திங்கள், 28 மார்ச், 2011

கூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள்


முன்னுரை:  1979 இல் அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் உலையில் நேர்ந்த யுரேனிய எரிக்கோல்கள் உருகிய விபத்தும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் நேர்ந்த செர்நோபிள் அணுமின் உலை வெடிப்பும் உலக மக்களுக்கு அச்சமூட்டி அதிர்ச்சிக்குள் தள்ளி விட்டுள்ளன.  பயங்கரச் செர்நோபிள் விபத்துக்குப் பிறகு 25 ஆண்டுகள் கடந்து ஜப்பானில் 2011 மார்ச் மாதம் 11 ஆம் தேதி 9.0 ரிக்டர் பேரழிவுப் பூகம்பமும் 30 அடி உயரப் பிரளயச் சுனாமியும் தூண்டி புகுஷிமாவில் அமைந்துள்ள நான்கு அணுமின் உலைகள் நிறுத்தமாகி அவற்றின் எரிக்கோல்கள் தணிப்பு நீரின்றி நீராவியில் ஹைடிரஜன் வாயு சேர்ந்து வெடிப்புண்டாக்கி அணு உலையின் இரண்டாம் கவசக் கட்டிடத்தின் மேற்தளங்கள் தூளாயின.  அதனால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிக் கதிரியக்கமும் வெளியேறிப் பணியாட்களும் சில பொதுநபரும் கதிரடி பெற்றர்கள்.  செர்நோபிள் விபத்து நிலை 7 (உச்சம்) என்றும் திரிமைல் தீவு விபத்து நிலை 5 என்றும் அகில உலக அணுசக்தி ஆணையகம் (IAEA – International Atomic Energy Agency) மதிப்பீடு செய்தது.  அந்த ஒப்பு நோக்கில் இப்போது ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகளின் விபத்து நிலை 4 லிருந்து 5 ஆக உயர்த்தப் பட்டுள்ளது.

இந்தியாவில் இப்போது 20 அணுமின் நிலையங்கள் (2011 மார்ச் வரை) இயங்கி 4780 MWe மின்சார ஆற்றலை மின்வடங்களில் பரிமாறி வருகின்றன.  அவற்றில் ஜப்பான் புகுஷிமா மாடல் அணுமின் உலைகள் போல் (BWR – Boiling Water Reactor) மேற்குக் கடற்கரை தாராப்பூரில் (மகாராஷ்டிரா) இரண்டு அணுமின் உலைகள், சுமார் 40 ஆண்டுகள் இயங்கி அவை ஓய்வெடுக்கும் காலம் நெருங்கி விட்டது.  தமிழ் நாட்டின் கிழக்குக் கடற்கரை ஓரம் இரண்டு கனநீர் அழுத்த அணுமின் உலைகள் 27 ஆண்டுகளாய் மின்சாரம் பரிமாறி வருகின்றன. தமிழகத்தின் தென்கோடி முனையில் கட்டுமானம் ஆகிவரும் கூடங்குளம் ரஷ்ய அணுமின் அணுமின் உலைகள் (VVER -1000) இரண்டில் ஒன்று ஓரிரு மாதங்களில் யுரேனிய எரிக்கோல்கள் இடப்பட்டு இயங்க ஏற்பாடுகள் துரிதமாய் நிகழ்ந்து வருகின்றன.


ஜப்பான் வடகிழக்குக் கடற்கரையில் புகுஷிமாவில் நேர்ந்த அணு உலைகள் விபத்திலிருந்து இந்திய அணுசக்தித் துறையினர் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பல இருக்கின்றன.  திரிமைல் தீவு, செர்நோபிள் விபத்துகளுக்குப் பிறகு இந்திய அணுமின் உலைகள் செம்மை ஆக்கப்பட்டன. அதைப் போல் முதலில் கடற்கரை அணுமின் நிலையங்களில் அபாயப் பாதுகாப்பு வெப்பத் தணிப்பு நீர் வசதிகள் இரட்டிப்பு அல்லது முப்புற முறைகளில் மேம்படுத்தப்பட வேண்டும்.  எல்லாவற்றுக்கும் மேலாக அணுமின் உலைகளைப் பற்றியும் கதிரியக்கப் பாதுகாப்பு பற்றியும் நகரங்கள் அனைத்திலும் பொதுமக்களுக்கு அறிவு புகட்டும் காட்சியகங்கள் அமைக்கப்பட வேண்டும்.  அணுமின் உலைக்கு 25 மைல் அருகில் வாழ்வோருக்கு அபாய காலப் பாதுகாப்புப் பயிற்சிகள் ஒவ்வோர் ஆண்டும் அளிக்கப் படவேண்டும்.
அந்த கருத்தோட்டத்தில் முதன்முதல் கூடங்குளம் அணுமின் உலைகள் பாதுகாப்பு பற்றி எனது தனிப்பட்ட ஆய்வுக் கட்டுரை மீண்டும் வெளியாகிறது.
+++++++++++++++++++++++++++++++
1986 ஆம் ஆண்டு செர்நோபிள் அணுமின் உலை வெடித்துச் சீர்குலைந்த இரண்டு ஆண்டுக்குள் தேர்ந் தெடுக்கப் பட்ட ரஷ்யப் பூத அணுமின் உலை இது! சோவியத் யூனியன் கவிழ்ந்த பிறகு பனிரெண்டு ஆண்டுகள் நிதிவளம் வற்றி மறந்து போன மாடல் இது! மீண்டும் உயிர்த் தெழுந்து நெல்லை மாவட்ட நிலப் பிரச்சனைப் போராட்டத்தில் பிழைத்து, 2001 மார்ச் 31 இல் அடித்தள மிட்டுக் கூடங்குளத்தில் உருவாகப் போகும் 2000 MWe ஆற்றல் கொண்ட இரட்டை அணுமின் உலையில் புதிய முற்போக்குப் பாதுகாப்பு முறைகள் எவை எல்லாம் இணைக்கப் பட்டுள்ளன ? 45 ஆண்டுகள் அணு உலை இயக்கம், பராமரிப்பு, பயிற்சி, பாதுகாப்பு ஆகிய துறைகளில் பாரதத்திலும், கனடாவிலும் பணி ஆற்றிய எனது அனுபவத்தில் கூறிய தனிப்பட்ட ஆய்வுக் கருத்துக்கள் இவை.

பாரதத்தின் மூன்றாவது அன்னிய அணுமின் நிலையம்!
தமிழ்நாட்டின் தென் கோடியில் உள்ள கூடங்குளத்தில் ரஷ்யாவின் VVER-1000 என்னும் 1000 MWe ஆற்றலுள்ள இரட்டை அழுத்தநீர் அணு மின்சக்தி நிலையம் [Pressurised Light Water Reactor] உருவாகி வருகிறது! அழுத்த நீர் வெப்பக் கடத்தியாகவும், மிதவாக்கியாகவும் [Light Water Coolant & Moderator], செறிவு யுரேனியம் [(2%-4%) U235 Enriched Uranium] அணு எருவாகவும் பயன் படுத்தி  இயங்கும் இந்த வெப்ப அணு உலை [Thermal Reactor] பாரதம் வாங்கும் மூன்றாவது அன்னிய மாடல் அணுமின் உலையாகும்! தாராப்பூரில் முதல் மாடல் அமெரிக்க டிசைனிலும், ராஜஸ்தானில் இரண்டாவது மாடல் கனடா டிசைனிலும் அமைக்கப் பட்டன. இந்தியாவில் கட்டப் பட்ட அணுமின் உலைகள் யாவற்றிலும் மிகப் பெரும் ஆற்றல் கொண்டது VVER-1000 அணுமின் உலை! 1988 ஏப்ரலில் அங்கீகரிக்கப் பட்ட அத்திட்டம், சோவித் யூனியன் கவிழ்ந்த பிறகு போதிய நிதி உதவியின்றி ஒதுக்கி வைக்கப் பட்டது! மறுபடியும் அது உயிர்ப்பிக்கப் பட்டு, 2001 மார்ச் மாதம் 31 ஆம் தேதி கூடங்குளத்தில் அடித்தள வேலைப்பாடுகள் தொடங்கின! அதன் நிறுவக இயக்கப் பணிகள் யாவும் முடிந்து, 2007 ஆம் ஆண்டில் முதல் யூனிட்டும், 2008 இல் இரண்டாம் யூனிட்டும் மின்சக்தி பரிமாறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது!

