ஞாயிறு, 31 ஜூலை, 2011

பூமியில் மூலாதார நீர் வெள்ளத்தை நிரப்பியவை பனி மூடிய முரண்கோள்களா ?


(Was Earth’s Original Water Delivered 
By Ice-Covered Asteroids ?)
(கட்டுரை 2)
வக்கிரக் கோளின் மாதிரி
மண்ணை எடுத்து
வையத்தில் இறக்கியது ஜப்பான்
ஹயபுசா விண்ணுளவி !
அயான் எஞ்சினை முடுக்கி
ஆமை வேகத்தில்
மில்லியன் மைல் பயணம் செய்து
முரண்கோள் வெஸ்டாவை
முற்றுகை இட்டது
நாசாவின்
புலர்ச்சி விண்ணுளவி !
நான்கு வருடம் பறந்து
எண்பது மைல் ஆழம் வரை
நீர்ப்பனி போர்த்திய
செரிஸ் முரண்கோளை நெருங்கிச்
சுற்றி வரப் போகுது
நாசா விண்ணுளவி
சூரிய மண்டலத் தோற்றம்
ஆராய் வதற்கு !


“(முரண்கோள்களில் பனிநீர் உள்ளது) என்னும் கண்டுபிடிப்பால் நமது சூரிய மண்டலத்தின் முரண்கோள் வளைய (Asteroid Belt) அரங்கத்திலே பேரளவு நீர்ப்பனி இருந்திருப்பதாக எதிர்பார்க்கப் படுகிறது. அக்கருத்து முரண் கோள்கள் பூமியைப் பன்முறைத் தாக்கிப் பேரளவு நீர் வெள்ளத்தைக் கடலில் நிரப்பியது என்னும் கோட்பாடுக்கு ஆதாரம் அளிக்கிறது.  புவியில் உயிரினம் தோன்றவும் விருத்தி அடையவும் முரண்கோள்களின் உள்ளமைப்புப் பொருட்கள் மூலச் செங்கற்களாய் இருந்துள்ளன.”
ஹம்பர்டோ காம்பின்ஸ், மத்திய பிளாரிடா பல்கலைக் கழகம்
“முரண்கோள்களில் காணப்படும் உலோகப் பொருட்கள் பரிதிக் கோள்கள் தோன்ற கட்டுமானப் பொருட்களாய் உதவியவை.  முரண்கோள் #2 பல்லாஸ் (Asteroid #2 Pallas), முரண்கோள் #10 ஹைஜியா (Asteroid #10) (Hygiea) ஆகிய இரண்டிலும் விஞ்ஞானிகள் நீர்ப்பனியும், கார்பன் அடிப்படை ஆர்கானிக் கூட்டுகளும் இருப்பதாக நம்புகிறார்.”
கரோல் ரேமண்டு (Dy Principal Investigator, NASA Dawn Mission)

“பூமியை நெருங்கும் முரண்கோள் ஒன்றில் மனிதர் இறங்கிப் பாதையைத் திருப்பி விடும் நுணுக்க வெடி முறையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.  அது விண்வெளி வரலாற்றில் ஒரு புதுச் சாதனை மைல் கல்லை நாட்டி வைக்கும்.”
ஜான் கிரௌன்ஸ்ஃபெல்டு (American Astro-physicist John Grunsfeld)
“முதன்முதல் முரண்கோள் வளையத்தில் (Asteroid Belt) முக்கிய வக்கிரக் கோள் ஒன்றை நாசாவின் விண்ணுளவி சுற்ற ஆரம்பித்து விண்வெளித் தேடலில் ஓர் உன்னத மைல்கல் நட்ட இன்றைய தினத்தை நாங்கள் கொண்டாடுகிறோம்.  வெஸ்டா முரண்கோளை விண்ணுளவி ஆராய்வது மாபெரும் விஞ்ஞானச் சாதனையாகக் குறிக்கப்படுகிறது.  அது எதிர்காலப் பரிதி மண்டலக் கோள்களுக்கு மனிதர் பயணம் செய்யப் பாதை விரிக்கிறது.”
சார்லஸ் போல்டன் (NASA Administrator)
“2025 ஆண்டுக்குள் விண்வெளி விமானிகளை ஒரு வக்கிரக் கோளுக்கு அனுப்பி வைக்க நாசாவுக்கு நான் ஆணை இடுகிறேன்.  அந்தக் குறிக்கோளை நிறைவேற்றப் “புலர்ச்சி” விண்ணுளவி (Dawn Space Probe) தேவையான விபரங்களை இப்போது சேமிக்கும்.”
ஓபாமா அமெரிக்க ஜனாதிபதி

“வக்கிரக் கோள் வெஸ்டாவில் ஓர் உலோகக் கரு (Metal Core) மையத்திலும் சிலிகேட் பாறை அதைச் சுற்றிலும் இருப்பதாக நாங்கள் ஊகிக்கிறோம்.  பரதி மண்டல வரலாற்றில் எப்போதோ அதன் தென் துருவ முனை உடைந்து பெரும்பான்மைப் பகுதி சப்பையாகப் போனது.  அப்பகுதியின் சிதறிய சில துணுக்குகள் பூமியிலும் விழுந்திருக்கலாம்.  பூமியில் விழுந்த 20 விண்கற்களில் ஒன்று வெஸ்டாவிலிருந்து விழுந்திருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார்.”
டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)
“வெஸ்டா, கிரிஸ் வக்கிரக் கோள்:களை ஆராயும் போது விண்கோள்களின் முரணான தோற்றப் பண்பாடுகளை அறிய முடியும்.  முன்னது பரிதி மண்டல அகக் கோள்கள் போல் (Inner Planets) பாறைக் கட்டமைப்பில் வார்க்கப் பட்டது.  பின்னது புறக்கோள்கள் போல் (Outer Planets) பனித்தள வடிவத்தில் உருவானது.”
டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)

பூமியின் மூலாதார நீர்வளத்தைத் தெளித்தவை முரண் கோள்களா ?
முன் யூகிப்பிலிருந்து விலகி இப்போது பூமியின் கடல் வெள்ளமும், சூழ்வெளி வாயு மண்டலமும் தீவிர எரிமலை எழுச்சிகளால் கிளம்பிய புகை மூட்டத்தில் உண்டானவை என்னும் பழைய கோட்பாடு மாறி யுள்ளது.  பிரென்ச் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தின் விஞ்ஞானி பிரான்சிஸ் ஆல்பாரடே (Francis Albarede), “பரிதிக் கோள்கள் தோன்றி 100 மில்லியன் ஆண்டுகள் கடந்து புவி பிள்ளைக் கோளாய் வளரும் பருவத்தில் அதன் ஆரம்ப உட்பொருளாய் நீர் உருவக்கப் படவில்லை,” என்று ஆலோசனை கூறுகிறார்.  ஆப்பம் சுடுவது போல் வட்டத் தட்டாய் முதலில் உருவாகிய பூமியிலே மூன்றில் இருபங்கு நீர் மயமாய் இருக்கும் வெள்ளம் புறவெளிக் கோள்கள் மூலமாகத்தான் (Extraterrestrial) தாமதமாக வந்திருக்க வேண்டும் என்றோர் புதுக் கருத்து மாறுபாடு உறுதியாகி உள்ளது.  பூமியில் உயிரினம் தோன்றும் முன்பே நீர் வெள்ளம் நிரம்பி அடித்தட்டு நகர்ச்சி இயக்கங்கள் (Plate Tectonics Movements) நிகழக் காரணமாக இருந்திருக்கிறது என்றும் பிரான்சிஸ் ஆல்பாரடே கூறுகிறார்.

நீரிருக்கும் இடத்தில் உயிரினம் இருந்திருக்கும் என்பதை உலக விண்வெளி ஆய்வுக் குழுக்கள் ஏற்றுக் கொள்ளும்.  4.5 பில்லியன் ஆண்டுகட்கு முன்னே புவிக் கடலில் போதிய நீர் நிரம்பி உயிரின வளர்ச்சிக்கு ஏதுவான சூழ்நிலைக் கடலிலும், கண்டங்களிலும் இருந்து அடித்தட்டு நகர்ச்சிக்கும் (Plate Tectonics) வழி வகுத்தது.  அகக் கோள்களை ஒப்பு நோக்கினால் புதன் கோளும், நிலவும் புவியைப் போலின்றி படு வரட்சி ஆயின.  செவ்வாய்க் கோளும் வாயுக் குடையின்றி சூரியக் கனலில் நீர் ஆவியாகிப் பாலை வனமாய் வரண்டு போனது.  வெள்ளிக் கோள் சுட்டுப் பொசுக்கும் அமிலத்தில் அக்கினிக் கோள் ஆனது.
முரண் கோள்களில் பனிநீர் இருப்பு கண்டுபிடிக்கப் பட்டது.
2010 ஆண்டில் இரண்டு ஆய்வுக் குழுவினர் தனித்தனியாக முரண்கோள்களில் நீர்ப்பனியும், ஆர்கானிக் மூலக்கூறுகளும் இருப்பதற்கு ஆதாரங்களைக் கண்டறிந்தனர். 2010 ஏப்ரலில் முதற்குழு முரண்கோள் தெமிஸில் (Asteroid # 24 Themis) பனிநீர் இருப்பதையும், 2010 அக்டோபரில் இரண்டாம் குழுவினர் முரண்கோள் சைபெலியில் (Asteroid # 65 Cybele) பனிநீர் உள்ளதையும் கண்டுபிடித்தனர்.

இவ்விரு புதிய கண்டுபிடிப்புகளும் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பரிதி மண்டலக் கோள்கள் தோன்றிய பிறகு பனிநீர் கொண்ட முரண்கோள்கள் பூமியைத் தாக்கி நீர் வெள்ளத்தை நிரப்பி உயிரினப் பிறப்புக்கும் வளர்ச்சிக்கும் வசதி அளித்திருக்கலாம் என்னும் புதிய கோட்பாடுக்கு வழி வகுத்திருக்கிறது.
விஞ்ஞானிகள் 180 மைல் (290 கி.மீ.) விட்டமுள்ள முரண்கோள் #65 சைபிலியின் பரிதி ஒளிப் பிரதிபலிப்பை ஆராய்ந்தனர்.  சைபிலி முரண்கோள் செந்நிறக் கோள் செவ்வாயிக்கும் பூதக்கோள் வியாழனுக்கும் இடையில் பரிதியைச் சுற்றி வருகிறது.  விஞ்ஞானக் குழுவினர் இருவித ஆய்வுக் கருவிகளைப் பயன் படுத்தினார். 1.  நாசாவின் ஹவாயி மௌனா கியா உட்சிவப்பு தொலைநோக்கி (NASA’s Infrared Telescope in Hawaii) 2.. ஸ்பிட்ஸர் விண்வெளித் தொலைநோக்கி (Spitzer Telescope).  இரண்டு கருவிகளும் முரண்கோள் சைபிலியின் மேற்தள நீர்ப்பனி இருப்பின் முத்திரை அடிப்பைப் பதிவு செய்தன.  அத்தோடு சிக்கலான ஆர்கானிக் திடப் பொருட்களையும் (Complex Organic Solids) கண்டன.  அவை பெரிதான நீர்ப்பனிப் பாறைகளாக இல்லாமல் மிக மெல்லிய (Less than 1 micron thick) பனித்தட்டுகளாகவும், நிலையற்றதாகவும் இருந்தன..  பனிநீர்ப் படிவுகள் ஒருசில ஆயிர ஆண்டுகளுக்குள்தான் படிந்திருக்க வேண்டும்.

