ஈசா [European Space Agency (ESA)] 2004 மார்ச் 2 ஆம் தேதியில் அனுப்பிய விண்சிமிழ் ஒரு வால்மீன் கருமீது [Cometary Nucleus] இறங்கித் தடம் பதித்து தளத்தின் பண்டங்களையும், அமைப்பையும் உளவு செய்யும். அத்துடன் வால்மீனின் ஆதிகாலத் தோற்றத்தை அறிந்து, பிரபஞ்சத்தின் அண்டங்களையும், பரிதியின் மண்டலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க விளக்கம் அளிக்கும். 2005 ஜூலை மாதத்தில் மூன்றாவது திட்டமான வால்மீன் ஆழ்மோதல் உளவுத் திட்டத்தை நாசா வெற்றிகரமாகச் செய்து காட்டியது.

2005 ஜூலை 4 இல் அமெரிக்கா 333 மில்லியன் டாலர் நிதியைச் செலவு செய்து, 370 கிலோ கிராம் விண்ணுளவியை [Space Probe] அண்ட வெளியில் அனுப்பி, டெம்பெல்-1 என்னும் வால்மீனை [Comet: Tempel-1] வயிற்றில் அடித்துப் பெரும் வெடிப்பொளியைக் கிளப்பி வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. அந்தப் பேரடி வால்மீனைப் பிளக்க முடியா விட்டாலும், ஆராய்ச்சி செய்ய ஒரு பெரும் வட்டக்குழியை உண்டாக்கி விட்டது ! அந்த வெடிப்பில் குப்பென வெளியேறிய நீர்மைத் துளிகள், வாயுக்கள், அகிலத் தூசிகள் அனைத்தும் ஆராயப்பட்டன். இதுவரை வால்மீன் மீது இம்மாதிரி விண்வெளியில் ஓர் அசுர சாதனை செய்யப்பட வில்லை ! பரிதி மண்டலத்தில் பயணம் செய்யும் ஒரு வால்மீனை இத்தனை அருகில் சென்று காயப்படுத்தித் துணுக்குகளையும், வாயுக்களையும் வெளியேற்றிய தில்லை! எறிகணை மோதி வால்மீனில் ஒளிக்கனல் பற்றியதை ஹப்பிள் தொலைநோக்கியும் [Hubble Telescope] படமெடுத்து அனுப்பி யுள்ளது!


பூமியில் உயிரினப் பயிரின மூலத்தைத் தெளித்த வால்மீன்கள்

பூமியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பயிரினங்கள், உயிரினங்கள் ஆகியவை தோன்றுவதற்கு வேண்டிய ஆர்கானிக் மூலவிகளைப் புவிமீது கொட்டியவை வால்மீன்கள் என்னும் கருத்தை வானியல் விஞ்ஞானிகள் கூறி வருகிறார்கள். 3.9 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக வால்மீன்கள், சிற்றுருவக் கோள்கள் [Asteroids] ஆகியவைப் பெருமளவில் மோதிச் சிதைவாகி நின்று போன காலநிலை வந்தது என்று அண்டக் கோள்களின் வரலாற்றுப் பதிவுகளில் காணப்படுகிறது. ஏறக்குறைய அதே யுகத்தில்தான் புவியில் உயிரினமும், பயிரினமும் தோன்றின என்றும் ஊகிப்படுகின்றது. நீர்க் களஞ்சியமும், கார்பன் சார்ந்த மூலக்கூறுகளும் [Carbon Based Molecules] பேரளவில் சேமித்துள்ள வால்மீன்கள், முன்பு ஒரு காலத்தில் பூகோளத்துக்கு வாரி வாரி வழங்கி வந்துள்ளன என்று வானியல் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். வால்மீன்களில் எடை நிறையில் 50% நீர், (10%-20%) கார்பன் சார்ந்த பண்டங்கள் இருக்கலாம் என்று தற்போது ஊகிக்கப் படுகிறது. வால்மீன்கள் இவ்விதம் பூமியில் உயிரனங்கள், பயிரினங்கள் ஆகிய வற்றைத் தோற்றுவிக்கும் படைப்புக் கோள்களாக இருந்திருக்கலாம் என்பதை ஸ்டார்டஸ்ட் விண்சிமிழ் பிடித்து வந்த மாதிரிகள் நிரூபிக்க உறுதியான வாய்ப்புகள் உள்ளன ! பிரபஞ்சத்தில் மர்மமான வால்மீன்களை நாசாவும், ஈசாவும் தொடர்ந்து மேலும் ஆராய்ச்சிகள் செய்யும். 2011 இல் நாசாவின் பழைய விண்ணுளவி ஸ்டார்டஸ்ட் (Stardust Spacecraft) 2005 இல் எறிகணை தாக்கிய டெம்பெல் 1 வால்மீனை நோக்கி ஆராயச் செல்லும்.
தகவல்:

[Picture Credits: NASA Space Center, USA]

1. The Stardust Mission, Silicone Chip Online-NASA Mission, To Catch a Comet [Jan 15, 2006] [www.siliconchip.com.au/cms]
2. Stardust: How to Bring Home a Comet [http://stardust.jpl.nasa.gov/science/feature002.html] [Jan 15, 2006]
3. Public to Look for Dust Grains in Stardust Detectors By: Robert Sanders [Jan 10, 2006] [www.berkeley.edu/news/media/releases/2006/01/10_dust.shtml]
4. Stardust Comet Sample Program [www.astronautix.com/craft/stardust.htm]
5. Genesis Capsule Crash, Space Capsule Slams into Desert [www.abc.net.au/egi-bin] [Sep 9, 2004]
6. Space Capsule Carrying Comet Dust Returns to Earth [http://usatoday]
7. NASA - The Fiery Return of NASA's Space Dust Cargo [Nov 29, 2005]


திங்கள், 1 நவம்பர், 2010

நிலவின் இருண்ட துருவக் குழிகளில் பனிநீர் ஏரிகள் இருப்பதை நாசா உறுதிப் படுத்தியது !

நிலவின் துருவங்களில்
நீர்ப்பனி ஏரிகள்
இருப்பதாய் நாசா நிபுணர்
தெரிவிக்கிறார் !
குடிநீரை விண்கப்பலில்
கொண்டு செல்வது
கோடி கோடிச் செலவு !
மறைமுகமாய் நீர்ப்பனிப் பாறைகள்
பல யுகங்கள்
உறைந்து கிடக்கும்
பரிதி ஒளி படாமல் !
எரிசக்தி உண்டாக்கும்
அரிய ஹைடிரஜன்
சோதனை மோதலில் வெளியேறும் !
செவ்வாயிக்குச் செல்லும்
பயணிகட்குத்
தங்குமிடம் அமைக்க
வெண்ணிலவில் பனிப்பாறைத்
தண்ணீர் வசதி !
எரிசக்தி ஹீலிய வாயு
பிராண வாயு சேகரிக்கலாம் !
மீதேன், மெர்குரி, மெக்னீசீயம்
வெள்ளி அம்மோனியா
உள்ளன !
வரண்டு போன
பாலைவனச் சுடு நிலவில்
பசுஞ் சோலை ஆழ்குழிகளில்
நீர்ப் பாறைகள்
நிரந்தரமான தெப்படி ?
பரிதி ஒளி புகாத
படு பாதாளத்தில்
பாறை நீரைத் திரவ மாக்கி
மேற்தளத் துக்கு
ஏற்றுவது எப்படி ?
"நிலவின் ஆழ்குழிப் பனிப் பாறையிலிருந்து நீரை எப்படி வெளியேற்றுவது என்பதே முக்கியப் பிரச்சனை ! இது பொறிநுணுக்க நிபுணருக்கு முதலில் தீர்க்க வேண்டிய ஒரு சவாலாக இருக்கும். நிலவின் நீரை அறுவடை செய்து பயன்படுத்த இன்னும் நீண்ட காலம் ஆகலாம். முதலில் நீர் நிலவில் எப்படித் சேர்ந்தது என்பதை அறிவதே அதைச் சேமிக்க ஏறும் முதற்படி.
டெட்லெ•ப் கோஸ்சினி (ESA Chandrayaan -1 Project Scientist)