1986 ஏப்ரல் மாதம் சோவியத் ரஷ்யாவில் வெடித்துப் பேரதிர்ச்சி உண்டாக்கிய செர்நோபிள் அணுமின் உலை [1000 MWe, RMBK Model Unit.4] வேறொரு மாடல் ஆயினும், அதன் அணு மையக்கருவில் 1661 எரிக்கோல்கள் சூடேறி எரிந்துருகி, 80 மில்லியன் கியூரி கதிரியக்கம் சூழ்வெளி யெங்கும் வெளியேறிச் சுமார் 400,000 மாந்தர் பாதிக்கப் பட்டு அடுத்த பத்தாண்டுகளில் 15,000 பேர் மாண்டதாக அறியப்படுகிறது! அணுயுகத்தின் 60 ஆண்டு வரலாற்றிலே அணுமின் உலை விபத்தில் அழிவுப் புரட்சியை உண்டாக்கிய கடும் இதயப் புண்கள் ஆறுவதற்குள், 1988 ஆம் ஆண்டிலே ரஷ்யாவின் மேறொரு மாடல் [VVER-1000 Model] அணுமின் உலையை, இந்தியா தமிழ் நாட்டுக்குத் தேர்ந்தெடுத்தது மாபெரும் ஐயத்தையும் அச்சத்தையும் உண்டாக்குகிறது!
இந்திய அரசு ரஷ்ய அணுமின் உலையை ஏன் தேர்ந்தெடுத்தது ?
தொழிற் துறைகள் பன்மடங்கு பெருகி வரும் பாரதத்தின் மின்சக்தித் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதைப் பூர்த்தி செய்யும் முயற்சியில் அணுமின் சக்தி உற்பத்திப் பங்கை மிகையாக்க பாரதம், தற்போது இரண்டு 500 MWe அழுத்தக் கனநீர் அணுமின் உலைகளைத் தாராப்பூரில் கட்டி அவை இரண்டும் இயங்கி மின்சாரம் பரிமாறி வருகின்றன.  2020 ஆண்டுக்குள் 20,000 MWe ஆற்றல் அணுமின் சக்திப் பெருக்கத்தை உற்பத்தி செய்யும் எதிர்நோக்கத்தின் முதற்படியாக, 1000 MWe பூத அணு உலைகளை அமைக்கத் திட்டமிட்டு, அதை நிறைவேற்றி வருகிறது.
1974 இல் பொக்ரான் அடித்தள அணு ஆயுத வெடிப்புக்குப் பிறகு அமெரிக்கா, கனடா, மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இந்தியாவுக்கு அணுவியல் துறை விருத்திக்கு எந்த விதத் துணையும் புரிவதில்லை என்று வெளிப்படையாகவே அறிவித்து விட்டன! 220 MWe ஆற்றலுள்ள அழுத்தக் கனநீர் அணுமின் நிலையங்களை அடுத்தடுத்துக் கட்டிவரும் பாரதம் அலுப்படைந்து, மற்ற உலக நாடுகளைப் போல் தானும் அவற்றை விடப் பெரிய 500 MWe, 1000 MWe ஆற்றல் கொண்ட மின்சக்தி நிலையங்களை, நிறுவ வேண்டுமென வேட்கை கொண்டது! அந்த முயற்சியில் பேராற்றல் கொண்ட அணுமின் நிலையங்களுக்கு அன்னியக் கூட்டுறவு முறையில் டிசைன், நிறுவகம், இயக்கம் & பராமரிப்பு, நிதிப்பணம் [Design, Construction, Operation & Maintenance & Finance] ஆகிய நான்கு துறைகளில் கைகொடுக்கும் ஓர் அன்னிய நாட்டைப் பாரதம் பல்லாண்டுகளாகத் தேடிக் கொண்டிருந்தது!

முன்வந்த பிரான்ஸ், சோவியத் யூனியன் ஆகிய இரண்டு தேசங்களில், முடிவாகச் சோவியத் ரஷ்யாவின் கூட்டு உடன்படிக்கை 1988 இல் வெற்றி பெற்றது! ஆனால் அத்திட்டம் முளைத்து எழுவதற்குள், சோவியத் யூனியன் கவிழ்ந்து சிதறிப் போனதால், எஞ்சிய ரஷ்யா பணமுடையில் தனியாய்த் தவித்தது! அமெரிக்க, ஐரோப்பிய உதவியில் மீண்டும் தலைதூக்கிய ரஷ்யா, 2001 ஆண்டில் தனது 1000 MWe ஆற்றலுடைய, புதுப்பிக்கப் பட்ட VVER-1000 மாடல் இரட்டை அணு மின் நிலையத்திற்கு நிதி யளித்துப் பாரதத்தில் கட்டி முடிக்க மறுபடியும் முன்வந்தது!
அன்னிய உதவியில் அணு உலை, அணு உலைச் சாதனங்கள், முதல் முறை ஊட்ட எரிக்கோல்கள், நீராவி ஜனனிகள், அணு உலை ஆட்சிக் கருவிகள் போன்றவை ரஷ்யாவிலிருந்து வந்தாலும், பொதுத்துறை நீராவிச் சாதனங்கள், மின்சார ஜனனி, டிரான்ஸ்பார்மர்கள், [Conventional Power Equipment] முறுக்கப்பட்டு உறுதியான இரட்டைக் கான்கிரீட் அரண்கள் [Prestressed, Reinforced Concrete Double Containment] மற்றக் கட்டிட வேலைகள் யாவும் உள்நாட்டுத் தொழிற் துறை நிர்வாகங்கள் மூலம் அமைக்கப்படும்.

பூத அணுமின் நிலையம் நிறுவக் கூடங்குளம் ஏன் தேர்ந்தெடுக்கப் பட்டது ?
பாரதத்தின் தென்கோடி எல்லையான கன்னியா குமரி முனைக்கருகில் 15 மைல் வடகிழக்கே, திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகாவில் உள்ளது, கூடங்குளம். அருகில் உள்ள பெரு நகரம் நாகர்கோயில் 21 மைல் தூரத்தில் அதற்கு மேற்கே இருக்கிறது. அகில நாட்டு அணுசக்திப் பேரவை [International Atomic Energy Agency, IAEA] வகுத்த வரையறைகளைப் பின்பற்றி இந்திய அணுசக்தித் துறையகம், 13 கடல்கரைத் தளங்கள், 5 உள்நாட்டுத் தளங்கள் ஆகியவற்றைத் தமிழ் நாட்டில் உளவுகள் செய்ததில், 2000 MWe ஆற்றல் அணுமின் நிலையத்தை அமைக்கக் கூடங்குளமே பலவகை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தது! அணு உலைப் பாதுகாப்பு, சூழ்நிலைப் பராமரிப்பு, நிதிச் சிக்கனம், பொறி நுணுக்கம், சமூக வரவேற்பு போன்ற பிரச்சனைகளை முன்னோக்கி உளவுகள் செய்ததில், கூடங்குளம் மிக்க மதிப்பு பெற்றதாக அறியப் படுகிறது! ஏராளமானக் கொள்ளளவு நீர் கொண்ட கடலும், மக்கள் தொகை குன்றிய ஒதுக்குப் புற இட அமைப்பும், கூடங்குளத்தின் சிறப்பு அம்சங்கள்.

கீழ்க்காணும் ஒப்புறவுப் பண்புகளில் கூடங்குளம் மிக்கத் தகுதியுள்ள தளமாகக் கருதப்படுகிறது:
1. தேவைக்குரிய ஆழத்தில் கடும்பாறை கொண்ட தளம், உறுதியான அணு உலைக் கான்கிரீட் அரண் [Concrete Containment] அடித்தளத்திற்கு உகந்தது.
2. பூகம்ப எழுச்சி எதிர்பார்ப்பில் குறைவாக எதிர்பார்க்கப் படும் பூகம்பக் களம்-2 [Seismic Zone II] வகுப்பைப் சார்ந்தது, கூடங்குளம். பூகம்பதைத் தூண்டி விடும் மாபெரும் ஏரிகள், நீரணைகள் போன்ற எந்தப் பழுதுத் தொல்லைகளும் அருகே இ ல்லை.
3. சூறாவளி மழை யடிப்பு, கடல் பொங்கித் தாக்கல், கடல் அலைகளின் ஏற்ற இறக்கம் ஆகிய பிரச்சனை அங்கே யில்லை. கடல் வெள்ளம் 20 அடி உச்சத்தில் எழலாம் என்று எதிர்பார்க்கப் படுவதால், அணு உலைக் கட்டிடம் அந்த அளவுக்கு மேலாகவே அமைக்கப்படும்.
4. கடல் நீரே டர்பைன் நீராவித் தணிப்பு நீராகப் பயன்படும். ரசாயனக் கழிவு நீர்களும், கதிர்வீசும் திரவங்களும் வடிகட்டப் பட்டு, கனிச அளவில் நலிந்து வெளியேற்றப் படத் [Dilution of Effluents] தேவைப் படும் ஏராளமான கொள்ளளவு நீரை அளிக்கக் கடல் அருகே உள்ளது.
5. அணு உலைப் புறக்கணிப்புக் களத்திலிருந்து [Exclusion Zone] 1.2 மைல் ஆரத்தில் மாந்தர் நடமாட்டம் எதுவும் இல்லை. வேளாண்மைக்குத் தகுதியற்ற பொட்டல் காடான அந்த நிலங்களில், எந்த விதப் பயிர் விளைச்சலும் கிடையாது! 18 மைல் ஆரத்தில் மக்கள் தொகை நெருக்கமான எந்த ஊரும் அருகே இல்லை!
6. கூடங்குளத்தை எப்போதும் அணுக நல்ல வீதி, ரயில் பாதை, கடல் மார்க்கம் அமைந்து இருப்பது சிறந்த அம்சங்கள். அகல் பாதை ரயில் நிலையம் கொண்ட கன்னியா குமரி 16 மைல் தூரம். அடுத்துக் கப்பல் துறைமுகம் உள்ள தூத்துக்குடி 60 மைல் தூரம்.
7. மனிதர் ஏற்படுத்தும் விமான விபத்துகள், ரசாயன நஞ்சுகளால் ஏற்படும் விளைவுகள், ரசாயன ராணுவ அபாயங்கள் போன்றவை எவையும் நேர்ந்திட எந்த வித அமைப்புகளும் அருகே கிடையாது.