விஞ்ஞானிகள் முரண்கோள்களை ஆராய்வதற்கு ஐந்து காரணங்கள்
1. பரிதி மண்டல மூலத் தோற்ற விபரங்களை முரண்கோள்கள் கூறுகின்றன.
பூதக்கோள் வியாழனுக்கும், செந்நிறக் கோள் செவ்வாயிக்கும் இடையே பரிதியைச் சுற்றிவரும் முரண்கோள்கள் அகத்தே சுற்றும் விண்பாறை வெப்பக் கோள்களுக்கும், புறத்தே சுற்றும் குளிர்ச்சியான வாயுக் கோள்களுக்கும் நடுவே வலம் வருவதால் பல்வேறு வடிவங்களில் கோள்கள் உருவான தெப்படி என்பதற்கு ஆதாரங்கள் அளிக்கலாம்.  நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி ஆராயப் போகும் முரண்கோள்கள் வெஸ்டா, செரிஸ் இரண்டும் வெவ்வேறானவை.  வெஸ்டாவில் விண்கற்கள் / முரண்கோள்கள் தாக்குதல் மிகுந்திருந்ததால் தேய்வு வெப்பம் சூடாக்கும் அதிக அளவு கதிரியக்க அலுமினியம் (Radioactive Aluminium) காணப் படுகிறது.
முரண்கோள்களைப் பற்றி ஆராயும் விஞ்ஞானிகள் இதுபோன்ற பல புதிர்களை விடுவிக்க முடியும்.

2. பரிதிக் கோள்கள் சிலவற்றில் உயிரினத் தோற்ற மூலத்தை அறிய முடியும்
பூமியில் உயிரற்ற ஆர்கானிக் பிண்டத்திலிருந்து உயிரனங்கள் எப்படி உதித்தன என்பது விஞ்ஞானிகளுக்கு இன்னும் ஒரு புதிராகவே உள்ளது !  அந்த மர்மத்தைத் தீர்க்க முரண் கோள்கள் உதவலாம்.  செரிஸ் போன்ற பேரளவு நீர்ப்பனி மண்டலம் கொண்ட சில முரண் கோள்கள் உயிரின மூலத் தோற்றங்களை அறிய உதவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

முரண்கோள்களில் காணப்படும் உலோகப் பொருட்கள் பரிதிக் கோள்கள் தோன்ற கட்டுமானச் செங்கற்களாய் உதவியவை.  முரண்கோள் #2 பல்லாஸ் (Asteroid #2 Pallas), முரண்கோள் #10 ஹைஜியா (Asteroid #10 Hygiea) ஆகிய இரண்டிலும் உயிரினம் தோன்ற மூலக் காரணமான நீர்ப்பனியும், கார்பன் அடிப்படை ஆர்கானிக் கூட்டுகளும் இருப்பதாக நம்பப்படுகிறது.”
3. பூமிக்கு அருகில் சுற்றும் முரண்கோள்களில் உலோகங்கள் தோண்டி எடுக்கலாம்.
பூமிக்கு அருகில் உள்ள வளையத்தில் சுற்றும் முரண்கோள்களில் (Asteroids in Near-Earth Belt) விலை மதிப்பில்லா உலோகங்கள் இருப்பதால், அங்கு எதிர்கால விண்வெளி விமானிகள் பயணம் செய்து ஆராய வாய்ப்புக்கள் இருக்கின்றன.  ஆதலால் முரண்கோள்கள் சிலவற்றின் மூலக் கலவைகளை முற்றிலும் அறிவது தேவையாகிறது.

4. முரண்கோள் எப்போதாவது பூமியைத் தாக்கப் போவதாய்ப் பயமுறுத்தலாம்.     
பரிதியைச் சுற்றிவரும் சில முரண்கோள்கள் நீள்வட்டத்தில் வலம் வருவதால் சில சமயம் அவை பூமிக்கு அருகில் வர வாய்ப்புள்ளது.  அவை சில வேளை மிகவும் பூமிக்கருகில் வந்து விடும்.  2010 ஜனவரியில் முரண்கோள் 2010- AL30 பூமியை 80,000 மைலுக்குள் (130,000 கி.மீ.) நெருங்கி அபாய நிலையை அறிவித்தது.  நல்ல வேளையாக சிறிய முரண்கோள் 2010- AL30 இன் அகலம் 36 அடி (11 மீடர்) மட்டுமே.  நாசாவின் அடுத்த எச்சரிக்கை இது !  ஏப்ரல் 13, 2036 இல் இரண்டு கால் பந்துத் திடல் நீளமுள்ள முரண்கோள் அபோ·பிஸ் (Asteroid Apophis) பூமிக்கருகில் 18,300 மைல் தூரத்தில் வரப் போகிறது என்று உலகுக்கு அபாய மணி அடித்துள்ளது !  அது பூமியில் விழுந்தால் பேரளவு சேதம் உண்டாகும் என்று அஞ்சப் படுகிறது !
5. விண்வெளி விமானிகள் 2025 ஆண்டுக்குள் முரண்கோள் ஒன்றில் இறங்கி ஆராயலாம்
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா 2010 ஏப்ரலில் 2025 ஆண்டுக்குள் அமெரிக்க விண்வெளி விமானிகள் ஒரு முரண்கோளுக்குப் பயணம் செய்து மீளுவார் என்று அறிவித்திருக்கிறார்.  அப்போது விமானிகள் முதன்முறையாக முரண்கோளை வெடிவைத்து அதன் சுற்றுப் பாதையை மாற்ற முயல வேண்டும் என்று அமெரிக்க விண்வெளிப் பௌதிக விஞ்ஞானி ஜான் கிரௌன்ஸ்ஃபெல்டு (Astro-physicist John Grunsfeld) ஆலோசனை கூறி இருக்கிறார்.  அப்பயிற்சி பூமியைத் தாக்க வரும் எதிர்கால முரண்கோளைத் திருப்பி விடப் பிற்காலத் தேவைக்கு உதவும் என்று சுட்டிக் காட்டி இருக்கிறார்.

2015 இல் நீர்ப்பனி நிரம்பிய முரண்கோள் செரிஸை நோக்கி நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி  
2011 ஜூலை 17 ஆம் தேதி நாசா 2007 செப்டம்பரில் ஏவிய புலர்ச்சி விண்ணுளவி புவியைத் தாண்டிப் பரிதி மண்டலத்தில் நான்கு ஆண்டுகள் பல மில்லியன் மைல்கள் பயணம் செய்து முதன் முதல் முரண்கோள் வளையத்தில் (Asteroid Belt) பெரிய வடிவில் ஒன்றான வெஸ்டா வக்கிரக் கோளை (Asteroid Vesta) நெருங்கிச் சுற்ற ஆரம்பித்துள்ளது.  பரிதி மண்டல முரண் கோள் வளையத்தில் கோடான கோடி வக்கிரக் கோள்கள் செவ்வாய்க் கோளுக்கும் வியாழக் கோளுக்கும் இடையே வியாழனைச் சுற்றிக் கொண்டு வருகின்றன.  நகரும் இந்த அடர்த்தி மந்தையில் வெஸ்டாவைக் கண்டுபிடித்துப் பிற வக்கிரக் கோள்கள் மோதிச் சிதையாமல் சுற்றி வருவது ஒரு மாபெரும் விண்வெளிச் சாதனையாகவும் வரலாற்று மைல் கல்லாகவும் கருதப்படுகிறது.  விண்ணுளவி அன்றைய தினத்தில் வெஸ்டாவை 530 கி.மீ. (300 மைல்) உயரத்தில் வலம் வந்தது.  வெஸ்டாவை நெருங்கவே நான்கு வருடங்கள் கடந்து விட்டன.  ஒன்பது மாதங்கள் வெஸ்டாவை ஆய்வு செய்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி மேலும் நான்கு ஆண்டுகள் பயணம் செய்து அடுத்துள்ள எல்லாவற்றுக்கும் பெரிய முரண்கோள் செரிஸை (Asteroid Ceres) 2015 இல் சுற்றத் துவங்கும்.  2015 இல் செரிஸை ஐந்து மாதங்கள் ஆய்வு செய்து புலர்ச்சியின் குறிப்பணி முடியும் போது அது சுமார் 3 பில்லியன் மைல்கள் பயணம் செய்திருக்கும்.

முரண்கோள் வளையத்தில் எல்லாவற்றுக்கும் பெரிய வக்கிரக் கோள் செரிஸ்.  அதன் பூதளத் தன்மைகளைக் கண்டறிய முதலில் உதவியது ஹப்பிள் தொலைநோக்கி.  செரிஸின் குறுக்கு நீளம் 580 மைல் (930 கி.மீ).  ஏறக்குறைய உருண்டையான கிரிஸ் புளுடோ போல் பரிதி மண்டலத்தின் குட்டிக் கோள் (Dwarf Planet) என்ற வகுப்பணியில் வைக்கப் படுவது.  செரிஸ் முரண்கோளில் 40 – 80 மைல் (60 – 120 கி.மீ) ஆழப் பனித்தளம் உள்ளதாகவும் பூமியை விட இனிப்பு நீர்ச் சேமிப்பு (Sweet Water Storage) ஆறு மடங்கு மிக்கதாகவும் அறியப் படுகிறது.  2015 இல் சுற்றப் போகும் நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி செரிஸில் பேரளவு உறைந்து கிடக்கும் நீர்ப்பனியின் முழு விபரங்களை நேரடியாக அறிந்து நமக்கு அறிவிக்கும்.
(தொடரும்)
************************
தகவல்:
Picture Credits: NASA, JPL, ESA, JAXA
1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.gov./mission/status.html] (Jan 27, 2006)
2. Space Today Online – Exploring the Red Planet, Future Mars Probes from Earth
3 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2 [Aug 26, 2003]
4 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]

புதன், 27 ஜூலை, 2011

முரண்கோள் வெஸ்டாவை முதன்முதல் சுற்றிவரும் நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி.