"நிலாவில் நீர் இருப்பத நாசா உறுதி செய்யப் பட்டிருக்கிறது. விண்வெளித் தேடலுக்கு வேண்டிய குடிநீர், மற்றும் மனிதர் சுவாசிக்க ஆக்ஸிஜன், ராக்கெட் எரிசக்திக்குப் பயன்படும் எரிவாயு ஹைடிரஜன் போன்ற முக்கிய தேவைகள் இருப்பதையும் நிரூபித்துள்ளது."
மைக்கேல் வார்கோ (பிரதம நிலா உளவு விஞ்ஞானி, நாசா தலைமைக் கூடம்)
"வாயு மண்டலம் இல்லாத வரண்ட சந்திரனில் நிரந்தமாய் சூரிய வெளிச்சம் இல்லாத ஆழ்குழிகளில் நீண்ட காலம் நீர் இருக்க எப்படிச் சாத்தியமாகிறது ? நிலவின் துருவப் பகுதிகளில் பரிதி வெளிச்சம் 2 டிகிரிக் கோணத்துக்கும் குறைவான தொடுவானில் பட்டும் படாமலும் தெரிகிறது. ஆழ்குழிகளின் விளிம்புகள் நிரந்தரமாய்ப் பள்ளத்தின் கீழ்த்தரையைப் பல பில்லியன் ஆண்டுகளாக முற்றிலும் மறைத்து வந்துள்ளன. அத்தளங்களின் குளிர் உஷ்ணம் (-200 டிகிரி C). அவ்விதம் நீர்ப் பனிக்கட்டி ஆழ்குழிகளில் பேரளவு இருப்பதால் பிற்காலத்து விண்வெளி விமானிகளுக்குக் குடிநீராகவும், சுவாசிப்பு வாயுவாகவும், ஏவுகணை எரிவாயுவாகவும் உபயோகமாகும்."
டோனி கொலாபிரீட் லகிராஸ் திட்ட விஞ்ஞானி.
"நிலவில் கண்ட (LCROSS Spacecraft) நீர் மாதிரிகள் பரிதி மண்டலம் உண்டான தோற்ற வரலாற்றையும் அதன் வளர்ச்சியையும் அறியப் பயன்படும்."
கிரேக் டெலோரி (Greg Delory Senior Fellow Space Sciences Lab & Center)
“தூரத்து உளவு செய்வதில் (Remote Sensing) இந்தச் சோதனை முடிவு (பனிப்படிவுக் கண்டுபிடிப்பு) சாதனையில் உயர்வானது. நிலவில் கால் வைக்காமல் நிலவைத் தோண்டாமல் இவ்விதம் சோதனை புரிவது உன்னத முறை என்பதில் ஐயமில்லை. கடினமான அந்தச் சோதனையை (Bi-Static Experiment) நாங்கள் செய்து முடித்தோம். பனிப்படிவு ரேடார் சமிக்கைத் தகவலை ஆராய்ந்து விளைகளை வெளியிடச் சில வாரங்கள் ஆகும்.”
ஸ்டீவர்ட் நாஸெட் (Srewart Nozette NASA Mini-RF Principal Investigator, LRO)
“எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும். செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம். அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”
டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) (ஜனவரி 26, 2008)
நிலவின் இருதுருவங்களிலும் பனிநீர் ஏரிகள் இருப்பது உறுதியானது