ரஷ்ய அணுமின் நிலையத்தில் செய்த புதிய பாதுகாப்பு மாறுதல்கள்
முற்போக்கான புதிய VVER-1000 அணு உலைகள் IAEA தயாரித்த பாதுகாப்புத் தத்துவங்களைப் பின்பற்றி, அகில நாட்டு அழுத்த நீர் அணு உலைகளின் [International Pressurised Water Reactors (PWR)] மேம்பாடுகளுக்கு இணையானவை என்று ரஷ்ய டிசைன் பதிப்பிதழ்களில் அறியப் படுகிறது. 2001 ஆண்டு வரை ரஷ்யா தனது புதிய VVER அணு உலை இயக்கத்தில் 1000 உலை ஆண்டு [1000 reactor years Operating Experience] அனுபவம் பெற்று இருப்பதாக இறுமாப்புக் கொள்கிறது! 1996 டிசம்பர் வரை இருபது VVER-1000 அணுமின் உலைகள் [ரஷ்யாவில் 7, பல்கேரியாவில் 2, யுக்ரேயனில் 11] இயங்கி வருவதாக அறியப் படுகிறது!
VVER-1000 அணுமின் உலையில் ‘செறிவு யுரேனியம் ‘ [Enriched Uranium, (2%-4%)U235 rest U238] எருவாகவும், அதில் எழும் வெப்பத்தைத் தணிக்கும் முதல் கடத்தி நீராகவும் [Primary Coolant], நியூட்ரான் மிதவாக்கி [Neutron Moderator] நீராகவும், கொதிகலனில் வெப்பக் கடத்தி [Secondary Coolant] நீராகவும் தனித் தனியாக மூன்று பணிகளில் நீர் பயன்படுகிறது. VVER-1000 அணு உலைகளில் மாடல் 320, மாடல் 392 என்று இரண்டு விதம் உள்ளன. இரண்டில் VVER-1000 மாடல் 320 மிகவும் பிற்போக்கானது! அது செர்நோபிள் RMBK-1000 அணு உலை போல் கான்கிரீட் ஸ்டால் அரண் இல்லாதது! அபாய வெடி விபத்து எதுவும் நேர்ந்தால், மாடல் 320 அணு உலைக் கதிரியக்கப் பொழிவுகள் வெளியேறிச் சூழ்மண்டலக் காற்றில் பரவும் வாய்ப்புள்ளது!

VVER-1000 மாடல் 392 இல் இருக்கும் ஒரே ஒரு வேறுபாடு, அது இரட்டைக் கான்கிரீட் அரண்களை உடையது. வெளி அரண் ஒன்றும் அடுத்துக் கதிரியக்கக் கசிவை முற்றிலும் தடுக்க ஓர் ஸ்டால் கவசமும், ஒரு மீட்டர் தடிமன் கொண்ட உள் அரணுடன் இணைக்கப் பட்டுள்ளது! இரண்டு அரண்களுக்கும் நடுவே உள்ள இடைவெளி சூன்ய மாக்கப் பட்டுக் கீழ் அழுத்தத்தில் [Negative Pressure (Partial Vacuum)] பராமரிக்கப் பட்டு வருகிறது! அவ்வித அமைப்பில் கதிர்வீச்சு வெளியேற்றம் முற்றிலும் தடுக்கப் படும்; அல்லது மிக மிகக் குறைந்த அளவு வெளியேறும்.
முற்போக்கு VVER-1000 அணு உலையில் அடுத்த ஓர் மாறுபாடு, தீவிர அபாய விபத்து நேரும் சமயத்தில், அதைத் தடுத்துக் கையாளும் பராமரிப்பு ஏற்பாடுகள், அணு உலையோடு இணைக்கப் பட்டிருப்பது.
விபத்து நேர்ந்த முதல் 24 மணி நேரம், நின்ற அணு உலைச் சூட்டைத் தணிக்க, இயக்குநர் குறுக்கீடு இல்லாமல் தானே நிகழும் ‘சுய இயக்க வெப்ப நீக்கும் முறைப்பாடு ‘ [Passive Heat Removal System] சேர்க்கப்பட்டுள்ளது.
முற்றிலும் அணு உலையை நிறுத்த முதற் தடுப்பு செய்யும் தடைக் கோல்கள் யாவும் தானாக இயங்குபவை! [Automatic First Shutdown System]. ஆறும் பூரணத் தொடரிக்க விளிம்பை [Sub-criticality Margins] நிலைநாட்ட மிகையான அணு உலை ஆட்சிக் கோல்கள் அமைக்கப் பட்டுள்ளன. அடுத்து போரான் நஞ்சை உட்செலுத்தி [Boron Poison Injection] அணு உலை மீறலைத் நிறுத்த இரண்டாவது விரைவுத் தடுப்பு ஏற்பாடு [Second Quick acting Shutdown System] ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளது!

அணு உலையில் மிஞ்சிச் சேமிக்கப் படும் ஹைடிரஜன் வாயு தீப்பிடிக்க வாய்ப்பில்லாமல், ‘மீள் இணைப்பிகள் ‘ [Hydrogen Recombiners] மூலம் ஆக்ஸிஜனுடன் சேர்க்க வைத்து, நீராக மாற்றப் படுகிறது!
அணு உலையின் கதிர்வீசும் மையக்கருவில் [Radioactive Fuel Core] உலை இயங்கினாலும், அன்றி நிறுத்தப் பட்டாலும் தொடர்ந்து உண்டாகும் வெப்பம் எப்போதும் தணிக்கப்பட வேண்டும்! அபாயத் தடுப்பு மின்சாரம் பரிமாறாத [Emergency Power Supply] சமயத்தில் ‘வெப்பக் கடத்தி இழப்பு விபத்து ‘ [Loss of Coolant Accident (LOCA)] நேர்ந்தால், எரிக்கோல்களின் கனலை விரைவில் தணிக்க, ‘அணு உலை மையக்கரு நீர் வீழ்ச்சி ஏற்பாடு ‘ [Reactor Core Flooding System] இணைக்கப் பட்டுள்ளது!
ஆரம்பத்தில் கட்டிய அன்னிய அணுமின் நிலையங்கள்
முதல் அன்னியக் கொதிநீர் இரட்டை அணுமின் உலைகள் [160 MWe Boiling Water Reactor by General Electric Co. USA], பம்பாயிக்கு அருகே தாராப்பூரில் அமைக்கப் பட்டன. இரண்டாவது கனடாவின் ‘காண்டு ‘ அழுத்தக் கனநீர் இரட்டை அணு உலைகள் [200 MWe CANDU, Pressurized Heavy Water Reactor] ராஜஸ்தான் ராவட்பாட்டாவில் உருவானது. அவை நான்கும் இயங்கி வரும் போது, அடுத்து சென்னைக் கல்பாக்கத்தில் இந்திய வல்லுநரால் சிறிது மாற்றம் செய்யப் பட்ட இரட்டைக் ‘காண்டு ‘ கனநீர் அணு உலைகள் [170 MWe] நிறுவன மாயின.

1974 மே மாதம் பொக்ரானில் பாரதம் செய்த அடித்தள அணு ஆயுத வெடிப்புப் பிறகு, அணுமின் நிலையங்களை இந்தியாவில் கட்டிய அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாடுகளும் தமது அணுவியல் தொடர்பை முறித்துக் கொண்டதோடு, மற்ற உலக நாடுகளும் பாரதத்திற்கு அணுவியல் சாதனங்களை விற்கா வண்ணம் வலுவாகத் தடை செய்தன!
அழுத்தக் கனநீர் அணு உலைகளுக்கு வேண்டிய இயற்கை யுரேனியம், அதைச் சுத்திகரித்து எரிக்கோல் ஆக்கும் தொழிற் சாலைகள் [Rare Earth, Fuel Fabrication Plants] பாரதத்தில் அமைக்கப் பட்டதால், காண்டு அணுமின் உலைகள் தொடர்ந்து ஓடுவதில் எந்தப் பிரச்சனைகளும் இல்லை! ஆனால் கொதிநீர் அணுமின் உலைகளுக்குத் தேவையான, செறிவு யுரேனியத்தை அமெரிக்கா அனுப்ப மறுத்ததால், அவற்றின் இயக்கம் ஓரளவு பாதிக்கப் பட்டது! பாரதம் தனது பொறி நுணுக்கத்தால், செறிவு புளுடோனியத்தை [(2%-3%) Pu239 Enriched Fuel (PuO2)] எருவாய்ப் பயன்படுத்த விருத்தி செய்து, கொதிநீர் அணு உலைகளை இயக்கியது! அடுத்துச் சைனா இந்தியாவுக்குச் செறிவு யுரேனியத்தை விற்க முன் வந்தது!

1974 ஆண்டு முதல் தனியே விடப்பட்ட பாரதம், ஏறக் குறைய எல்லாவித அணுவியல் சாதனங்களையும், அன்னிய நாடுகளின் உதவி யின்றி உள்நாட்டிலே உற்பத்தி செய்வதில் மகத்தான வெற்றியைக் கண்டுள்ளது! முன்னேறி வரும் நாடுகளில், பாரதமே முதலாக அணுமின் சக்தி உற்பத்தித் துறையில் டிசைன், தயாரிப்பு, நிறுவகம், இயக்கம், பராமரிப்பு, பாதுகாப்புக் கட்டுப்பாடு, பயிற்சி ஆகிய அனைத்திலும் திறமை பெற்றுத் தன் கால்களிலே நிற்கிறது! இந்தியப் பொறி நுணுக்கத் தொழிற் சாலைகள் பலவற்றின் பேரளவுப் பங்கெடுப்பால், அடுத்து பத்துக் [ஐந்து இரட்டை] கனநீர் அணுமின் நிலையங்கள், கல்பாக்கம் [சென்னை, 2X170 MWe], நரோரா [உத்திரப் பிரதேசம் 2X220 MWe], கக்ரப்பார் [குஜராத் 2X220 MWe], கைகா [கர்நாடகா 2X220 MWe], ராவட்பாட்டா [ராஜஸ்தான் 2X220 MWe] ஆகியவை நிறுவனமாகி, 1984 ஆண்டு முதல் அவை யாவும் இயங்கி வருகின்றன!