(NASA Space Probe Dawn is orbiting
the Asteroid Vesta)
நிலவினில் தடம் வைத்தார்
நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் !
செவ்வாய்க் கோள் ஆராயத்
தளவுளவி சிலவற்றை
நாசாவும்
ஈசாவும் உளவ இறக்கின !
வால்மீன் வயிற்றில் அடித்து
தூசிகளை விண்ணில் ஆராய்ந்தார்
நாசா விஞ்ஞானிகள் !
வால்மீனை விரட்டிச் சென்று
தூசியைப் பற்றிக்
காசினியில் இறக்கினார் !
வக்கிரக் கோள் ஒன்றின்
மாதிரி மண்ணை
வையத்தில் இறக்கியது
ஜப்பான் விண்ணுளவி !
அயான் எஞ்சினை இயக்கி
பில்லியன் மைல்கள்
பயணம் செய்து
முரண் கோள் வெஸ்டாவை
முற்றுகை இடும்
நாசாவின் விண்ணுளவி
சுற்றி வருகுது
சூரிய மண்டலத் தோற்றம்
ஆராய் வதற்கு !


“முதன்முதல் முரண்கோள் வளையத்தில் (Asteroid Belt) முக்கிய வக்கிரக் கோள் ஒன்றை நாசாவின் விண்ணுளவி சுற்ற ஆரம்பித்து விண்வெளித் தேடலில் ஓர் உன்னத மைல்கல் நட்ட இன்றைய தினத்தை நாங்கள் கொண்டாடுகிறோம்.  வெஸ்டா வக்கிரக் கோளை விண்ணுளவி ஆராய்வது மாபெரும் விஞ்ஞானச் சாதனையாகக் குறிக்கப்படுகிறது.  அது எதிர்காலப் பரிதி மண்டலக் கோள்களுக்கு மனிதர் பயணம் செய்யப் பாதை விரிக்கிறது.”
சார்லஸ் போல்டன் (NASA Administrator)
“2025 ஆண்டுக்குள் விண்வெளி விமானிகளை ஒரு வக்கிரக் கோளுக்கு அனுப்பி வைக்க நாசாவுக்கு நான் ஆணை இடுகிறேன்.  அந்தக் குறிக்கோளை நிறைவேற்றப் “புலர்ச்சி” விண்ணுளவி (Dawn Space Probe) தேவையான விபரங்களை இப்போது சேமிக்கும்.”
ஓபாமா அமெரிக்க ஜனாதிபதி

“புலர்ச்சி விண்ணுளவி வெஸ்டாவைச் சுற்றும் போது ஆராய எத்தனை தணிவாகச் செல்ல முடியுமோ அத்தனைத் தணிவு உயரத்தில் பயணம் செய்ய முயல்கிறோம்.  விண்ணுளைவி வக்கிரக் கோளில் தவறி விழுந்து முறிந்து போனால் நாசா எங்கள் மீது படுகோபம் அடையும்.”
டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (University of California, LA)
“வக்கிரக் கோள் வெஸ்டாவில் ஓர் உலோகக் கரு (Metal Core) மையத்திலும் சிலிகேட் பாறை அதைச் சுற்றிலும் இருப்பதாக நாங்கள் ஊகிக்கிறோம்.  பரதி மண்டல வரலாற்றில் எப்போதோ அதன் தென் துருவ முனை உடைந்து பெரும்பான்மைப் பகுதி சப்பையாகப் போனது.

அப்பகுதியின் சிதறிய சில துணுக்குகள் பூமியிலும் விழுந்திருக்கலாம்.  பூமியில் விழுந்த 20 விண்கற்களில் ஒன்று வெஸ்டாவிலிருந்து விழுந்திருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார்.”
டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)
“வெஸ்டா, கிரிஸ் வக்கிரக் கோள்களை ஆராயும் போது விண்கோள்களின் முரணான தோற்றப் பண்பாடுகளை அறிய முடியும்.  முன்னது பரிதி மண்டல அகக் கோள்கள் போல் (Inner Planets) பாறைக் கட்டமைப்பில் வார்க்கப் பட்டது.  பின்னது புறக்கோள்கள் போல் (Outer Planets) பனித்தள வடிவத்தில் உருவானது.”
டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)

நாசா விண்ணுளவி புலர்ச்சி (Dawn) வெஸ்டா முரண்கோளைச் சுற்றத் துவங்கியது.
2011 ஜூலை 17 ஆம் தேதி நாசா 2007 செப்டம்பரில் ஏவிய புலர்ச்சி விண்ணுளவி புவியைத் தாண்டிப் பரிதி மண்டலத்தில் நான்கு ஆண்டுகள் பல மில்லியன் மைல்கள் பயணம் செய்து முதன் முதல் முரண்கோள் வளையத்தில் (Asteroid Belt) பெரிய வடிவில் ஒன்றான வெஸ்டா வக்கிரக் கோளை (Asteroid Vesta) நெருங்கிச் சுற்ற ஆரம்பித்துள்ளது.  பரிதி மண்டல முரண்கோள் வளையத்தில் கோடான கோடி வக்கிரக் கோள்கள் செவ்வாய்க் கோளுக்கும் வியாழக் கோளுக்கும் இடையே வியாழனைச் சுற்றிக் கொண்டு வருகின்றன.  நகரும் இந்த அடர்த்தி மந்தையில் வெஸ்டாவைக் கண்டுபிடித்துப் பிற வக்கிரக் கோள்கள் மோதிச் சிதையாமல் சுற்றி வருவது ஒரு மாபெரும் விண்வெளிச் சாதனையாகவும் வரலாற்று மைல் கல்லாகவும் கருதப்படுகிறது.  விண்ணுளவி அன்றைய தினத்தில் வெஸ்டாவை 530 கி.மீ. (300 மைல்) உயரத்தில் வலம் வந்தது.  வெஸ்டாவை நெருங்கவே நான்கு வருடங்கள் கடந்து விட்டன.  ஒன்பது மாதங்கள் வெஸ்டாவை ஆய்வு செய்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி மேலும் நான்கு ஆண்டுகள் பயணம் செய்து அடுத்துள்ள எல்லாவற்றுக்கும் பெரிய முரண்கோள் செரிஸை (Asteroid Ceres) 2015 இல் சுற்றத் துவங்கும்.  2015 இல் செரிஸை ஐந்து மாதங்கள் ஆய்வு செய்து புலர்ச்சியின் குறிப்பணி முடியும் போது அது சுமார் 3 பில்லியன் மைல்கள் பயணம் செய்திருக்கும்.

2007 செப்டம்பர் 27 ஆம் தேதி புலர்ச்சி விண்ணுளவி அமெரிக்காவின் பிளாரிடா கெனாவரல் ஏவுகணை முனையிலிருந்து டெல்டா -2 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.  10 கி. வாட் மின்னாற்றல் கொண்ட சூரிய சக்தி அயான் எஞ்சின் முடுக்கி மெதுவாகச் சென்று 2011 ஆண்டு ஜூலையில் வெஸ்டா முரண்கோளையும், 2015 இல் கிரிஸ் முரண்கோளையும் ஆராயத் திட்டமிடப் பட்டது  2015 இல் அதன் விண்ணுளவு முடியும் போது அது சுமார் 3 பில்லியன் (5 பில்லியன் கி.மீ) தூரம் பயணம் செய்திருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.  இந்த திட்டத் துக்குச்  செலவாகும் நிதித் தொகை 475 மில்லியன் டாலர்.  பூமியைக் கடந்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி செவ்வாய்க் கோளை அண்டி ‘நெருக்க ஈர்ப்பு வீச்சில்’ (Flyby Gravity Force) வேகம் மிகையாகி வெஸ்டாவை விரைவில் அடையத் திட்டமிடப் பட்டது.


வக்கிரக் கோள் வெஸ்டா 1807 ஆண்டில் பூதக் கோள் வியாழனுக்கும், செந்நிறக் கோள் செவ்வாயிக்கும் இடையே உள்ள முரண்கோள் வளையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, வெஸ்டாவின் குறுக்கு நீளம் 326 மைல் (525 கி.மீ).  தென்புறத்தில் நேர்ந்த பெருத்த மோதலில் வெஸ்டா துருவப் பகுதியில் சிதைவடைந்து சப்பையான கால்பந்து போல் தோற்றம் அளிக்கிறது.  பூமியிலிருந்து சுமார் 117 மில்லியன் மைல் (188 மில்லியன் கி.மீ.) தூரத்தில் புலர்ச்சி வெஸ்டாவை நெருங்கி இந்த விந்தை வரலாறு நிகழ்ந்திருக்கிறது !  திட்டத்தில் அடுத்த சிறப்பு முயற்சி என்ன வென்றால் புலர்ச்சி விண்ணுளவி இத்தனை தூரப் பயண நகர்ச்சிக்கும், திசை திருப்பத்துக்கும் ஒரு புதுவித அயான் எஞ்சினைப் (Solar Electric Ion Engine) பயன் படுத்தியுள்ளது.  ஆரம்பத்தில் புலர்ச்சி 6200 மைல் உயரத்தில் பறந்து வெஸ்டாவின் ஈர்ப்பு விசையில் பிடிபட்டு சுற்றியது.  சிறிது சிறிதாகப் புலர்ச்சி வெஸ்டாவை நெருங்கி இறுதியில் 120 மைல் (200 கி.மீ) உயரத்தில் வலம் வந்து முரண்கோளின் இயற்கைத் தன்மைகளை 9 மாதங்கள் ஆராயும் திட்டம் உள்ளது
பூமி போன்ற கோள்கள் முதலில் தோன்றிய போது சிதறிய இந்த வக்கிரக் கோள்கள் பரிதி மண்டலத்தின் தோற்றத்தைத் தெரிவிக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.  வெஸ்டா, கிரிஸ் முரண்கோள்கள் விஞ்ஞானிகளுக்குப் புதிய படைப்புக் கருத்துக்களைத் தெரிவிக்கும்.  புதன், பூமி, வெள்ளி, செவ்வாய், வியாழன் போன்ற கோள்கள் உருவான பிறகு சிதறி எஞ்சிய மிச்சத் துணுக்குகள்தான் இந்த வக்கிரக் கோள்கள்.!  முரண்கோள் வெஸ்டாவின் மையத்தில் ஓர் உலோகக் கரு உள்ளதாகவும், அதைச் சுற்றிலும் சிலிகேட் பாறைகள் மூடி இருப்பதாகவும் விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்.  வெஸ்டாவின் மேற்தளம் அடித்தள எரிமலைகள் பீறிட்டு உருவாக்கப் பட்டுள்ளது.
முரண்கோள் வளையத்தில் எல்லாவற்றுக்கும் பெரிய வக்கிரக் கோள் கிரிஸ்.  அதன் பூதளத்  தன்மைகளைக் கண்டறிய முதலில் உதவியது ஹப்பிள் தொலைநோக்கி.  கிரிஸின் குறுக்கு நீளம் 580 மைல் (930 கி.மீ).  ஏறக்குறைய உருண்டையான கிரிஸ் புளுடோ போல் பரிதி மண்டலத்தின் குட்டிக் கோள் (Dwarf Planet) என்ற வகுப்பணியில் வைக்கப் படுவது.  கிரிஸ் முரண்கோளில் 40 – 80 மைல் (60 – 120 கி.மீ) ஆழப் பனித்தளம் உள்ளதாகவும் பூமியை விட நீர்ச் சேமிப்பு மிக்கதாகவும் அறியப் படுகிறது.
புலர்ச்சி விண்ணுளவித் திட்டத்தின் குறிக்கோள் என்ன ?
புலர்ச்சி வெஸ்டாவை 9 மாதங்கள் சுற்றி வரும்,  பிறகு கிரிஸை நெருங்கி குறைந்தது 5 மாதங்கள் சுற்றி வரும். புலர்ச்சி முரண்கோளைத் திசை திருப்பி நகர்த்த 10 கி.வாட் சூரிய சக்தி அயான் எஞ்சின் (Solar Electric Ion Engine) பயன்படுத்தப் படுகிறது.  இதுவரைப் பயன் படுத்திய இரசாயன ராக்கெட்டுகள் போலின்றி அயான் எஞ்சின்கள் துடிப்புத் தள்ளு (Push by Impulse) ஆற்றல் உடையது.  உந்து சக்திக்கு எஞ்சினில் ஸீனான் அயான்கள் (Xenon Ions) வெளியே தள்ளப் படுகின்றன.