2010 அக்டோபர் 22 தேதி மலர்ந்த ஆங்கில விஞ்ஞான வெளியீட்டில் (Journal of Science) பதிவாகியுள்ள ஆறு தனித்தனி அறிக்கைகள் நாசாவின் சோதனை விளைவுகளை மீளாய்வு செய்ததில் தென் துருவத்தில் இருக்கும் காபியஸ் ஆழ்குழியில் (Cabeus Crater) மட்டும் பில்லியன் காலன் அளவு நீர் இருப்பதாக கணித்துள்ளன. நாசா ரேடார் கருவி மூலம் இப்போது நிலவின் வட துருவ ஆழ்குழிகளிலும் பனிநீர் ஏரிகள் இருப்பதாக உறுதிப் படுத்தியுள்ளது. ஓராண்டுக்கு முன் (அக்டோபர் 9, 2009) நாசா லகிராஸ் விண்ணுளவி (LCROSS - Lunar Crater Observation & Sensing Satellite) நிலவில் மோத விடப்பட்டு பரிதி ஒளிபுகாத ஆழ்குழிகளில் பனிநீர் ஏரிகளும் மற்ற உலோக மூலக்கூறுகளும் இருப்பது உறுதி செய்யப் பட்டது. முதல் சோதிப்பில் நாசா, மோதலில் எழுந்த தூசி, துணுக்குகளில் நீரோடு மற்றும் சிறிதளவு ஹைடிரஜன், கார்பன் மானாக்சைடு, அம்மோனியா, மீதேன், மெர்குரி, கந்தகம், வெள்ளி, மெக்னீசியம், சோடியம் ஆகிய உலோகக் கூட்டுகளையும் கண்டுள்ளது. மோதலில் வெளியேறிய தூசி, துணுக்குகளில் குறிப்பாக பனிநீர் மட்டும் 5.6% பகுதி என்று நாசா அறிவித்துள்ளது. 2009 அக்டோபரில் வெளியான முதல் அறிவிப்பில் நாசா 200 பவுண்டு நீர் வெளியேறியது என்று கூறியது. இப்போது (2010 அக்டோபர்) வந்த விஞ்ஞான வெளியீட்டில் நாசா துல்லியமாக 341 பவுண்டு என்று தன் அளவை மிகைப் படுத்தியுள்ளது.

நிலவில் ஓரளவு நீர் இருப்பதாக வந்த முதல் நாசா அறிக்கை இப்போது நிலவில் உறைந்து கிடக்கும் நீர் ஏரிகள் பற்பல இருப்பா தாக மிகைப்படுத்தி, விஞ்ஞான வெளியீட்டில் ஆறு அறிக்கைகள் புதிய தகவலை எழுதியுள்ளன. இந்த அறிவிப்பு நிலவுக்குப் படையெடுக்கும் பல நாடுகளுக்கு (அமெரிக்கா, ரஷ்யா, ஈசா, சைனா, ஜப்பான், இந்தியா) மகிழ்ச்சி அளிக்கும் ஒரு நிகழ்ச்சி. 1960 -1970 ஆண்டுகளில் நிலவுக்குப் பயணம் அமெரிக்க அபொல்லோ விமானிகளுக்கு விண்கப்பலில் ஒரு பவுண்டு நீர் சுமந்து செல்ல 50,000 டாலர் செலவானது. இப்போது நீர்ச் சுமக்கும் நிர்ப்பந்தம், பணச் செலவு அதிகமில்லை என்பதாகி விட்டது ! ஹைடிரஜன், ஹீலிய-3 எரிவாயு நிலவில் கிடைப்பதால் விண்கப்பலுக்கு எரிசக்தியும் கிடைக்கிறது. அதாவது செவ்வாய்க் கோளுக்கு 2020 ஆண்டுகளில் செல்லும் உலக நாடுகளுக்கு நிலவு ஓர் ஒப்பற்ற ஓய்வுத் தளமாக இருக்கக் எல்லாத் தகுதியும் பெறுகிறது. 1960 -1970 ஆண்டுகளில் உலவிய அமெரிக்க விமானிகள் சுகத் தளங்களில் மட்டும் ஆய்வு செய்து, வெகு பயன் அளிக்கும் ஆழ்குழிகளை ஆராயத் தவறி விட்டனர் !
2009 ஆகஸ்டில் நிலவுக்குப் பயணம் செய்த சந்திரயான் -1 இந்திய விண்ணுளவியில் அமைக்கப் பட்ட "சாரா" கருவி (SARA -Sub-keV Atom Reflecting Analyzer) நிலவுத் தளத்தில் மனித வசிப்புக்குத் தேவையான நீரிருப்பதைக் காட்ட வழி வகுத்துள்ளது.

நிலவின் ஆழ்குழிகளில் நீர் எப்படி உண்டானது ?