பாரதம் 220 MWe கனநீர் அணுமின் நிலையங்களை அமைத்தபின், அடுத்து இந்தியாவின் முதல் 500 MWe இரட்டைக் கனநீர் அணுமின் நிலையங்களை டிசைன் செய்து, தாராப்பூரில் 1998 இல் கட்டத் துவங்கி 2002 டிசம்பர் வரை 60% வேலைப்பாடுகள் முடிந்துள்ளன.
புதிய அணுமின் உலை டிசைனில் பாதுகாப்பு உறுதிப்பாடுகள்
VVER-1000 அணு உலையை அபாய வெடிப்பிலிருந்து காக்கும் ‘உள்ளடங்கிய பாதுகாப்புத் திறமைப்பாடுகள் ‘ [Inherent Safety Features] முக்கியமாக இரண்டு:
1. கீழ் நோக்கிக் குன்றிவிடும் மின்னாற்றல் பண்பு [Negative Power Coefficient]. இம்முறைப்படி, அணு மையக்கரு வெப்ப உயர்ச்சி எந்த முறையிலும் மீறிவிடாமல் தானாகத் தணிந்து அடங்கிவிடும் தன்மை கொண்டது! [Any abnormal increase in reactor power is self-terminating]. விளக்கமாகச் சொன்னால் ஏதாவது ஒரு சம்பவம் தூண்டி, மிகையான வெப்ப சக்தி கிளம்பி விபத்துக்கள் நேர்வதும், அதனால் அணு மையக்கரு [Reactor Core] உடைந்து போவதும் அபூர்வ நிகழ்ச்சிகள்!
2. கீழ் நோக்கிக் குன்றிவிடும் வெற்றிடப் பண்பு [Negative Void Coefficient]. இம்முறைப்படி, அணு மையக்கருவுக்குப் பிரதம வெப்பக் கடத்தி நீரில்லாது போனால், மித வேக நியூட்ரான்கள் குன்றிப்போய், அணு உலைத் தானாக நின்றுவிடும். [Loss of Primary Coolant to the Fuel Core causes the Reactor to shutdown by itself due to lack of thermal neutron production]
3. அபாய மின்சக்தி [Emergency Power Supply] இல்லாத சமயத்தில், நிறுத்தமான அணு உலையில் எழும் மிஞ்சிய வெப்பத்தைக் குறைக்க, அழுத்தவிசையில் 24 மணி நேரம் நீர் வெள்ளம் கொட்டும் பாதுகாப்பு ஏற்பாடு தானாக இயங்க அமைக்கப் பட்டுள்ளது.
4. கதிரியக்க வெளியேற்றத்தை அடக்கிக் கொள்ளும், கசிவற்ற இரட்டைக் கான்கிரீட் அரண்கள் உள்ளன. [Prestressed Concrete Containment]. உள்ளரண் மட்டுமே 1 மீட்டர் [40 அங்குலம்] தடிமன் கொண்டது! அத்துடன் கதிர்வீச்சுக் கசிவுகளை முற்றிலும் தடுக்க அதன் உட்புறம் 8 mm தடிமன் ஸ்டால் கவசம் பூண்டது.

செர்நோபில் விபத்துபோல் VVER அணுமின் உலையில் அபாயம் நிகழுமா ?
சீர்குலைந்த செர்நோபிள் RMBK-1000 அணு உலை VVER-1000 அணு உலையைப் போலின்றி முற்றிலும் வேறுபட்டது! செர்நோபிள் அணு உலையில் நியூட்ரான் மிதவாக்கியாகப் பயன்பட்டது திரள்கரி [Graphite Moderator]. நிகழ்ந்த இரண்டு வெடிப்புகளில் ஒன்று சூடான திரள்கரியால் தூண்டப் பட்டது! திரள்கரிக்குச் சீர் கேடான ஓர் பண்பு உள்ளது. அணு உலைத் தொடர்ந்து இயங்கும் போது நியூட்ரான்கள் திரள்கரியைத் தாக்கி, ‘விக்னர் சக்தி ‘ விளைவால் [Wigner Energy Effect] அதன் உள் உஷ்ணம் ஏறிக் கொண்டே போகிறது. அணு உலை நிறுத்தப் பட்டாலும், திரள்கரியின் உஷ்ணம் குன்றுவதில்லை! ஆகவே அணு உலை விபத்தின் போது நீரிலிருந்து பிரிவு படும் ஹைடிரஜன் வாயு தீவிரத் தீப்பற்றி வெடிக்க ஏதுவாகிறது! ஆனால் VVER-1000 அணு உலையில் நீர் மிதவாக்கியாகப் பயன்படுவதால், அத்தகைய அபாயம் இல்லை!
அடுத்துச் செர்நோபிள் அணு உலைக்கு கான்கிரீட் அரண் [Concrete Containment] இல்லாததால், வெடி விபத்தின் போது கதிரியக்கப் பொழிவுகள் எளிதாக வெளியே சூழ்மண்டலத்தில் பரவ வழி திறந்தது! VVER-1000 இல் இரட்டை அரண் உள்ளதால், கதிரியக்க விளைவுகள் வெளிக் காற்றில் கலப்பது அறவே தடுக்கப் படுகிறது!
செர்நோபிள் வெடி விபத்து மனிதர் செய்த பல தவறுகளால் ஆரம்ப மானது! RMBK-1000 அணு உலை முதலிலே புறக்கணிக்கப் பட்ட பல டிசைன் பழுதுகளால் ஏற்பட்டது! சுய இயக்கப் பாதுகாப்பு முறைப்பாடுகள் சோதனை செய்யும் போது நீக்கப் பட்டு, விரைவாக மீறும் அணு உலையைக் கட்டுப்படுத்த மாந்தர் தாமாகக் கையாள முயன்றதால் நிகழ்ந்தது! அபாயத் தடுப்பு வெப்ப நீக்க ஏற்பாடுகளும் சோதனைக்காக ஒதுக்கப் பட்டதால் விபத்து நேர்ந்தது! நிச்சயமாக அந்தக் கோர விபத்து, பாரதத்தில் உருவாகும் ரஷ்யாவின் புதிய VVER-1000 அணுமின் உலையில் ஒருபோதும் நிகழவே நிகழாது!

பூகம்ப அதிர்வால் எதிர்பார்க்கும் விபத்துகளும் அணு மையக்கருப் பாதுகாப்பும்
2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ‘திண்ணை ‘ அகிலவலை வார முகப்பில் டாக்டர் இரா. இரமேஷ் எம்.பி.பி.எஸ் ‘நிலவியல் பிரச்சனைகள் நிறைந்த நெல்லை மாவட்டமும், கூடங்குளம் அணுமின் நிலையமும் ‘ என்னும் அழுத்தமான ஓர் கட்டுரையை வெளியிட்டுள்ளார்! அவர் எழுதிய ‘கூடங்குளம் அணுமின் நிலையமும், தென் தமிழகத்தின் பூகம்பவியலும் ‘ என்ற நூலின் சுருக்கமே அந்தக் கட்டுரை. கூடங்குள அணுமின் உலை சம்பந்தமாக அணுவியல் துறையகம் செய்ய வேண்டிய பணிகளை அவர் சுட்டிக் காட்டியது யாவும் வரவேற்கத் தக்கதே! அவற்றில் VVER-1000 அணுமின் உலைப் பாதுகாப்பு பற்றிய பெரும்பான்மையான உளவுப் பதிப்பீடுகள் அணுசக்தி துறையகத்தில் உள்ளன என்பது ஆசிரியரின் கருத்து.
பூகம்பத்தின் போது பிரதம வெப்பக் கடத்திக் குழாய்கள் உடைந்து போனால், அணு உலையின் கதி என்ன ஆகும் என்றொரு கேள்வி அதில் எழுந்துள்ளது! அதனால் அணு மையக்கருவின் வெப்பம் தணியாது, சூடேறி ஒரு கட்டத்தில் உருக ஆரம்பித்து ஒரு பெரு விபத்து ஏற்படச் சூழல் உருவாகுமே என்று டாக்டர் இரமேஷ் கேட்கிறார்.

முதலில் பிரதம வெப்பக் கடத்தி நீர் இழப்பால் [Loss of Coolant Accident (LOCA)], அணு உலைத் தானாக நின்று, வெப்ப வளர்ச்சி குன்றுகிறது. இரண்டாவது உடனே ஆறும் மையக்கருவின் எஞ்சிய தொடர் வெப்பத்தைத் தணிக்க, 24 மணி நேர அழுத்த நீர் வெள்ளம் பாய்ச்சும் ஏற்பாடுகள், ஈர்ப்பியல் முறையில் [Gravity Flooding] இயங்க அரணுக்குள் அமைக்கப் பட்டுள்ளன. பூகம்ப ஆட்டத்தின் போது எவை உடையும், எப்படி உடையும், எங்கே உடையும் என்பதை உறுதியாக நிர்ணயம் செய்ய முடியாது. அபாயப் பாதுகாப்புக்கு அருகிலே கடல் வெள்ளம் கொட்டிக் கிடப்பதை நாம் மறக்கக் கூடாது! எந்த வித விபத்து நேர்ந்தாலும், அணு உலை வெப்பத்தைத் தணிக்க, கடல் வெள்ளம் கடைசியாகக் கை உதவிக்குக் கண் எதிரே நமக்காகக் காத்துக் கிடக்கிறது!
செர்நோபிள் அணு உலை வெடித்து எரியும் போது, ஹெலிகாப்டரில் பறந்து கொண்டு டன் கணக்கில் கான் கிரீட்டைக் கொட்டித் தீயை அணைத்து கதிர்வீச்சைக் குறைத்தார்கள்! கூடங்குளத்தில் கடல் வெள்ளம்தான் கடைசி உதவி! பூத அணுமின் உலை இயங்க ஆரம்பிக்கும் முன்பு, பொது மக்களுக்கு அபாய விளைவுப் பயிற்சி முறைபாடுகள் [Emergency Preparedness] அறிவிக்கப் படும் என்றும், அதற்காகப் பயிற்சி அளிக்கப் படும் என்பது ஆசிரியரின் கருத்து.