பூமியின் பெருவாரியான கடல்நீர் வெள்ளம் பற்பல முரண்கோள்களில் உள்ள பனிப்பாறையிலிருந்து மோதலின் போது பரவிச் சேமிப்பானது என்று சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
புலர்ச்சி விண்ணுளவித் திட்டத்தின் குறிக்கோள் :
1. வெஸ்டா, கிரிஸ் முரண் கோள்களின், மேற்தள அமைப்பு, உட்தள அமைப்பு, திணிவை ஆராய்வது.
2. முரண் கோள்களின் வடிவளவு, உட்கலவை, உருவத் தோற்றம், நிறையை அறிவது.
3. மேற்தள ஆய்வு, ஆழ்குழிகளை ஆராய்தல்.
4. முரண் கோள் வடிவ அமைப்பில் பனிநீர்ச் சேமிப்புத் தேக்கம் பற்றி அறிவது.
புலர்ச்சி விண்ணுளவி தாதுக்கள், மூலக, மூலக்கூறுகளைக் காணும் கருவிகளைச் சுமந்து செல்கிறது.  2011 ஆகஸ்டு மாதத்தில் புலர்ச்சி வெஸ்டா மீது 120 மைல் உயரத்தில் பறந்து கருவிகள் வேலை செய்யத் துவங்கும்.  பூதள வேறுபாடுகள், சூழ்வெளி அமைப்பு, மலைச் சிகரத் தோற்றங்கள், எரிமலைச் சிதைவுகள், எரிமலைக் குழம்போட்டம் ஆகியவற்றை ஆராயும்.
(தொடரும்)
************************
தகவல்:
Picture Credits: NASA, JPL, ESA, JAXA
1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.gov./mission/status.html] (Jan 27, 2006)
2. Space Today Online – Exploring the Red Planet, Future Mars Probes from Earth
3 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2 [Aug 26, 2003]

சனி, 16 ஜூலை, 2011

பூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி. பூகோளக் கடற்தளங்கள் நீட்சி, குமரிக் கண்டம்.