சமீபத்தில்தான் வானியல் விஞ்ஞானிகள் நிலவில் எப்படி நீர் தோன்றியது என்பதற்கு விளக்கம் அறிவித்துள்ளார். சந்திரன் ஒருவித "உறிஞ்சு சேமிப்பி யாக" (Sponge) இயங்குகிறது. நிலவின் மேற்தளம் "ரிகோலித்" என்னும் "தூசிப் பரல்கள்" (Dust Grains Called Regolith) தாறுமாறாக மேவிய தளப்பகுதி. ரிகோலித் பரல்கள் பொதுவாக பரிதியிலிருந்து வெளியேறும் மின்னேற்றத் துகள்களை (Electrically Charged Particles) உறிஞ்சும். அந்தத் துகள்கள் ஏற்கனவே நிலவுத் தூசியில் (Dust & Voila) கலந்துள்ள ஆக்சிஜனோடு இணைந்து நீர் உண்டாக்குகின்றன. தூசிப் பரல்களில் பரிதியின் புரோட்டான்கள் பிடிபட்டு ரிகோலித்தில் உள்ள ஆக்சிஜனோடு இணைத்து ஹைடிராக்சியல் (HO) மற்றும் நீர் (H2O) உருவாகின்றன. சந்திரயான் -1 இல் அமைக்கப் பட்ட சாரா கருவி நமது பரிதி மண்டலக் கோள்களைச் சீராக அறிய உதவுகிறது. பரிதியிலிருந்து வரும் புரோட்டான்கள், விண்வெளியில் திரியும் எலக்டிரான்களுடன் சேர்ந்து ஹைடிரஜன் வாயுவாக மாறுகின்றன. அதை நிலவின் ரிகோலித் பரல்கள் பிடித்து வைத்துக் கொள்கின்றன. நிலவில் இப்படித்தான் ஹைடிரஜன், ஹைடிராக்சியல், நீர் ஆகியவை உருவாகின்றன.
சாரா கருவி மூலம் நிலவின் மேற்தளத்தில் உள்ள மூலகங்களையும், மூலக் கூறுகளையும் நேரிடையாக அறிய முடிகிறது. சந்திரயான் -1 இல் பணிசெய்த சாரா கருவி அமைப்பில் பன்னாட்டுக் கூட்டுழைப்பு (சுவீடன், சுவிட்சர்லாந்து, ஜப்பான், இந்தியா) உள்ளது. சமீபத்தில் நாசாவின் சந்திரயான் ரேடார் கருவி நிலவின் வடதுருவக் குழிகளில் குறைந்தது 600 மில்லியன் மெட்ரிக் டன் பனிநீர்க் கட்டி இருக்க வேண்டும் என்று காட்டியுள்ளது.

வால்மீன்கள் நிலவில் மோதி நீரைக் கொட்டி இருக்கலாம் என்னும் ஒரு கோட்பாடு இருப்பினும், தற்போது விஞ்ஞானிகள் நிலவின் நீர் "உள்நாட்டுச் சரக்கு" தவிர புற அண்டப் பொழிவில்லை என்று ஊகிக்கிறார். வானியல் ஆய்வாளி டாக்டர் யாங் லியூ இதைத்தான் மேலும் வலியுறுத்துகிறார் : "வால்மீன் போன்ற பிற அண்டங்கள் நீரை வாரி நிலவில் இறைத்திருந்தால் இப்போது காணப்படும் நிலவின் நீரில் சோடியம், பொட்டாசியம் போன்ற எளிதில் ஆவியாகாத மூலகங்கள் (Less Volatile Elements) ஏன் மிகவும் சுருங்கிப் (Strongly Depleted) போயிருக்க வேண்டும் ?" என்று கேட்கிறார்.
காபியஸ் போன்ற நிரந்தரமாய் பரிதி ஒளி பாயாத ஆழ்குழிகளின் உஷ்ணம் - 387 F (-233 C). இந்தக் கடுங்குளிரில் நீர் பல பில்லியன் ஆண்டுகளாகச் சேர்ந்து திண்ணிய பனிப்பாறையாகப் படிந்துள்ளது. சூரிய மண்டலத்தில் நிலவின் ஒளிமறைவுக் குழிகள் கடுங்குளிர்ப் பகுதிகளாக மாறிவிட்டன ! இந்தப் படுபாதாளக் பனிப் பாறைகளை இருட்டில் உருக்கி நீரை மேலேற்றிக் கொண்டு வருவது 21 நூற்றாண்டின் பெரும் சவாலான அசுர சாதனையாக இருக்கும் !