ரஷ்ய அணுமின் நிலையப் பராமரிப்பில் ஏற்படும் சில ஐயப்பாடுகள்
இந்தியாவில் உள்ள அமெரிக்காவின் கொதிநீர் அணு உலை, கனடாவின் அழுத்தக் கனநீர் உலை, ரஷ்யாவின் அழுத்தநீர் அணு உலை ஆகிய மூன்று அன்னிய அணுமின் நிலையங்களில் எது சிறப்பாக, பாதுகாப்பாக இயங்கும் என்பது ஒரு முக்கிமான கேள்வி! எல்லாவற்றிலும் பிற்போக்கான, நிதி மிகச் செலவாகும், பழைய அணு உலை சந்தேக மின்றி, அமெரிக்காவின் கொதிநீர் அணு உலையே! எல்லாவற்றிலும் கதிரிக்கச் சிக்கல்களும், கதிர்த் தீண்டல் பிரச்சனைகளும் [Severe Radioactive Contamination] மிகையானது கொதிநீர் அணு உலையே! காரணம் நீராவி, ஜனனியில் [Steam Generator] உற்பத்தி யாகாமல், நேரடியாக அணு உலைக்கலனிலே [Reactor Vessel] உண்டாகிறது! அணு எரிபொருளில் ஒட்டிக் கொண்டுள்ள கதிரியக்கம் நீரில் கலந்து அணுக்கரு ஏற்பாடுகளிலும் [Nuclear Systems] டர்பைன், குளிர்கலம் போன்ற பொதுத்துறை அமைப்புகளையும் [Conventional Systems] கதிரியக்க சாதனங்களாகத் தீண்டி விடுகிறது. ஆகவே எரி பொருள் மாற்றும் பராமரிப்பு [Refueling Outage Maintenance] சமயத்தில் பணிகளை முடிக்க ஏராளமான நபர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய தாகிறது! பாரதம் தாராப்பூர் கொதிநீர் அணு உலைகளில் பல ஆண்டுகளாக கதிரியக்க விளவுகளில் பட்ட சிரமத்திற்குப் பிறகு, அவற்றைக் கைவிட்டுக் கனடாவின் காண்டு அணுமின் உலைகளையே தற்போது அதிகரித்து வருகிறது!
இயக்கம், பராமரிப்பு, பாதுகாப்பு, நிதிச் செலவு ஆகிய பண்புகளை ஒப்பிட்டால், எவ்வித ஐயமின்றிக் கனடாவின் காண்டு கனநீர் அணு உலைகளே எல்லாவற்றிலும் உயர்ந்தவை! இந்தியா, பத்து 200 MWe காண்டு நிலையங்களை நிறுவகம் செய்தபின், இப்போது தாராப்பூரில் இரட்டை 500 MWe காண்டு அணு உலைகளை முதல் முறை யாகக் கட்டி அவை இரண்டும் இயங்கி மின்சாரம் பரிமாறி வருகின்றன.

பாரதம் முதன் முதல் 1000 MWe ஆற்றல் கொண்ட பூத அணுமின் நிலை ஆட்சி, பராமரிப்பு அனுபவம் பெறப் போகிறது! ரஷ்யாவின் அழுத்தநீர் அணு உலைகள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் அழுத்தநீர் அணு உலைகளைச் சித்தாந்த முறையில் ஒத்தவை ஆயினும், VVER-1000 மாடல் 392 உலைகள் அமைப்பில் வேறானவை! எல்லாவித டிசைன் விளக்கங்கள், வரை படங்கள், இயக்கப் பராமரிப்பு, பாதுகாப்பு முறைகள், பயிற்சி அளிக்கும் வகைகள், விபத்துகளின் விளைவுகள் யாவும் ரஷ்ய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் எழுதப்பட வேண்டும்! அவற்றை மொழி பெயர்த்து, ஆங்கிலத்தில் அறிந்து கொள்வதில் சிரமங்கள் ஏற்படும்! ரஷ்ய நிபுணர்கள் கொச்சை ஆங்கிலத்தில் அளிக்கும் பயிற்சி முறைகளைப் பாரத வல்லுநர்கள் பின்பற்றுவதில் பிரச்சனைகள் உண்டாகும்!
பயிற்சி பெறும் ரஷ்யாவின் VVER-1000 அணு மின் உலைகள் ரஷ்யாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளதால், பாரத எஞ்சினியர்களும், விஞ்ஞானிகளும் மொழிச் சிக்கலால், முழுப் பயிற்சி பெற முடியாது! மேலும் உலகில் உள்ள VVER-1000 அணு உலைகளில் இதுவரை நேர்ந்த விபத்துக்களும், அபாய நிகழ்ச்சிகளும் ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருப்பதாகத் தெரியவில்லை! VVER-1000 அணு உலைகளில் என்ன என்ன சிக்கல்கள் இயக்கத்தின் போது விளையப் போகின்றன ? என்ன என்ன சிரமங்கள் பராமரிப்பின் போது தாக்கப் போகின்றன ? புதிய, புரியாத, பூத அணு உலைகளில் என்ன என்ன மனிதத் தவறுகள் எதிர்பாராமல் நிகழப் போகின்றன ? பதில் கிடைக்காத இவை போன்ற வினாக்கள் இப்போது நம்மிடையே எழுகின்றன! பாதுகாப்பு அணு உலையாக மாற்றப் பட்ட ரஷ்யாவின் மர்ம அணு உலையை முதலில் தாமாக ஆட்சி செய்து பார்த்துத்தான், பாரத வல்லுநர்கள் தமது புதிய அனுபவங்களைக் கற்றுக் கொள்ள போகிறார்கள்!

இந்தியாவில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து.