கால்பந்து ஒட்டுபோல்
தையலிட்ட
கடற் தளத்தின் மேல்
கோல மிட்டு
காலக் குமரி எல்லை வரைந்த
வண்ணப் பீடங்கள்
நாட்டியம் புரியும் !
நண்டு போல் நகர்ந்து,
கண்டத் தளங்கள்
துண்டு துண்டாய்த் தவழும்
கடல் சூழ்ந்திட !
‘ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே மத்தியதரைக் கடல் பிரதேசம், நீரில்லாத இரண்டு மைல் ஆழக் குழியாக உப்புக் கலவைப் பொருள் மிகையாகக் கொண்டிருந்தது. அட்லாண்டிக் கடலை ஜிப்ரால்டர் பெரு மலைத்தொடர் மறைத்து, ஒருசில நதிகள் மட்டும் சேரும் மத்திய தரைக் கடல் வெள்ளம் அனைத்தும் ஆவியாகப் போனது. கப்பலின் துளைக்கருவி வெகு ஆழத்தில் தோண்டிப் பார்த்ததில், பல பகுதிகளில் பாலைவன வெப்பத்தில் காய்ந்துபோன ஆயிரக் கணக்கான அடி உயர உப்புக் குளங்களும், ஏரிகளும் காணப்பட்டன ‘.
டாக்டர் வில்லியம் ரயான், [Glomar Challenger Deep Sea Exploration (1970)]
‘கடற்தளங்கள் நீட்சியைக் கண்டுபிடித்து விளக்குவது நம் கையில்தான் இருக்கிறது. மைய அட்லாண்டிக் பிறழ்ச்சிப் பீடத்தின் இருபுறமும் உள்ள கடற்தளம் ஆண்டுக்கு சுமார் ஓரங்குல நீளம் நகர்ந்து கொண்டு வருகிறது. கடற்துளையில் எடுத்த மாதிரிகள் வடிகால் புழுதிக்கும், அடிக்கடற் பாறைக்கும் இடையில் உள்ள எல்லையைக் காட்டின. அத்துடன் அவை எத்துணை இளைய பருவத்தை உடையவை என்று வயதைக் காட்டி, அடிக்கடல் பூர்வப்படிவங்கள் [Undersea Basement Fossils] வெஜினரின் மகத்தான கண்டங்களின் புலப்பெயர்ச்சி நியதியை மெய்ப்பித்தது ‘.
டாக்டர் ஆர்தர் மாக்ஸ்வெல் [Co-Leader, Wood Hole Oceanographic Institution]
’450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆஃபிரிக்காவின் ஸகாராப் பாலையின் மீது துருவப் பனிக்கூண்டு [Polar Ice Dome] படிந்து கிடந்தது. அதை மெய்ப்பிக்க அல்ஜீரியா பாலைவனத்தில் பனிப்பாறை செதுக்கிய கற்பாறைகள் இப்போதும் பிழைத்திருப்பதை காணலாம். பூர்வக் காந்தத்தைச் [Paleo-magnetism] சோதிக்கும் போது அல்ஜீரியா பகுதி ஒருகாலத்தில் தென்துருவத்தில் பனிமூடிக் கிடந்திருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது. அல்ஜீரியா பகுதி இப்போது பூகோளத்தின் வளைவில் பெயர்ச்சியாகி 8000 மைல் தூரம் வடக்கே நகர்ந்துள்ளது.
250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆஃபிரிக்காவின் ஸகாரா பாலைவனம் தென்துருவத்தில் இருந்து பனிப்பாறையால் மூடியிருந்த காலத்தில், பூமத்திய ரேகை வட அமெரிக்காவின் மத்தியப் பகுதி வழியாகச் சென்றிருக்க வேண்டும். குளிர்ப் பிரதேசங்களான அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற இடங்களில் நிலக்கரிச் சுரங்கங்கள் அந்த யுகத்தில்தான் தோன்றி யிருக்க வேண்டும் ‘.
டாக்டர் ரோட்ஸ் ஃபேர்பிரிட்ஜ்கொலம்பியா பல்கலைக் கழகம்.
முன்னுரை:   பிரபஞ்சத்தின் அண்டங்கள், பஞ்ச பூதத்தின் அங்கங்கள், உலகத்தில் வாழும் உயிரினங்கள் எல்லாம் சக்தி மயத்தால் முறையே ஓர் ஒழுக்க நியதியைப் பின்பற்றி இயங்கினாலும், அவற்றின் இயக்கத்திலும் வடிவத்திலும் தொடர்ந்து மாறுபாடுகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வேறுபாடுகளை நோக்கும் போது, பிரபஞ்ச நியதிகள் முற்றிலும் சீரானவை என்றோ அல்லது முழுவதும் சீரற்றவை என்றோ அழுத்தமாகச் சொல்லமுடியாது. ஆனால் நமக்குத் தெரிந்த பிரபஞ்சக் கோட்பாடுகளைச் [Laws of the Universe] ‘சீரற்ற ஒழுங்கு நியதிகள் ‘ [Disorderly Order Hypothesis] என்று இரண்டு முரண்பாடுகளையும் இணைத்து நாம் விளக்கம் சொல்லலாம்!
அட்லாண்டிக் பெருங்கடல் மெதுவாக அகன்று வருகிறது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது! ஆனால் பசிபிக் பெருகடல் மெதுவாகக் குறுகிக்கொண்டு வருகிறது! ஈரோப்பில் இருக்கும் ஆல்ஃப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் அதிகமாகிக் கொண்டே போகிறது! பூதக் கண்டம் ஆஃப்பிரிக்கா செங்கடல் வடமுனையில் பிளக்கப் போகிறது! இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டம் அழுத்தி, அழுத்தி அவற்றை உயர்த்தை மிகை யாக்கிய வண்ணமா யிருக்கின்றன! ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன!
வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் மெல்ல மெல்ல நகர்ந்து இடைவெளியை அகலமாக்கி வருகின்றன! அமெரிக்காவில் காலிஃபோர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் வடபுறமாகச் சரிந்து கொண்டிருக்கிறது! மைய அட்லாண்டிக் கடற்தட்டுப் பிறழ்ச்சிப் பீடம் [Mid-Atlandic Tectonic Plate Ridge] குறுக்கே வெட்டிச் செல்லும் ஐஸ்லாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்ஸி [Surtsey, Iceland] என்னும் தீவு 1963 நவம்பர் 14 இல் வட அட்லாண்டிக் கடலில் திடாரென எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது!
தென்துருவத்தில் இருக்கும் அண்டார்க்டிகாவில் முதலில் 1967 ஆண்டிலும், அடுத்து 1969 ஆண்டிலும் நெடுத்தொடர் மலைகளின் [Transantarctic Mountains] பனிபாறைகளில் டைனோசார்ஸ் காலத்திய நிலத்துறை விலங்குகளின் பூர்வப்படிவத் துணுக்குகளைக் [Fossil Fragments of Land Creatures] கண்டுபிடித்து, அமெரிக்க தேசீய விஞ்ஞான அறக்கூடம் [National Science Foundation] உளவு செய்தது. அந்த மாதிரிகளில் ஒன்று செம்மறி ஆடு போல் ஊர்ந்திடும் விலங்கான லிஸ்டிரோசாரஸ் [Lystrosaurus]. அண்டார்க்டிகாவில் முதன்முதல் கண்டுபிடிக்கப் பட்ட முதுகெலும்புள்ள பூர்வ மூலப்படிவம் [Index Fossil] அந்த விலங்கு. அந்த விலங்குகள் ஆஃபிரிக்கா, இந்தியா, சைனா ஆகிய நாடுகளில் 180-225 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக அறியப்படுகின்றன.
குலோமர் சாலஞ்சர் கப்பலின் கடற்தள உளவுப் பயணம்:
1968 ஆம் ஆண்டில் ‘ஆழக்கடல் துளை தோண்டுத் திட்டம் ‘ [Deep Sea Drilling Project] என்று பெயர் பெற்ற மாபெரும் கடற்தட்டு உளவுப்பணி ஆரம்பிக்கப் பட்டது. குலோமர் சாலஞ்சர் கப்பல் காலிஃபோர்னியா கடற்தள ஆயில் துளைக் கம்பெனி [California Offshore Oil Drilling Co. Global Marine Inc] தயாரித்தது. கடற்தளப் பாறைகளில் 20,000 அடி ஆழத்தில் துளையிட்டு மாதிரிகளைக் கொண்டுவந்து சோதிப்பதே அதன் முக்கியப் பணி. தேசீய விஞ்ஞான அறக் கட்டளை [National Science Foundation] வழியாக அமெரிக்க மைய அரசு உளவுக்கு நிதிக்கொடை அளித்தது. அப்பணிகளைச் செய்தவை அமெரிக்காவின் பூதள ஆய்வுக் கூட்டு நிறுவகங்கள் [JOIDES Gruop (Joint Oceanographic Institutions for Deep Earth Sampling)].
குலோமர் சாலஞ்சர் கடற்துளைக் கருவி 1968 ஆம் ஆண்டு போட்ட முதல் துளையில் மெக்ஸிகோ வளைகுடாவில் 12,000 அடி ஆழத்தில் நுழைந்து பெட்ரோலியம் கச்சா ஆயில் இருப்பதைக் கண்டுபிடித்தது! இதுவரைக் கடலில் இத்தனை ஆழத்தில் ஆயில் ஒளிந்துள்ள தென்று யாரும் ஊகித்தது கூட இல்லை! மூன்றாவது துளையை அட்லாண்டிக் கடற்தளத்தில் தோண்டி, அட்லாண்டிக் கடல் மெய்யாக அகன்று வருகிறது என்று கண்டு பிடித்தது. 1968 ஆண்டு இறுதியில் ஆஃபிரிக்காவின் மேற்திசையில் சென்று, மைய அட்லாண்டிக் கடற்தட்டுப் பீடத்தின் தென்புற மிருந்து துவங்கி இருபுறமும் தொடர்ந்து துளைக்கு மேல் துளையிட்டு மாதிரிகளைச் சோதித்து மகத்தான கடற்தட்டு மெய்ப்பாடுகளைக் கண்டு பிடித்தது.
குலோமர் கப்பல் நான்கு வருடங்களாகப் பணி செய்து சுமார் 400 துளைகளைக் கடற் பாறைகளில் தோண்டி பல அரிய புதிய பூகோளச் செய்திகளைக் கூறி யிருக்கிறது. உலகக் கண்டங்களை விட, கடற்தளங்கள் இளைய காலத்தவை என்று கண்டுபிடித்துள்ளது. பூர்வ வடிகால் புழுதிகள் [Oldest Sediments] 160 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் உண்டாகி யிருக்கின்றன என்று கண்டுள்ளது.
அதற்கு முரணாகச் சமீபத்தில் உளவிய கிரீன்லாந்தின் பாறைகள் சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று காட்டி யுள்ளது. பூகோள விஞ்ஞானிகள் தற்போது பூமியின் முழு வயதை 4.5 பில்லியன் ஆண்டாகக் கணிக்கிறார்கள். ஆனால் பூகோளக் கடற்தளத்தின் வயதை சுமார் 180 மில்லியன் ஆண்டாகத்தான் மதிப்பிடுகிறார்கள்.
1970 இல் குலோமர் கப்பல் ஆய்வாளர்கள் ஆஃபிரிக்கா கண்டம் வடதிசை நோக்கி மெதுவாக நகர்ந்து, மத்தியதரைக் கடல் அகலத்தைக் குறுக்கி வருகிறது என்று நிரூபித்திருக்கிறார்கள். அந்த நகர்ச்சியால் கடற்தட்டுகள் பிறழ்ந்து, எப்போதாவது ஸிசிலியில் உள்ள எட்னா சிகரத்தில் [Mount Edna, Sicily] எரிமலைக் குமுறலையும், கிரீஸ், துருக்கி ஆகிய நாடுகளில் நிலநடுக்கத்தையும் உண்டாக்குகின்றன! படிப்படியாக அழுத்தி மத்தியதரைக் கடற்தட்டு மடங்கி ஆல்ஃப்ஸ் மலைத் தொடரை உயர்த்திக் கொண்டே போகிறது என்றும் கூறி யிருக்கிறார்கள்!
சுனாமி உண்டாக்கிய சுமாத்திரா கடற்தட்டுப் பிறழ்ச்சி:
இந்தோனேசியாவுக்கு மேற்கே சுமாத்திரா தீவுக்கு அருகே கடற்தளத்தில் அதே கோணத்தில் சாய்திருக்கும் சுமாத்திர நிலநடுக்கப் பழுது [Sumatran Fault] சுமார் 1100 மைல் நீளத்தில் இருப்பதாக அறியப்படுகிறது. 2004 ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி வெடித்த கடற்தள பூகம்பத்தில் பூதவடிவில் எழுந்த சுனாமி கால் மில்லியன் நபர்களைக் கொன்றதோடு, பனிரெண்டு நாட்டுக்குக் கடற்கரை நகரங்களைத் தகர்த்து விட்டது. நிலநடுக்கத்தின் போது மாபெரும் ஆற்றல் மிக்க அசுர சுனாமியை எழச்செய்த கடற்தள முறிவின் நீளம்: சுமார் 700-800 மைல், அகலம்: 60 மைல்! அதாவது 48,000 சதுர மைல் [800x60] பரப்பும், பல ஆயிரம் அடி ஆழமுள்ள கடல் வெள்ளத்தை செங்குத்தாகத் தூக்கிப் பல முறைக் குலுக்கிப் போட்டுச் சுனாமிப் பேரலைகள் கரைநோக்கி அடுத்தடுத்துப் படையெடுத்துள்ளன! அபார ஆற்றல் கொண்ட அந்த அசுர நிலநடுக்கத்தைத் தூண்டிய கடற்தட்டுப் பிறழ்ச்சிப் பழுது [Plate Tectonic Fault] சுமாத்திரா பழுது! பல்லாண்டுகளாக இக்கடற்தட்டுப் பழுது எண்ணற்ற நிலநடுக்கங்களை உண்டாக்கியுள்ள பூகம்பத் திடலாக இருந்து வருகிறது. 1833 ஆம் ஆண்டில் அதே பழுதுத் தொடரில் மிகப்பெரும் பூகம்பம், Mw:9 [Mercalli Scale] அளவு நிர்ணயத்தில் எழுந்து பேரழிவு செய்துள்ளது..