வெண்ணிலவில் தண்ணீர் இருப்பதை நாசா உறுதிப்படுத்தியது

2009 நவம்பர் 13 ஆம் தேதி நிலவின் நிரந்தர நிழல் ஆழ்குழிகளில் (Shadow Craters) கணிச அளவு நீர் இருப்பதை சமீபத்தில் நாசா ஏவிய லகிராஸ் விண்ணுளவியை (LCROSS Spaceship - Lunar Crater Observation & Sensing Satellite) வெகு வேகமாக மோத விட்டு முதன்முதல் உறுதிப்படுத்தியது. லகிராஸ் விண்ணுளவி தெரிந்த பூமி நீரின் நெருங்கிய உட்சிவப்பு ஒளி முத்திரையை (Known Near-Infrared Light Signature of Water) கைவசம் வைத்துக் கொண்டு மோதிய சிதறலில் வெளியேறிய ஒளிப்பட்டைப் பதிவை ஒப்புநோக்கித் தெளிவாக நீரிருப்பதை நிரூபித்தது. உட்சிவப்பு ஒளிப்பட்டைமானி (Infrared Spectrometer) வெளியே சிதறிய துகள்கள் உமிழும் அல்லது விழுங்கும் ஒளியலைகளின் நீளங்களை உளவிக் கனிமங்களில் உள்ள உட்பொருட்களை (Composition of Materials) ஆராய்ந்தது.
அத்துடன் இரண்டாவது சோதனை உளவாக லகிராஸின் புறவூதா ஒளிப்பட்டை மானி (LCROSS Ultraviolet Spectrometer) பரிதி ஒளி நீரைப் பிரித்து விளைவிக்கும் ஹைடிராக்சியல் அயனிகளின் சக்தி முத்திரையை (Energy Signature of OH Ions) அளந்து மேலும் நீர் இருப்பை உறுதிப் படுத்தியது. லகிராஸ் ஏவுகணை நிலவைத் தாக்கி வெளியேறிய நீர் மயம் சுமார் 24 காலன் (7.6 லிட்டர்) என்று கணிக்கப் படுகிறது. நிலவு மோதல் சோதனையை நடத்த நாசா முன்பே தேர்ந்தெடுத்த இருட்பள்ளம் தென் துருவத்தில் உள்ள "காபியஸ் -ஏ" (Shadow Crater Cabeus -A). 25 மைல் (40 கி.மீடர்) அகண்ட இந்தக் குழி சூரிய வெளிச்சம் படாத ஒரு பள்ளம். இதில் படிந்துள்ள பனிநீர்ப் படிவு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் படிந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் யூகிக்கிறார்..
இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும், அமெரிக்காவின் நாசாவும் இணைந்து செய்த நிலவுச் சோதனை