தவறுகளைப் புரிவது மானுடம்! ஆனால் தவறுகளைக் குறைப்பது தெய்வீகம்!
[To err is human! But erring less is Divine!]
முன்னுரை: 1979 இல் அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் உலையில் நேர்ந்த யுரேனிய எரிக்கோல்கள் உருகிய விபத்தும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் நேர்ந்த செர்நோபிள் அணுமின் உலை வெடிப்பும் உலக மக்களுக்கு அச்சமூட்டி அதிர்ச்சிக்குள் தள்ளி விட்டுள்ளன.  பயங்கரச் செர்நோபிள் விபத்துக்குப் பிறகு 25 ஆண்டுகள் கடந்து ஜப்பானில் 2011 மார்ச் மாதம் 11 ஆம் தேதி 9.0 ரிக்டர் பேரழிவுப் பூகம்பமும் 30 அடி உயரப் பிரளயச் சுனாமியும் தூண்டி புகுஷிமாவில் அமைந்துள்ள நான்கு அணுமின் உலைகள் நிறுத்தமாகி அவற்றின் எரிக்கோல்கள் தணிப்பு நீரின்றி நீராவியில் ஹைடிரஜன் வாயு சேர்ந்து வெடிப்புண்டாக்கி அணு உலையின் இரண்டாம் கவசக் கட்டிடத்தின் மேற்தளங்கள் தூளாயின.  அதனால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிக் கதிரியக்கமும் வெளியேறிப் பணியாட்களும் சில பொதுநபரும் கதிரடி பெற்றர்கள்.  செர்நோபிள் விபத்து நிலை 7 (உச்சம்) என்றும் திரிமைல் தீவு விபத்து நிலை 5 என்றும் அகில உலக அணுசக்தி ஆணையகம் (IAEA – International Atomic Energy Agency) மதிப்பீடு செய்தது.  அந்த ஒப்பு நோக்கில் இப்போது ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகளின் விபத்து நிலை 4 லிருந்து 5 ஆக உயர்த்தப் பட்டுள்ளது.
இந்தியாவில் இப்போது 20 அணுமின் நிலையங்கள் (2011 மார்ச் வரை) இயங்கி 4780 MWe மின்சார ஆற்றலை மின்வடங்களில் பரிமாறி வருகின்றன.  அவற்றில் ஜப்பான் புகுஷிமா மாடல் அணுமின் உலைகள் போல் (BWR – Boiling Water Reactor) மேற்குக் கடற்கரை தாராப்பூரில் (மகாராஷ்டிரா) இரண்டு அணுமின் உலைகள், சுமார் 40 ஆண்டுகள் இயங்கி அவை ஓய்வெடுக்கும் காலம் நெருங்கி விட்டது.  தமிழ் நாட்டின் கிழக்குக் கடற்கரை ஓரம் இரண்டு கனநீர் அழுத்த அணுமின் உலைகள் 27 ஆண்டு களாய் மின்சாரம் பரிமாறி வருகின்றன. தமிழகத்தின் தென்கோடி முனையில் கட்டுமானம் ஆகிவரும் கூடங்குளம் ரஷ்ய அணுமின் அணுமின் உலைகள் (VVER -1000) இரண்டில் ஒன்று ஓரிரு மாதங்களில் யுரேனிய எரிக்கோல்கள் இடப்பட்டு இயங்க ஏற்பாடுகள் துரிதமாய் நிகழ்ந்து வருகின்றன.
ஜப்பான் வடகிழக்குக் கடற்கரையில் புகுஷிமாவில் நேர்ந்த அணு உலைகள் விபத்தி லிருந்து இந்திய அணுசக்தித் துறையினர் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பல இருக்கின்றன.  திரிமைல் தீவு, செர்நோபிள் விபத்துகளுக்குப் பிறகு இந்திய அணுமின் உலைகள் செம்மை ஆக்கப்பட்டன. அதைப் போல் முதலில் கடற்கரை அணுமின் நிலையங்களில் அபாயப் பாதுகாப்பு வெப்பத் தணிப்பு நீர் வசதிகள் இரட்டிப்பு அல்லது முப்புற முறைகளில் மேம்படுத்தப்பட வேண்டும்.  எல்லாவற்றுக்கும் மேலாக அணுமின் உலைகளைப் பற்றியும் கதிரியக்கப் பாதுகாப்பு பற்றியும் நகரங்கள் அனைத்திலும் பொதுமக்களுக்கு அறிவு புகட்டும் காட்சியகங்கள் அமைக்கப்பட வேண்டும்.  அணுமின் உலைக்கு 25 மைல் அருகில் வாழ்வோருக்கு அபாய காலப் பாதுகாப்புப் பயிற்சிகள் ஒவ்வோர் ஆண்டும் அளிக்கப் படவேண்டும்.
ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகளில் வெடிப்பு நேர்ந்தது போல் இந்தியாவின் நரோரா அணுமின் நிலையத்தில் 1993 ஆம் ஆண்டில் ஒரு வெடி விபத்து நிகழ்ந்தது.  ஆனால் அந்த வெடிப்பு அணு உலையால் ஏற்பட வில்லை.  மின்சாரம் உண்டாக்க நீராவியால் சுழலும் டர்பைன் வளைத் தட்டுக்கள் முறிந்து, தீப்பொறிகள் கிளம்பி கசியும் ஹைடிரஜன் வாயு எரிந்ததால் மூண்ட வெடிப்பு.  அவ்வெடி டர்பைன் கட்டடத்தைத் தூளாக்கியது.  அணு உலை பாதுகாப்பாக நிறுத்தமாகி எரிக்கோல் களுக்கு வெப்பத் தணிப்பு நீரை டீசல் ஜனனிகள் ஓடிச் சீராக அளித்தன.  ஆனால் ஆட்சி அரங்கு (Control Room) புகை மூட்டத்தில் நிரம்பி நிலைய இயக்குநரை வெளியே செல்ல வைத்தது.  நிலைய மின்சாரப் பரிமாற்ற வடங்கள் சேதமாகிப் பல சாதனங்கள் மின்னாற்றல் இழந்தன.
++++++++++
ரஷ்யாவின் செர்நொபில் அணு உலை வெடிப்பு, அமெரிக்காவின் திரிமைல் தீவு அணு உலை விபத்து ஆகியவற்றைப் போலின்றி, 1993 ஆம் ஆண்டு யந்திரப் பழுதுகளால் டர்பைன் ஜனனியில் தீ வெடிப்பு உண்டாக்கி, அணுமின் உலைப் பாதுகாப்பு ஏற்பாடு களை முடமாக்கியது, நரோராவில் நேர்ந்த விபத்து! அபாயத்தின் போது அணு உலை பாதுகாக்கப் பட்டதால், சூழ்வெளியில் கதிரியக்கம் கசிந்து வெளியே பரவ வில்லை! தீ விபத்தால் பெருஞ்சேதம் விளைந்ததே தவிர, நல்ல வேளை மாந்தருக்கு எவ்விதக் காயமோ, அபாயமோ, கதிரடியோ அன்றி மரணமோ எதுவும் நேரவில்லை! ஆனால் கதிரியக்க அணு உலை வெப்பம் அதிர்ஷ்ட வசமாகத் தணிக்கப் பட்டாலும், கடும் புகை மூட்டத்தால் இயக்குநர்கள் கண்காணிக்கும் ஆட்சி அறையில் நின்று, அபாயத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் புறக்கணித்து ஓட வேண்டிய தாயிற்று!
இந்திய அணுமின் நிலையத்தில் நிகழ்ந்த முதல் விபத்து!
முப்பது ஆண்டுகளுக்கு மேலாகச் சிக்கலான பல அணு ஆராய்ச்சி உலைகளையும், மின்சக்தி பரிமாறும் அணுமின் நிலையங்களையும், பாதுகாப்பாகப் பாரதம் இயக்கிப் பராமரித்து வரும் சமயத்தில் திடாரென 1993 மார்ச் 31 ஆம் தேதி டெல்லிக்கு அருகே இயங்கிக் கொண்டிருந்த நரோரா அணுமின் நிலையத்தில் தீப்பற்றி ஒரு பெரும் வெடி விபத்து நிகழ்ந்து உலகெங்கும் ஓர் அதிர்ச்சியை உண்டாக்கியது! அணுமின் நிலைய இயக்கத்தில் சிறப்பான அனுபவம் பெற்ற இந்திய நிபுணர்கள் கண்முன்பாக, இத்தகைய கோரச் சம்பவம் நேர்ந்தது மன்னிக்க முடியாத ஓர் நிகழ்ச்சி யாகும்! பொதுத்துறை டர்பைன் ஜனனிகளைத் தகர்த்து, டர்பைன் கட்டடத்தில் பல பகுதிகளை எரித்து, மின்சார வயர்களை கரித்துச் சாம்பலாக்கி, அணு உலைப் பாதுகாப்பு ஏற்பாடுகளை முடமாக்கிய அந்த விபத்து விளையாமல், இயக்குநர்கள் முன்னறிவுடன் கண் காணித்து நிறுத்தி யிருக்க முடியும் என்பது கட்டுரை ஆசிரியரின் ஆழ்ந்த கருத்து.

அழுத்தக் கனநீர் இரட்டை நிலையத்தின் முதல் யூனிட்டில்தான் விபத்து நேர்ந்தது! அணு உலையிலோ அன்றி அணு உலைத் துணை உறுப்புகளிலோ எவ்விதப் பழுதும் உண்டாகித் தீ தூண்டப் பட வில்லை! நீராவி ஓட்டும் பொதுத்துறைச் சாதனமான [Conventional Equipment] டர்பைன் கீழ் நிலைச் சுழற் தட்டுக்கள் [Low Pressure Turbine Blades] ‘தளர்ச்சி முறிவுகளால் ‘ [Fatigue Failures] அநேகம் உடைந்து தீப்பொறி எழுப்பி, ஜனனியின் கசிவில் வெளியேறிய ஹைடிரஜன் வாயுவுடன் மூர்க்கமாய்த் தீப்பற்றி வெடிப்புப் சத்தம் உண்டானது! இந்தியா, பாகிஸ்தான், அர்ஜென்டைனா, கொரியா, ருமேனியா, சைனா ஆகிய உலக நாடுகளில் ஓடும் கனநீர் அணுமின் நிலையங்களில், டர்பைன் தட்டுகள் உடைந்து தீப்பற்றி ஹைடிரஜன் வாயுவுடன் எரிந்து வெடிப்பது, அதுவே முதல் தடவை!
யந்திரப் பழுதும், அடுத்து மனிதத் தவறும் சேர்ந்து உண்டாக்கிய மாபெரும் விபத்துத் தரத்தில் அது மூன்றாவது மட்டத்தில் [Level:3] மதிப்பிடப் படுகிறது! யந்திரப் பழுது முதலில் ஆரம்ப மானது! அதன் எச்சரிக்கை அளவை இயக்குபவர் கவனமாகக் கண்காணித்துச் செப்பணிடாததால் அடுத்துப் பயங்கர விபத்து நிகழ்ந்தது! நல்ல வேளையாக அணு உலை நிறுத்தப் பட்டு, தொடர்ந்து நியூட்ரான் பெருக்கம் தடைபட்டு, வெப்ப சக்தித் தணிக்கப் பட்டது! விபத்தின் போது சாதனங்களும், மின்சாரக் கேபிள்களும் தீப்பற்றிப் பெரும் சேதம் விளைந்து, அணு உலைப் பாதுகாப்புக்குப் பல இடையூறுகள் ஏற்பட்டாலும், மாந்தருக்குக் காயமோ, மரணமோ, கதிர்வீச்சுத் தாக்குதலோ எதுவும் உண்டாக வில்லை!

ஆனால் நிலைய இருட்டடிப்பில் ஒரு பெரும் வெடிப்பு விபத்தைக் கையாண்டு, அணு உலையில் தவறுகள் எதுவும் நிகழாதவாறு, பாரத இயக்குநர் பலர் அதைப் பாதுகாத்த சாமர்த்தியம் போற்றத் தகுந்த ஒரு சாதனையாகும்!
நரோரா அணுமின் நிலையத்தின் அமைப்பு
நரோரா அணுமின் நிலையம் டெல்லிக்கு அருகே கங்கை நதிக் கரை ஓரம், உத்திரப் பிரதேச மாநிலத்தில் அமைக்கப் பட்டுள்ளது. 235 MWe ஆற்றல் கொண்ட இரட்டை அணு உலைகள், கனடாவின் ‘காண்டு ‘ அழுத்தக் கனநீர் அணு உலை [CANDU-220 MWe Pressurized Heavy Water Reactor] இனத்தைச் சார்ந்தவை. முதலில் நிறுவப் பட்ட ராஜஸ்தான் முன்னோடி அணு உலையைப் [Rajasthan Prototype Atomic Power Reactor] பல முறைகளில் மாற்றம் செய்து, இரண்டாம் பிறப்பு முற்போக்கு அணு உலைகளாக [Second Generation Advanced Candu Reactors] அமைக்கப் பட்டது, நரோரா! முதலாவது யூனிட் 1989 ஆம் ஆண்டில் இயங்க ஆரம்பித்து, 1991 ஆண்டிலிருந்து வணிக ரீதியாக இயங்குவதாய் அறிவிக்கப் பட்டது! 1989-1993 ஆண்டுகளில் அந்த யூனிட் 50 MWe முதல் 220 MWe மின்னாற்றல் அனுப்பி வந்தது! இரண்டாம் யூனிட் 1991 ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இரண்டு நிலையங்களின் 90% உறுப்புகள் உள்நாட்டுத் தொழிற் சாலைகளைக் கொண்டு உருவாக்கப் பட்டவை.