சுமாத்திரா தீவு 1100 மைல் நீளமும், 250 மைல் அகலமும் கொண்டது. தீவுக்கு மேற்கே 180 மைல் தூரத்தில் அதன் முழு நீளத்திற்கும் இணையாக, ஒரு பயங்கர நில அதிர்வுப் படுகுழி காணப் படுகிறது. சுமாத்திரா பூகம்ப பழுதுக்குழி [Sumatran Fault Trench] குமுறிக் கொண்டிருக்கும் உலகக் கடற்தளப் பிறழ்ச்சிக் குழிகளிலே மிகப் பெரியது. அன்னத்தின் கழுத்துபோல் வளைந்த அந்தப் பூகம்ப பழுது 1100 மைல் நீண்டதாக தீவுக்கு இணையாகக் கடற்தளத்தில் தோன்றி யிருக்கிறது. கடற்தட்டுத் திணிப்பால் [Ocean Plate Subduction Process] வளர்ந்திருக்கும் சுமாத்திராவின் மலைத்தொடரும், பழுதுக் குழிக்கு இணையாக மலைப் பாம்புபோல் படுத்துக் கிடக்கிறது!
மெஸோசாயிக் யுகத்தின் [Mesozoic Era] ஆரம்ப காலத்தில், அதாவது 240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு குமுறிக் கொண்டிருந்த கடற்தட்டுத் திணிப்பு அரங்கத்தில் [Subduction Zone], சுமாத்திரா தீவு அமைந்துள்ளது. அந்த நாட்டிய அரங்கம் சுமாத்திரா தீவு போல் இணை யாகச் சாய்ந்த கோணத்தில் நீண்டு வளைந்துள்ளது. பல மில்லியன் ஆண்டுகளாக படிப்படியாகக் கடற்தட்டுத் திணிப்பால் உண்டான கருங்கல் குன்றுகளில் மாதிரிகளை எடுத்து ஆராய்ந்ததில் கீழிருக்கும் கடற்தட்டின் உயர அளவுகளையும், பண்புகளையும் கண்டிருக் கிறார்கள்.
அவை யாவும் திணிப்பைச் சார்ந்த கருங்கல் வகையான, நிலநடுக்கத் தன்மை கொண்ட கால்க்-ஆல்கலைன் ரகத்தைச் [Subduction Related I-type, Volcanic Arc, Calc-Alkaline type] சேர்ந்தவை. கருங்கல் மாதிரியில் உள்ள ஸ்டிராஞ்சியம் ஏகமூலத்தின் ஆதி விகிதத்தை [Strontium Isotope Initial Ratio] உளவு செய்தால், திணிப்புத் திடல் கலந்துள்ள பூதளக் குழம்பின் மேற்தட்டு பகுதியைச் [Magmas from Upper Mantle with Subduction Contamination] சேர்ந்ததாக அறியப் படுகிறது.
ஆர்கான் ஏகமூலங்கள் [Ar40-Ar39 Dating], ருபீடியம், ஸ்டிராஞ்சியம் கதிரியக்கத் தேய்வு காலத்தை [Rubidium-Strontium (Rb-Sr) Dating] ஆராய்ந்து, சுமாத்திரா குன்றுகளின் கருங்கல் மாதிரிகளின் வயதைக் காண முடிந்தது. கருங்கற்கள் 5.5 முதல் 192 மில்லியன் ஆண்டு வயதுகளைக் கொண்டிருந்தன. [Sulit Granite: 192 Ma], [Lassi Pluton: 52 Ma], [Lolo Pluton: 12 Ma], [Sungaipenuh Granite: 5.5 Ma] [Ma (Million Years Ago)]. சுமாத்திரா பாறைகளில் காந்தசக்தி ஜுராஸிக் யுகத்தின் [Jurassic Era] ஆரம்பத்தில் சுமார் [193-15 Ma] மில்லியன் ஆண்டுகளுக்கு இடையிடையே ஏற்பட்டுள்ளது என்பதும் அறியப்பட்டது.
கண்டத் தீவுகளுக்கும் கடற் தீவுகளுக்கும் உள்ள வேறுபாடுகள்:
உலகிலே உண்டாகி யிருக்கும் தீவுகளை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். 1. கண்டத் தீவுகள். 2. கடற் தீவுகள். கண்டத் தீவுகள் [Continental Islands] என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம். பெருங் கண்டத்துடன் அதன் அருகே தணிந்த கடல் ஆழத்தில் தளப்பரப்பால் இணைக்கப்பட்ட தீவே, கண்டத் தீவு என்று அழைக்கப்படுகிறது. இலங்கைத் தீவு உப கண்ட மான இந்தியாவின் கண்டத் தீவு என்று சொல்லலாம். கடந்த 20,000 ஆண்டுகளில் பெருங் கண்டத்துடன் பிணைந்து கொண்ட தீவுகளே அப்பெயரைப் பெறுகின்றன. கண்டத் தீவுகளில் உள்ள சில செடி கொடிகள், உயிர் ஜந்துகள் [Fauna & Flora, Species] பெருங் கண்டத்தில் உள்ளவை போல் இருக்கின்றன. குறிப்பிட்ட இடத்தில் பிறந்து விருத்தியாகும் ஜந்துகள் [Endemic Species] அங்கு இருப்பது அபூர்வந்தான்.
கடற் தீவுகள் [Ocean Islands] என்றால் என்ன ? பூமியின் உட்கருவிலிருந்து கடற்தளத்தில் துளையிட்டு எரிமலைகள் சீறி எழுந்து, கடல் ஆழத்தில் உண்டாக்கப்பட்ட தீவுகள் இப்பெயரால் அழைக்கப்படுகின்றன. ஹவாயி தீவுகள், ஐஸ்லாந்து தீவுகள் ஆகிய வற்றை இவற்றுக்கு உதாரணமாகக் கூறலாம். கண்டங்களை ஒட்டாமல், கண்டங்களுக்கு அப்பால் உண்டானவை இத்தீவுகள். மைய அட்லாண்டிக் பிறழ்ச்சித் தட்டுக் கடற்பீடம் குறுக்கே செல்லும் ஐஸ்லாந்தில் உள்ள சூர்ட்ஸி [Surtsey, Iceland] என்னும் தீவு 1963 நவம்பர் 14 இல் வட அட்லாண்டிக் கடலில் எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது! அத்தீவுகள் எப்போதும் ஒரு பெருங் கண்டத்துடன் பிணைக்கப் படுவதில்லை. செடி, கொடிகள், விலங்கினங்கள் கடல் வழியாகக் கொண்டு செல்லப்பட வேண்டும். கடல்மீது வந்த தாவர இனங்கள், விலங்கினங்கள் மட்டுமே அத்தீவுகளில் பிழைத்திருக்க முடியும். நிலப் புதுநீரில் வளரும் மீனினம் போன்ற பலதரப்பட்ட உயிர் ஜந்துகள் அந்த தீவுகளில் கிடையா. கண்டத்திற்கு அப்பாலிருக்கும் கடற்தீவுகளில் புத்தின ஜந்துகள் வளர்ச்சிக்கு மையமாக [Centres of Speciation]
இருக்கின்றன. குறிப்பிட்ட இடவிருத்தி ஜந்துகள் [Endemic Species] வளர இத்தீவுப் பகுதிகளின் சூழ்நிலைகள் உதவுகின்றன.
கடலில் மூழ்கிய தமிழகத்தின் தென்திசைக் குமரிக் கண்டம்
1960 ஆம் ஆண்டில் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிதிக்கொடை அளித்து, இந்து மாக்கடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த உளவில், தமிழகத்தின் கன்னியா குமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்திருக் கிறார்கள். முதலாக கப்பலில் சென்று ஒலிச் சமிக்கை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். அத்திட்டம் ஏனோ 1960 ஆண்டுக்குப் பிறகு தொடரப்பட வில்லை! 1960-1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாக்கடல் கடற்தள வரைபடங்களில், குமரிக் கண்டத்தின் பூர்வீக அமைப்பு நிலை காணப்படுகிறது. அரபிக் கடலுக்குத் தெற்கில், லட்சத் தீவுகள் நீட்சியில் மால்டிவ் தீவின் வடக்குப் பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ [Chagos, Archipelago] வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த [கி.மு.8000] பனி யுகத்தின் போது [During the Ice Age] இந்து மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.
பனி யுகத்தில் எங்கோ பனி திரண்டு நீர் சுண்டிப்போய் உலகெங்கும் கடல் மட்டநீர் தணிவாக இருந்தது. அப்போது உலகத்தில் கண்டங்கள், தீவுகள் பல பகுதிகளில் பிணைந்திருந்தன! ஐரோப்பாவுடன் இங்கிலாந்து, பிளாரிடாவுடன் கியூபா தீவு, ஆஸ்திரேலியாவுடன் பப்பா நியூகினி தீவு, தமிழகத்துடன் இலங்கைத் தீவு, சுமாத்திரா ஜாவா போர்னியோ தீவுகள் தென் கிழக்காசியாவின் பெருந்தளத்துடன் இணைந் திருந்தன என்று கருதப்படுகிறது! இலங்கை தமிழகத்துடன் இணைந்திருந் ததற்கு, இப்போதும் தெரியும் தணிவாக உள்ள கடல்மட்ட நீர் நிலையே சான்றாக இருக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்து வால்மீகி முனிவர் எழுதிய இராம கதையில், அனுமார் படையினர் பாறாங் கற்களைக் கொண்டு வந்து, ஈழத்தின் தணிந்த கடற்தள மீது கற்பாலம் கட்டிக் கடந்திருப்பது அறியப்படுகிறது. பனியுகம் மாறி வெப்பம் மிகையான காலத்தில் பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் மெதுவாக படிப்படியாக உயர்ந்து குமரிக் கண்டம் மூழ்கிப் போயிருக்கலாம் என்று உறுதியாக நம்ப இடமிருக்கிறது. அதன் விளைவில் குமரிக் கண்டம் சிதறி ஆஃபிரிக்கா முதல், ஆஸ்திரேலியா வரை உள்ள மடகாஸ்கர், லட்சத் தீவுகள், அந்தமான் தீவுகள், இந்தோனியாவின் தீவுகள் போன்றவை பிரிவு பட்டன என்று ஒரு சாரார் குறிப்பிட்டுள்ளார்கள்.
‘லெமூரியா கண்டம் ‘ [Lemuria Continent] இந்து மாக்கடல் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்று முதலில் கூறியவர் 19 ஆம் நூற்றாண்டு பூதளவாதி பிலிப் ஸ்கிலேட்டர் [Geologist, Philip Sclater]. விக்டோரியன் டார்வின் நியதியைப் பின்பற்றுவோர் மடகாஸ்கர் தீவில் மட்டும் தனித்து வாழும் லெமூர் குரங்குகளை [Lemurs] எடுத்துக் காட்டி யிருக்கிறார்கள். அவற்றின் பூர்வப்படிவப் பிரதிகள் [Fossils of Lemurs] ஆஃபிரிக்காவிலும், தென் கிழக்காசியாவிலும் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஜெர்மன் டார்வின்வாதியான ஏர்னெஸ்ட் ஹேக்கல் [Ernst Haeckel] ஆதி லெமூரியாவின் உயிர் மூலவிகள் [Genes] யாவும் இந்து மாக்கடலில் மூழ்கி மடிந்ததால் காணாமல் போயின என்று கூறியதை எடுத்துக் கொண்டு பிலிப் ஸ்கிலேட்டர் லெமூரியா கண்டம் (குமரிக் கண்டம்) ஒன்று ஆங்கே இருந்திருக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.
 (தொடரும்)
 தகவல்
1. The Continental Mosaic -Reader ‘s Digest Atlas of the World [1987]
2. Hutchinson Encyclopedia of the Earth By Peter Smith [1985]
3. Earth ‘s Restless Crust -ABC ‘s of Nature, Reader ‘s Digest [1984]
4. The Long Journey of Continents By: Ronald Schiller -The Marvels & Mysteries of The World Around US, Reader ‘s Digest Publication [1972]
5. Continental Drift & Plate Tectonics [www.zephryus.co.uk/geography/home.html] (Mar 20, 2003)
6. Pangaea, Gondwana, Laurasia, Plate Tectonics, Alfred Wegener From: Wikipedia Encyclopedia
7. Theory of Continental Drift By: Jim Cornish, Newfoundland, Canada (Sep 2001)