2009 ஆகஸ்டு 20 ஆம் தேதியன்று இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும் நாசாவின் விண்ணுளவுக் குழுவும் ஒன்று சேர்ந்து ஒரு நூதனச் சோதனையை சந்திரனின் வடதுருவப் பகுதியில் புரிந்தன. அந்த அரிய சோதனைக்கு இந்தியத் துணைக்கோள் சந்திராயன் -1, நாசாவின் நிலவு விண்ணுளவி (Lunar Reconnaissance Orbiter -LRO) ஆகிய இரண்டும் இணையாகத் துருவப் பகுதிகளைத் துருவி நோக்கிப் பனிப்படிவைக் கண்டுபிடித்து நிலவுத் தள ஆய்வில் ஒரு புது மைல் கல்லை நாட்டின ! முதன் முதலாகக் காணப்பட்ட அந்த பனிப்படிவு நிலவின் வடதுருவப் பகுதியில் பரிதி ஒளிக்கு மறைவான “எர்லாஞ்சர்” என்னும் ஓர் படுகுழியில் (Lunar Crater Erlanger in the Polar Region) கிடந்தது ! அதன் சமிக்கையை ஒரே சமயத்தில் இந்தியாவின் சந்திரயான் கருவியும், நாசாவின் நிலாச் சுற்றியும் உறிஞ்சி எடுத்துள்ளன என்பது வியக்கத் தக்க நிகழ்ச்சி.
அந்த ஆய்வுச் சோதனைக்குப் பெயர் ‘இரட்டை நிலைநோக்குச் சோதனை’ (Bi-Static Experiment). நிலவைச் சுற்றி வரும் இரண்டு விண்ணுளவிகளில் உள்ள “நுண்ணலை ரேடியோ அதிர்வுக் கருவிகள்” (Miniature Radio Frequency Instrument: Mini-RF) பனிப்படிவுச் சமிக்கையை உறிஞ்சி தள ஆய்வு அரங்குகளுக்கு அனுப்பியுள்ளன. இன்னும் சில நாட்களில் அந்தப் பனிப்படிவில் உள்ளது நீரா அல்லது வேறு வாயுவா என்று ஆராய்ந்து உறுதியாக உலகுக்கு அறிவிக்கப்படும் ! மேலும் ஆராய்ந்து சேமிக்கப்படும் தகவலில் மறைந்த குழிப் பகுதிகளில் ‘புதைபட்ட பனிப்படிவுகள்’ இருக்கலா மென்று தெரியவரும். இந்தப் பனிப்படிவு சமிக்கை நீர் என்று நிரூபிக்கப்பட்டால் நிலவில் நிரந்தர ஓய்வுக்கூடம் அமைக்கப் போகும் நாசாவுக்கு மாபெரும் வெற்றியாகும். இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பகமும் நாசாவைப் போல் பின்னால் சந்திரனில் ஓர் ஓய்வகம் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது !
நிலவில் பனிநீர்க் கண்டுபிடிப்பில் எதிர்காலப் பிரச்சனைகள்

நாசா லாகிராஸ் விண்ணுளவியை அனுப்பி நிலவில் மோதவிட்டு நீர்க்கட்டிகள் இருப்பதை உறுதிப் படுத்தியது ஒரு முதற்படி வெற்றியே ! அதன் பயன்களை உபயோகப் படுத்த நாசா பன்முகச் சாதனங்களைத் தற்போது அமைக்க வேண்டும். இப்போது விஞ்ஞானிகளுக்கு எழும் வினாக்கள் இவை : பல பில்லியன் ஆண்டுகளாக நிரந்தர நிழற்குழிகளில் நீர்க்கட்டிகள் எவ்விதம் படிந்தன என்று ஆராய்வது முதல் கேள்வி ! அடுத்து அந்தப் படுகுழிப் பனிநீர்க் கட்டியை பரிதி வெளிச்சம் படாத பள்ளத்தில் எப்படி உருக்கி நீர்த் திரவமாக்குவது என்பது இரண்டாவது கேள்வி ! அடுத்து அந்த நீரை எப்படி மின்சாரப் பம்ப்புகள் அங்கே அமைத்து மேலே நிலவின் மேற்தளத்துக்குக் கொண்டு வருவது என்பது மூன்றாவது கேள்வி ! அடுத்து ஹைடிரஜனையும் ஆக்ஸிஜனையும் எப்படிப் பிரிப்பது, எப்படிச் சேகரிப்பது போன்ற வினாக்கள் எழுகின்றன. அனைத்துக்கும் பரிதியின் வெப்ப சக்தியைப் பயன்படுத்த மாபெரும் சூரியசக்தி சேமிப்புக் கலன்கள் பூமியில் அமைக்கப்பட்டு மற்ற சாதனங்களுடன் நிலவுக்குத் தூக்கிச் செல்ல வேண்டும். இவை யாவும் உலக நாடுகள் செய்ய வேண்டிய எதிர்கால அசுர சாதனைகளாக இருக்கும் ! இதற்கு அமெரிக்க அரசாங்கம் இப்போது போதிய நிதித் தொகை ஒதுக்குமா என்பது விடை அறிய முடியாத வினா !