நரோரா நிலையங்கள் கட்டுவதற்கு 12 வருடங்களுக்கும் மேல் ஆகி விட்டது! காரணம் அணு உலை உறுப்புகளின் டிசைன் வினைகளும், அவற்றைத் தயாரித்து அமைக்கும் கட்டட வேலைகளும் ஒன்றாகச் செய்யப் பட்டு வந்தன! சில சமயங்களில் டிசைன் பணிகள் தாமதப் படவே, கட்டமைப்பு வேலையாளிகள் காத்திருக்க வேண்டிய தாயிற்று! பாரதத்தில் முதன் முதலாகத் தயாரிக்கப் பட்ட நீராவி ஜனனிகள் [Steam Generators] வருவதற்கு மிகவும் தாமத மானதால், அதைச் சார்ந்த பல பணிகளும் தடைப் பட்டன!
அணு உலை, அணு உலைத் துணைச் சாதனங்கள் யாவும் இரட்டைக் கான்கிரீட் கோட்டை அரண்களின் உள்ளே அமைக்கப் பட்டுள்ளன. இயற்கை யுரேனியம் எருவாகவும், கனநீர் மிதவாக்கியாகவும், கனநீர் பிரதம வெப்பக் கடத்தியாகவும் அணு உலையில் பயன்படுகின்றன. நீராவி ஜனனியில் சாதாரண நீர் உபயோக மாகிறது. காலாண்டிரியா அணு உலைக் கலனில் [Calandria Reactor Vessel] 306 அழுத்தக் குழல்கள் [306 Pressure Tubes] நுழைக்கப் பட்டு, ஒவ்வொரு குழலிலும் 12 எரிக்கட்டுகள்  [12 Fuel Bundles in each Tube] உள்ளன. ‘காளான் ‘ வடிவ முடைய நீராவி ஜனனிகள் [Mushroom type Steam Generators] நான்கும், வெப்பக் கடத்திக் கனநீரை அணு உலை, கொதி உலை ஆகியவற்றின் ஊடே சுற்றி அனுப்ப நான்கு பூதப் பம்புகளும் [Giant Pumps] அணு உலைக்கு மேல் தளத்தில் அமைக்கப் பட்டுள்ளன!

பொதுத்துறை நீராவிச் சாதனங்கள் டர்பைன், தணிப்புக் கலன், கொதி உலை அனுப்பு நீர் ஏற்பாடுகள் [Boiler Feed Water], மற்றும் மின்சாரம் உற்பத்திச் சாதனங்கள் ஜனனி, மின்காந்த எழுப்பி [Electric Generator & Exciter] போன்றவை டர்பைன் கட்டத்தில் நிறுவப் பட்டுள்ளன. டர்பைன் தணிப்புக்கலனில் உள்ள [Turbine Condensers] தளர் நீராவியைக் குளிர்விக்க மாபெரும் இரட்டைக் ‘குளிர்ச்சிக் கோபுரங்கள் ‘ [Cooling Towers] நிலையத்தின் பரந்த வெளியில் அமைக்கப் பட்டுள்ளன!
பூகம்பம் தாக்கும் பாதுகாப்பற்ற தளத்தில் [Seismically unsafe Area] நரோரா அணுமின் நிலையம் அமைக்கப் பட்டுள்ளது என்று பல எதிர்ப்புக் கிளர்ச்சிகள் ஆரம்பத்தில் எழுந்தன! ஆனால் அணுசக்தி துறையகம் தனித் துறைஞர் ஆய்வுரைகளையும் மற்றும் தமது ஆராய்ச்சிகளையும் எடுத்துக் கொண்டு, பூகம்ப விளைவுகளால் தகர்க்கப் படாத முறையில் அணு உலை உறுதியாகக் கட்டப் பட்டுள்ளது என்று அறிவிக்கிறது!

கனநீர் அணு உலைகளைக் கட்டுப்படுத்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள்
அபாயப் பாதுகாப்புக்கு அணு உலையை நிறுத்த ராஜஸ்தான், கல்பாக்கம் நிலையங்களில், மிதவேக நியூட்ரான் பெருக்கத்தை முற்றிலும் தடுக்க, மிதவாக்கிக் கனநீரை உலைக் கலனிலிருந்து ஈர்ப்பியல்பில் கொட்டிவிடும் ஏற்பாடு [Dumping System by Gravity] உள்ளது. அவற்றைப் போலின்றி முற்போக்காக நரோரா அணு உலைகளில் விரைவாக நிறுத்தும் வேறுபாடான, தனிப்பட்ட தடுப்பு ஏற்பாடுகள் இரண்டும் [Two Independent Fast-acting Shutdown Systems], மெதுவாக நிறுத்தும் தடுப்பு ஏற்பாடு ஒன்றும் [One Slow-acting Shutdown System] அமைக்கப் பட்டுள்ளன. அபாய கால மின்சாரம் [Emergency Power Supply] இல்லாத ‘நிலைய இருட்டடிப்பு ‘ [Station Blackout] சமையத்தில், சுயமாய் இயங்கும் தடுப்பு முறைகள் பணி புரியா! அப்போது கையாட்சி முறையில் மிதவாக்கிக் கனநீரில் நியூட்ரான் நஞ்சைச் செலுத்தும் [Neutron Poison Injection System] நான்காவது ஏற்பாடும் உள்ளது.

‘காட்மியம் கோல்கள் ‘ கொண்ட பிரதமத் தடுப்பு ஏற்பாடு ஈர்ப்பியல் விசையால் [Primary Shutdown System with Cadmium Rods, dropping under gravity] அணு உலைக்குள் விழுபவை! துவிதத் தடுப்பு ஏற்பாடு [Secondary Shutdown System] ‘லிதியம் பென்டாபோரேட் ‘ திரவத்தை 12 செங்குத்துக் குழல்களில் [Lithium Pentaborate Solution in 12 Vertical Tubes] கொண்டது. மெதுவாய்ப் பாதுகாக்கும் மூன்றாவது முறைப்பாடு: போரிக் ஆஸிட் நஞ்சை கனநீர் மிதவாக்கியில் செலுத்திக் கலக்கும் ஏற்பாடு! காட்மியம், லிதியம் பென்டாபோரேட், போரிக் ஆஸிட் ஆகிய அனைத்தும் அணுப்பிளவு வினைகளில் உண்டாகும் நியூட்ரான்களை விழுங்கி, அவற்றின் பெருக்கத்தைத் தடுப்பவை!
விபத்தின் போது அணு உலை வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள்
அணுமின் நிலையங்களில் எதிர்பார்க்கப்படும் நான்கு வித விபத்துக் காட்சிகள் [Four Accident Scenarios] ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள முக்கியமானவை:
1. அணு உலையில் ‘வெப்பக் கடத்தித் திரவ இழப்பு விபத்து ‘ [Loss of Coolant Accident (LOCA)]
2. நிலைய இருட்டடிப்பு (அபாய கால அனைத்து மின்சார வினியோக இழப்பு) [(Station Blackout) Loss of Emergecy Power with Both Class I & II Supply].
3. அணு உலை நியூட்ரான் பெருக்கக் கட்டுப்பாடு இழப்பு (வெப்ப சக்தி மீறல்) [Loss of Regulation (LOR)]

4. நிலையத்தின் முக்கிய நீராவிப் பெருங் குழல் முறிவு [Main Steam Line Break].
முதல் விபத்தைக் கையாள நான்கு வித பாதுகாப்பு முறைபாடுகள் உள்ளன:
1. மேல் அழுத்த கனநீர் செலுத்தும் ஏற்பாடு [High Pressure Heavy Water Injection System].
2. இடை அழுத்த நீர் செலுத்தும் ஏற்பாடு [Intermediate Pressure Light Water Injection System].

3. கீழ் அழுத்த நீர் செலுத்தும் ஏற்பாடு [Low Pressure Light Water Injection System].
4. நீண்ட கால கீழ் அழுத்த நீர் சுற்றும் ஏற்பாடு [Long Term Low Pressure Light Water Recirculation System].
இவற்றில் பல ஏற்பாடுகள் மூன்றில் இரட்டை உடன்பாடு [Two out of three Coincidence Logic] விதியைப் பின்பற்றுபவை!

நரோரா வெடிப்பில் விளைந்த எதிர்பாராத விளைவுகள்
விபத்து நேர்ந்த அன்றைய நாளில் [1993 மார்ச் 31] முதல் யூனிட் 185 MWe ஆற்றலில் இயங்கி வந்தது. அந்தச் சமயத்தில் இரண்டாவது யூனிட் நிறுத்தமாகிச் செப்பணிடும் பணிகள் செய்யப் பட்டு வந்தன. காலைப் பொழுது புலர்வதற்கு முன்பு 3:31 A.M. மணிக்கு ஓடிக் கொண்டிருந்த டர்பைன் உச்ச அதிர்வுகளால் திடாரென நிறுத்தம் [Tripped due to High Vibrations] ஆனது! ஆட்சி அறையில் டர்பைன் ஜனனி துணை உறுப்புக்களின் காட்சி முகப்பில் [Control Room Turbo-Generator Auxiliary Panels] பல எச்சரிக்கைச் சிவப்பு விளக்குகள் பளிச்சிட்டு கீச்சொலி எழுப்பின! அதே சமயம் உண்டான ஓர் பேரிடிச் சத்தம் ஆட்சி அறை, டர்பைன் கட்டடத்தின் உள்ளும் புறமும் பணி புரிந்த இயக்குநர் காதுகளைப் பிளந்தது! அத்துடன் பேரதிர்ச்சியில் ஆட்சி அறைத் தளமே ஆட்டம் கண்டது! குப்பென்று வெப்பக் காற்று தூசிகளைக் கிளப்பிக் கொண்டு வீசியது!
டர்பைன் மாளிகையில் ஜனனியின் உராய்வு வளையங்கள் முனையில் [Slip Rings End of Generator] பெருந்தீப் பற்றக் காணப் பட்டது! இரண்டாவது யூனிட் ஓரம் ஓய்வில் வைக்கப் பட்ட யந்திரத் தூக்கியில் இருந்த வேலையாளி [Turbine Building Crane Operator], முதலாவது யூனிட் டர்பைன் தொகுப்பிலும் [Tubine Set] பெருந் தீப்பற்றி நீல நிறத்தில் எரியக் கண்டார்! டர்பைன் மசிவு ஆயில் [Turbine Lubricating Oil] எல்லா இடத்திலும் சிந்தி அவற்றிலும் தீப் பற்றிப் பெருகியது! அத்துடன் வெடித்த பாகங்களிலிருந்து குப்பெனக் கசிந்து வெளியேறும் வெப்ப நீராவியின் வெண் முகில் மண்டலம்! தீ அணைப்புப் படையினர் உடனே அழைக்கப் பட்டனர்! அபாயச் செய்தியைக் கேட்டு, அணு உலையைச் சேர்ந்த 50 பேர்கள் உதவி செய்ய நிலையத்துக்கு விரைந்தனர்.