பனியுகத்தின் தோற்றமும், மாற்றமும் ! கடற்தளங்களின் உயர்ச்சியும், தாழ்ச்சியும் -2


(Ice Age, Sea-Floor Rise & Fall)
கலியுகம் விழிக்கும் முன்னே
பதினெட் டாயிரம் ஆண்டுக்கு முன்
பனியுகம் தவழ்ந்தது!
கடல் நீர் சுண்டி,
தமிழகத் தென்கரை நீண்டு
குமரிக் கண்டம்
கூந்தலை விரித்தது!
சூழ்ந்திடும் பரிதிக் கணப்பில்
படிப்படியாய்,
பனிப் பாறை உருகிடும் !
நீர் மட்டம் உயர
நிலத்தின் நீட்சி மூழ்கும்!
கடல் மடி நிரம்பி
முடிவில் புதை பூமியாய்
சமாதி யானது,
குமரிக் கண்டம்!
பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பு பனிப்பாறை அரிப்பும், பனிமலைச் சரிப்பும் பூதளத்தின் மேனியைக் கோரமாக்கி அழியாத வரலாற்றுச் சான்றுகளாய் நமக்குக் கற்பாறைகளில் கல்வெட்டு செய்திருக்கிறது! பூகோளத்தில் தோன்றிய பனியுகத்தின் ஆட்சியின் போது, பனித்தாள்கள் [Ice Sheets] கண்டங்களில் படிந்து விட்டுப் போன அடையாளச் சின்னங்கள் அவை
பால் ஃபிரிக்கென்ஸ்
‘யுகம் யுகங்களாய் மெதுவாக பூதளத்தின் முகம் மாறிப் போகும் படைப்பு முடிவு பெறாது நீண்டு சென்றாலும், ஒவ்வொரு பூர்வீகச் சின்னத்தை உண்டாக்கிக் கால வரலாற்றை மாற்றிய தனித்துவ இயக்கம் பிரபஞ்சத்தின் உண்மையான ஓர் ஆற்றல் கதையை நமக்குக் கூறுகிறது ‘.
லோவெல் தாமஸ்
‘தளமட்டம் அதிர்ந்து கோரமாய்ச் சாய்கிறது! பூமி பிளக்கிறது! குன்றில் எரிமலை வெடிக்கிறது! பூதளத்தின் மீது உலவும் மாந்தர், கொந்தளிக்கும் அடித்தட்டு ஆட்டத்தால் குலுக்கப்பட்டு நடுங்குகின்றனர். இயற்கையின் இந்தப் பயங்கரப் பேயாட்டத்தின் காரணத்தை இப்போது நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம் ஆயினும், அவற்றை முற்றிலும் கட்டுப்படுத்த முடியாத தவிப்பு நிலையில் நாம் இருக்கிறோம் ‘.
நோயல் புஷ்
முன்னுரை:    ஒவ்வோர் ஆயிரமாண்டு [Millennium] பிறப்புக்குப் பிறகும் பூதளத்தின் தளப் பண்புகள் மாறி அவற்றின் தனித்துவச் சின்னங்கள் எல்லாம் மாந்தர் கண்டுபிடிக்க வேண்டும் என்று இயற்கை அன்னை புதையலாக மறைத்து வைத்திருக்கிறாள்! மலைச் சிகரங்களில் பனிமுடி! பூதளக் கண்டங்களில் படிந்துள்ள புழுதி [Sediments]! கடற் தளங்களில் காணப்படும் அற்பச் சிப்பிகள், பூர்வப் படிவங்கள் [Fossils]! மலைப் பாறைகளில் காலச் சிற்பி பதித்துள்ள மிருகங்களின் கூடுகள்! குமுறிய எரிமலை ஆறோட்டத்தின் ஆறிய குழம்புகள்! 1960 ஆம் ஆண்டு முதலாக கடற்தளங்களில் பலமட்ட அடுக்குகளில் நூற்றுக் கணக்கான துளைகளிட்டுக் காலநிலை மாறுபாடு, கடல் மட்ட வேறுபாடு, பூர்வீக உயிரினங்களின் மலர்ச்சி, மறைவு, பூதளத் தட்டுகளின் பிறப்பு, இறப்பு, பெயர்ச்சி, கண்டங்களின் பண்டைய வயது போன்ற புதிர்களைப் பூதளவாதிகள் விஞ்ஞான ரீதியாக விடுவித்திருக்கிறார்கள்.
18,000 ஆண்டுகளுக்கு முன்னே இருந்த பூகோளத்தின் தோற்றமும், சூழ்வெளியும் இன்றைய அமைப்பை விட வேறுபட்டிருந்தன. சூழ்மண்டலத்தின் வாயு உஷ்ணம் சில டிகிரிகள் [2 C to 3 C] சற்று குறைவாக இருந்தது. பனித் திரட்டுகள் உண்டாகிக் கடல்மட்டம் தணிந்திருந்தது. அச்சமயத்தில்தான் பூமியில் பனியுகம் தோன்றி யிருக்க வேண்டும் என்று பூதளவாதிகள் கூறுகிறார்கள். பனியுகத்தின் படர்ந்த உச்சக் கட்டத்தில், வட ஐரோப்பா, கிரீன்லாந்து வட அமெரிக்காவின் வடபுறம் மற்றும் அண்டார்க்டிகா பிரதேசங்கள் பனிமண்டலம் மூடிக் குளிர்ப் பகுதிகளாய் மாறிவிட்டிருந்தன. அப்போது பூதளத்தின் நீர்வளம் சுண்டிச் சுருங்கிக் கடல் மட்டம் சுமார் 300 அடி முதல் 500 அடி வரைத் தணிந்து, உலகக் கண்டங்களின் விளிம்புகள் நீண்டு, ஆசியாவிலிருந்து அமெரிக்காவின் [வடக்கு, தெற்கு] கண்டங்களுக்குப் நிலப்பாலங்கள் [Land Bridges] அமைந்த தென்று கருதப்படுகிறது! அடுத்த 8000 ஆண்டுகள் சூழ்வெளி வெப்பம் படிப்படியாக மிகையாகிப் பனிமலைகள் உருக ஆரம்பித்துக் கடலின் நீர் மட்டம் உயரத் தொடங்கியது. வட அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகள் [சுப்பிரீயர், மிச்சிகன், ஹூரான், ஈரி, அண்டாரியோ] போன்ற மாபெரும் சுவைநீர் ஏரிகள் அப்போதுதான் நிரம்பின என்று ஊகிக்கப் படுகிறது.
மேலும் பனியுகத்தின் மத்தியில் பனித்திரட்சிகள் மண்டி நீண்ட காலமாக உச்சநிலை ஏறிப் பின் இறங்கி வெப்பமும், குளிர்ச்சியும் சூழ்வெளியில் மாறி, மாறி மீண்டும் சுற்றியதால், பூமி சூரியனைச் சுற்றிவரும் சுழல்வீதி [Earth 's Orbit] வேறானது. பூமியின் சுழல்வீதி மாறிய போது, பரிதியால் ஏற்படும் வெப்பமும், காலநிலைகளும், சூழ்மண்டலும் வேறுபட்டுப் போயின! 100,000 ஆண்டுகளுக்கு முன்பு பரிதியை நீள்வட்டச் சுழல்வீதியில் [Elliptical Orbit] சுற்றிவந்த பூமியின் பாதை, பின்னால் ஏறக்குறைய முழு வட்டவீதியாக [Near-Perfect Circular Orbit] மாறிப் போனதாக அறியப்படுகிறது! நீள்வட்டத்தில் பரிதியைக் குவிமையமாகக் [Focus] கொண்டு பூமி சுற்றும் போது, பாதிக் கோளம் ஒரு சமயம் மிக அருகில் சுற்றியும், ஆறு மாதங்களுக்குப் பிறகு வெகு தூரத்திலும் சுற்றியும் வந்துள்ளது! ஆனால் வட்டவீதியில் சுற்றும் போது பாதிக் கோளம் ஏறக்குறைய ஒரே தூரத்தில் ஆண்டு முழுவதும் சுற்றிவரும். தற்போதைய வெப்பச் சூழ்நிலை மாறி ஒருநாள் உஷ்ணம் சில டிகிரிகள் குன்றி மீண்டும் பனியுகம் வரலாம் என்று பூதளவாதிகள் கருதுகின்றனர்.
பூதளக் கண்டங்களில் தோன்றிய பனியுகப் புரட்சி
1960 ஆண்டுகளில் செய்த கடற்தள உளவு ஆராய்ச்சிகளில் 1.7 மைல் ஆழத்தில் தோண்டிய குழி ஒன்றில் 250,000 ஆண்டுகளுக்கு முன்னே புதைந்து போயிருந்த பனிக்கருவை [Ice Cores] எடுத்திருக்கிறார்கள். அது பண்டைய காலத்துச் சூழ்வெளி அமைப்புகள் [Prehistoric Atmospheres], தட்பகால பனிப்பொழிவுகள் [Seasonal Snowfalls], பனிக்குன்றுகள் நொறுக்கிய பாறைகள் [Rocks crushed by Glaciers], எரிமலைச் சாம்பல்கள், காற்றுத் தூசிகள் போன்ற வற்றைக் காட்டும் ‘காலச் சின்னமாய் ‘ [Time Capsule] இருந்துள்ளது! 167 மில்லியன் ஆண்டு களுக்கு முன்னே கடற்பீடக் கருக்கள் [Sea Cores] 1.3 மைல் ஆழம்வரை தொட்டிருக்கின்றன. அவற்றின் மூலம் அந்தக் கால எரிமலைக் குழிகள் [Volcano Trenches], கடலின் அடித்தளம் அமைக்கும் பஸால்ட் துணுக்குகள் [Basalt Pieces], கடற் புழுதிகள் [Marine Sediments], உஷ்ண மாறுதலைக் காட்டும் துருவப் பனிமூட்டம் போன்ற நுண்ணுருச் சிப்பிகள் [Microscopic Shells like Polar Ice] அறியப்பட்டன. 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து 4 பில்லியன் ஆண்டுகள் வரை நிகழ்ந்த பூகோள வரலாற்றை அறியக் கடற்தளத்தின் அடித் தட்டுகள், கண்டப்பாறை மையங்களின் அரிப்புகள் [Oceanic Crust & Eroded Centers of Continents] ஆகியவை பயன் படுகின்றன! அதற்கும் அப்பால் என்ன நேர்ந்தது என்பதை அறிய பூகோளத்தில் சின்னங்களோ அல்லது பூர்வப் படிவங்களோ இருப்பதாகத் தெரியவில்லை!
ஆஃப்பிரிக்கா, அண்டார்க்டிகா, ஆஸ்திரேலியா, தென்னமெரிக்கா, இந்தியா ஆகிய கண்டங் களில் ஒரே காலத்தில் பனிக்காடுகள் சூழ்ந்திருந்தன என்னும் கருத்து, அக்கண்டங்கள் யாவும் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஒன்றாய்ப் பிணைந்திருந்தன என்னும் கோட்பாடை ஒப்புக்கொள்பவர் புரிந்து கொள்ள முடியும். உலகக் கண்டங்கள் தற்போதுள்ள நில அமைப்பில் இருந்து பனிமண்டலத்தால் மூடிக் கிடந்ததாக அனுமானித்தால், பூமத்திய ரேகைக்கு வடபால் இருக்கும் கண்டங்களிலும் பனிமயம் சூழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அவ்விதம் வடகோளத் தில் பனிமயம் சூழ்ந்திருந்ததற்குப் பூதளவாதிகள் எந்த சான்றுகளும் காணவில்லை. மெய்யாக அச்சமயத்தில் வட அமெரிக்கா கண்டம் வெப்பக் கணப்பு சூழ்ந்ததாக இருந்ததாம்!
18,000 ஆண்டுகளுக்கு முன் எழுந்த பனியுகம், பூகோளத்தின் சராசரி உஷ்ணம் [சிறிதளவு 2 டிகிரி C (4 டிகிரி F)] குன்றி ஒரு காலத்தில் மீளலாம் என்று பூதளவாதிகள் அஞ்சுகின்றனர்! படையெடுக்கும் பனி மண்டலம் பூகோள வெள்ளத்தைச் சுண்ட வைத்து, கடல்நீர் மட்டம் குன்றிக் கண்டங்களின் சரிவுத் தோள்களை [Continental Shelves] தெரியும்படி ஆக்கிவிடலாம்! நியூயார்க் நகரம் பனிமூட்டமாகித் தடித்த பனித்தட்டு மூடி, எம்பெயர் ஸ்டேட் கட்டிடமே மூழ்கிப் போகலாம்! சிகாகோ, டெட்ராய்ட், டொராண்டோ, மாண்டிரியால் ஆகிய நகரங்களும் பனிச் சமாதியில் அடங்கி விடலாம்! ஜப்பான் ஆசியக் கண்டத்தின் நீட்சிப் பகுதியாகலாம்! இங்கிலாந்திலிருந்து பிரான்சு நாட்டுக்கு நடந்தே செல்லலாம். இந்தியாவிலிருந்து பாத யாத்திரை செய்து இலங்கைக்குப் போகலாம். அதே சமயம் மறுபுறம் பார்த்தால், பூமியின் வெப்பச் சூழ்மண்டலத்தில் ஒரு சில டிகிரி உஷ்ண ஏற்றத்தால் [2 C] துருவப் பனிப்பாறைகள் உருகி, உலக மெங்கும் தணிந்த தளப்பகுதிகள் யாவும் கடல்நீரில் மூழ்கிப் போகலாம்!
பூகோளத்தின் தட்ப வெப்ப நிலைகளை ஏற்றி, இறக்கி உலக மக்களைத் தவிக்க வைக்கும், இயற்கையின் யந்திர ஆற்றல்கள் விந்தையானவை! பூகோளச் சுற்று அச்சின் சரிவு [Tilt of Planet Axis], சுற்றிவரும் சுழல்வீதியின் மாறுபாடு [Changes in Earth 's Orbit], பரிதியின் தேமல்களால் [Sunspots] திரளும் கதிர்வீச்சின் உக்கிரம் [Swells of Radiation], எரிமலைகள் கக்கும் கரிமண்டல வாயுக்கள் சூழ்வெளியில் கலப்பு [Volcanic Activity Gas Emissions] ஆகியவை அவற்றில் முக்கிய மானவை! காலச் சிற்பி எரிமலைகளால் எழுப்பியுள்ள கடற்தீவுகளும், கண்டங்களில் உயர்த்தி யுள்ள கோபுரங்களும் உலக விந்தைகளாய் இன்றும் காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றன.
அமெரிக்காவின் வயாமியில் பக்கத்து பெல் ஃபவுச் நதி [Belle Fouche River] மட்டத்திலிருந்து 1253 அடி உயரம் எழுந்துள்ள ‘பிசாசுக் கோபுரம் ‘ [Devils Tower in Wyoming] உலகப் புகழ் பெற்றது! (700-3000) அடி உயரத்தில் ஏகவடிவப் பாறையாய்த் [Monolithic Phonolite Rock] தோன்றிப் பூமியின் உட்தளத்திலிருந்து தலைதூக்கி நிற்கும் அக்கோபுரம், எரிமலைக் குழம்பு நிரம்பிப் பனிப்புயல் அரித்துச் செதுக்கப்பட்ட சிற்பக் கோபுரம்! செந்நிறத்தில் பிரமிட் போல் தோன்றும் அக்கோபுரம் ஐம்புறம் கொண்டு கூம்பிய பல தூண்களை [Columns] உடையது! அதன் வயது சுமார் 40 மில்லியன் வருடம் என்று கணிக்கப்படுகிறது! அதுபோல் 50 அடி உயரமுள்ள ஆஸ்திரேலியாவின் அதிசய ‘அலைப்பாறை ‘ [Australia 's Wave Rock] இயற்கையின் பனிப்புயல் கோரப் பற்களால் அரிக்கப்பட்டதாகத் தெரிகிறது!
பூகோளக் கண்டங்களின் இடைப்படும் கடற்தளங்கள்
கடற்தளங்களின் வரைபடத்தைத் தயாரிக்க முதலில் குறிப்பிட்ட இடத்தின் ஆழம் அறியப்பட வேண்டும். ஒருகாலத்தில் கனத்த இரும்புக் கட்டியைக் கயிற்றில் தொங்கவிட்டுக் கடலின் ஆழங்கள் அளக்கப் பட்டன. அப்பணி களைப்பை உண்டாக்கிக் காலத்தை நீடிக்கும் ஒரு கடினப் பணி! தற்போது ஒலிச்சக்தி அதிர்வுகளை [Ultrasonic Pulses] உண்டாக்கி, எதிரொலி மீளும் நேரத்தைப் பதிவு செய்து கடலின் ஆழங்கள் துல்லியமாகப் பதியப் படுகின்றன. தொலைக்காட்சி காமிராகளை கடலில் இறக்கி, எரிமலைப் பீடங்களை படம் பிடித்துக் கொள்ளலாம். விரிந்த பெரும்பான்மையான கடற்தளப் பரப்புகள் சமதள மட்ட முடையவை. கடலின் உச்சத்தணிவுப் பகுதிகளில் [Abyssal Plains] புழுதிகள் மண்டிக் கிடக்கின்றன. ஆனால் கடலின் மற்ற பகுதிகளில் புள்ளி புள்ளியாகத் தெரியும் செத்த எரிமலைப் புண்களும், புகை கக்கிக் கொண்டிருக்கும் ஜீவனுள்ள எரிமலைச் சீறல்களும் காண முடிகிறது! அமெரிக்காவின் ராக்கி மலைத் தொடர் போன்றும், செங்குத்துமலைப் பள்ளத்தாக்குகள் [Canyon like Trenches] போன்றும், கடற்தளங்களிலும் காணப்படுகின்றன.
கண்டத்தின் தோள்சரிப்பு [Continental Shelf] என்றால் என்ன ? எரிமலைகள் உருவாக்கிய தீவுகளின் விளிம்புகள் ஏறக்குறைய செங்குத்தாகச் சரிந்து கடற்தளத்துடன் பிணைக்கப் படுகின்றன. ஆனால் உலகக் கண்டங்களின் கடல் விளிம்புகள் தணிந்த மட்டங்களில் தோள்சரிந்து தெரிகின்றன. இச்சரிவுகள் சுமார் 650 அடி ஆழம்வரை படிப்படியாகச் சரிந்து பிறகுத் திடாரென செங்குத்தான பள்ளமாகின்றன. மெல்லச் சாயும் தோள்சரிவு சுமார் 50 அல்லது 50 மைல் தூரத்துக்கும் குறைவாக கடலுள்ளே செல்லலாம். விதி விலக்காக சைபீரியாவின் தோள்சரிவு 800 மைல் தூரம் வரை ஆர்டிக்கடலில் நீள்கிறது.
உலகத்தின் கடல்கள் எத்தனை விதமான ஆழங்களில் இருக்கின்றன ? எல்லாவற்றிலும் குட்டையான கடல் சராசரி 5000 அடி ஆழமுள்ள ஆர்டிக்கடல். ஆனால் அதிலும் 17,880 அடி ஆழத்தில் உள்ள ஒரு பெரும் மலைத் தொடர் கடல் அரங்குகளைப் பிரித்துக் கொண்டிருக்கிறது. ஆர்டிக்கடலுக்கு அடுத்ததாக உள்ளது, சராசரி 13,000 அடி ஆழமுள்ள இந்துமாக் கடல்! அதில் உச்ச ஆழப்பள்ளம், 25,344 அடி ஆழத்தில் இருக்கும் ஜாவாக் குழி [Java Trench]! அடுத்தது சராசரி 14,000 அடி ஆழமுள்ள அட்லாண்டிக் கடல். அதில் உள்ள போர்டோ ரிக்கோ குழி 28,374 அடி ஆழமானது. எல்லாவற்றிலும் அகண்டதும், ஆழமானதாகவும் இருப்பது பசிபிக் மாக்கடல்! அதன் சராசரி ஆழம் 14,000 அடியே ஆனாலும், உச்ச ஆழம்: 36,198 அடி! அதாவது பசிபிக் மாக்கடலின் உச்ச ஆழம்: 7 மைல். இமயத்தின் உச்ச சிகரமான எவரெஸ்டை உச்சியை விட ஒருமைல் அதிக ஆழத்தில் பசிபிக் மாக்கடல் உள்ளது!
அட்லாண்டிக் கடற்தளத்தில் S-வளைவுபோல் சுற்றிய மைய அட்லாண்டிக் கடற்தட்டுப் பீடம் [Mid-Atlantic Ridge] ஐஸ்லாத்தின் தென்திசையில் ஆரம்பித்து 40,000 மைல் தூரம் மலைப் பாம்புபோல் நீண்டுள்ளது! மைய அட்லாண்டிக் பீடம் கடற்தட்டுப் பிறழ்ச்சியால் எரிமலைகள் ஏற்பட்டுப் பெருத்துக் கொண்டே போகும் நீண்ட மலைத்தொடர்! அவற்றைப் போல் பசிபிக் மாக்கடலும் ஆயிரக் கணக்கான அடிகள் உயர்ந்த கடற் குன்றுகள் [Seamounts] உள்ளன. ‘கையட்ஸ் ‘ [Guyots] எனப்படும் ஆழ்கடல் மலைகள் [Submarine Mountains] வேறு வடிவம் கொண்டவை. அவற்றின் தலை மட்டமாக வெட்டப் பட்டிருக்கும். ஒரு காலத்தில் கடல் மட்டம் தணிந்து அவற்றின் தலை வெளியே நீட்டப்பட்டு, கடல் அலைகள் சீவி விட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

(தொடரும்)
தகவல்:
1. The Continental Mosaic -Reader ‘s Digest Atlas of the World [1987]
2. Hutchinson Encyclopedia of the Earth By Peter Smith [1985]
3. Earth ‘s Restless Crust -ABC ‘s of Nature, Reader ‘s Digest [1984]
4. The Long Journey of Continents By: Ronald Schiller -The Marvels & Mysteries of The World Around US, Reader ‘s Digest Publication [1972]
5. Continental Drift & Plate Tectonics [www.zephryus.co.uk/geography/home.html] (Mar 20, 2003)
6. Pangaea, Gondwana, Laurasia, Plate Tectonics, Alfred Wegener From: Wikipedia Encyclopedia