மில்லி வினாடி நேரத்தில் நிலையத்தின் மின்சாரம் அனுப்பும் யூனிட் டிரான்ஸ்ஃபார்மர் [Unit Transformer], ஜனனியின் டிரான்ஸ்ஃபார்மர் [Generator Transformer], ஜனனிக்கு மின்காந்தம் ஊட்டும் தொடர்பு [Generator Field Breaker], 6.6 KV மின்சார வினியோகத் தொடர்பு [6.6 KV Station Breaker] யாவும் துண்டிக்கப் பட்டு அணுமின் நிலையம் மின்சாரம் இன்றி தனிப்பட்டுப் போனது! 600 மெகா வாட் வெப்ப சக்தியைக் கடத்தி நீரனுப்பும் நான்கு பூதப் பம்புகளும் நின்று போயின! கொதி உலையில் 600 மெகா வாட் வெப்ப சக்தியை மாற்றும் டர்பைன் யந்திரம் உடைந்து நின்று போனதால், நீராவி கசிந்து டர்பைன் மாளிகை எங்கும் பரவியது!
தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்த அணு உலை 39 வினாடிக்குப் பின் ஆட்சி அறை இயக்குநரால் நிறுத்தப் பட்டது! ஆட்சி அறையின் காட்சி முகப்பில் [Control Room Indicating Panels] அநேக எச்சரிக்கைச் சிவப்பு விளக்குகள் சிமிட்டிச் சிமிட்டிக் கூச்சலிட்டன! காரணம் ஆட்சி அறைக் காட்சி அரங்கு உபரிகளுக்கு மின்சார அனுப்பும் வயர்களில் [Control Component Power Supply] தீப் பற்றி அவை யாவும் துண்டிக்கப் பட்டன! உடனே அபாய கால மின்சாரம் அளிக்கும், இரண்டாம் வகுப்பு ஆற்றல் பரிமாறும் [Class II Power Supply] மோட்டர் ஜனனி தொகுப்பும் [Motor Generator Set] அற்று விடப் பட்டது! அதற்குத் துணையாய் மிதந்து கொண்டிருக்கும் முதல் வகுப்பு மின்கலன்களின் ஆற்றலும் [Poised Class I Battery Power] கேபிள்கள் எரிந்ததால் துண்டிப் பானது! அதாவது நிலையத்தின் எந்தப் பணிக்கும் உதவ முடியாமல் அனைத்து மின்சார ஆற்றல்கள் இருந்தும், இல்லாமல் போயின!

அணுமின் நிலையத்தில் டர்பைன் ஓடாது நீராவியின் அழுத்தம் அதிகமானதால், விபத்து நிகழ்ந்து ஐந்தாவது நிமிடத்தில் ‘அபாய கால நீராவி நீக்கிகள் ‘ [Atmospheric Steam Discharge Valves] கையாட்சியில் திறக்கப்பட்டு அணு உலைத் ‘தீவிரத் தணிப்பு ‘ [Reactor Crash Cooldown] ஆரம்ப மானது! அணு உலைக் கோட்டை அரண் தனித்து விடப்பட்டு, வாயுப் போக்கு வரத்து யாவும் அடைக்கப் பட்டன
அணுமின் நிலைய அபாய நிலை அறிவிப்பு!
வெடிப்பு ஏற்பட்ட எட்டாவது நிமிடத்தில் ‘அணுமின் நிலைய அபாய நிலை அறிவிப்பு ‘ [Plant Emergency Declaration] வெளியாக்கப் பட்டது! அதே சமயம் புகை மூட்டம் பெருகிக் கண்காணிக்க முடியாமல் ஆட்சி அறையிலிருந்து எல்லா இயக்குநர்களும் ஓட வேண்டிய தாயிற்று! பத்து நிமிடம் கடந்து வெளியே உள்ள டாசல் ஜனனி ஓட்டும் இரண்டு தீ அணைப்பு பம்புகளை ஓட்டினார்கள்! டர்பைன் கட்டடத் தீயை அணைக்க மட்டும் ஒன்றரை மணி நேரமானது! இரண்டு மணி நேரம் கடந்து, போரிக் ஆஸிடை கனநீர் மிதவாக்கியில் செலுத்தும் [Boric Acid Injection System] அணு உலையின் இரண்டாவது தடுப்பு ஏற்பாடு, மின்சாரம் இல்லாததால் கையாட்சியில் திறக்கப் பட்டது!

நான்கு மணி நேரம் கடந்து, இயக்குநர் அணு உலைக் கோட்டை அரணுக்குள் சென்று சோதித்ததில், கதிரியக்கம் எப்போதும் உள்ளபடிக் குன்றிய அளவிலே இருந்தது. ஐந்தரை மணி நேரம் கழித்து தீயணைப்பு நீர் கொதி உலைக் கலன்களில் நிரப்பப் பட்டது! அணு உலையின் இரு முனையிலும் கதிர்வீச்சுத் தடுப்பாக அமைக்கப் பட்டுள்ள ‘முனைக் கவசச் சாதனத்தின் ‘ வெப்பத்தைத் தணிக்க [Endshields Cooling System] தீயணைப்பு நீரே பயன் பட்டது! புகை மண்டலம் கரைந்துபோய், ஆட்சி அறைக்குள் மறுபடியும் புகுந்து செல்ல 13 மணி நேரம் கடந்தது! பதினைந்து மணி நேரம் கடந்து நிலையத்தின் புறத்தே சூழ்வெளியைச் சோதித்ததில், கதிரியக்கப் பொழிவுகள் எதுவும் காணப்பட வில்லை! வெடி விபத்து நேர்ந்து 19 மணி நேரங் கழிந்து, இரவு (11:45 P.M) ‘அபாய நிலை அறிவிப்பு ‘ நீக்கப் பட்டது!
விபத்திற்குப் பிறகு மாற்றப்பட்ட யந்திர மின்சார சாதனங்கள்
விபத்தின் விளைவுகளை நீக்கி யாவற்றையும் புதுப்பிக்க இரண்டு ஆண்டுகளும், பல கோடி ரூபாய்களும் செலவாகின!
1. நிறுத்தப்பட்ட அணு உலையின் பாதுகாப்பைக் கண்காணிக்கும் உளவு அமைப்புகள், ஏற்பாடுகள் ஆகியவை ஒழுங்கு முறையில் இயங்க முதலில் சீராக்கப் பட்டன.
2. கட்டத்தில் எரிந்து சிதைந்து போன சாதனங்கள், கரிந்து போன வயர்கள், கேபிள்கள் மாற்றப் பட்டன. அவற்றுக்குச் சிறப்பான ‘தீக் கவச, புகை குன்றிய கேபிள்கள் ‘ [Fire Resistant Low Smoke Cables & Wire] உபயோக மாயின. தீப்பிழம்பில் வெந்த கான்கிரீட் தளங்கள், சுவர்கள் ஆகியவற்றில் தளர்ச்சியால் உறுதி இழப்பு நேர்ந்துள்ளதா வென்று சோதிக்கப் பட்டுச் செப்பணிடப் பட்டன!
3. முழு டர்பைன் ஜனனியும், அவற்றுக்கு உகந்த உபரிச் சாதனங்களும் மாற்றலாகின!
4. ஒவ்வோர் தள மட்டத்திலும் ‘தீத் தடுப்பு அரண்கள் ‘ [Fire Barriers], ‘தீத் துண்டிப்புகள் ‘ [Fire Breakers] அமைக்கப் பட்டன!
5. இரண்டாவது யூனிட்டின் டர்பைன் சுழற் தட்டு உருளை [Turbine Blades Rotor] நீக்கப் பட்டு, புதிதாக மேம்படுத்தப் பட்ட டர்பைன் உருளை இணைக்கப் பட்டது!
6. முதல் யூனிட் தளத்தில் முன்பு அமைக்கப் பட்ட, இரண்டாம் யூனிட்டின் சாதனங்கள் நீக்கப் பட்டு அவற்றுக்கு உரிய இடத்தில் மாற்றப் பட்டன.

7. அபாய மின்சார வினியோகம் துண்டிக்கப் பட்டு [Class III Emergency Power], நிலைய இருட்டடிப்பு [Station Blackout] நேரும் சமயத்தில், முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மின்சார வினியோகமும் [Class I, Class II Electric Supply] முடமாகிப் போனால், அணு உலைப் பாதுகாப்பை எப்படிக் கையாளுவது என்பதற்கு வரைமுறைகள் எழுதப் பட்டு, பயிற்சிகளும் இயக்குநர்களுக்கு அளிக்கப் பட்டது.
8. நரோரா மாடல் டர்பைன் சென்னைக் கல்பாக்கம் அணுமின் நிலையத்திலும் பயன் படுவதால், அவையும் மாற்றப்பட்டு, புதுப்பிக்கப் பட்ட டர்பைன் சுழற் தட்டு உருளைகள் இணைக்கப் பட்டன.

டர்பைன் ஜனனி வெடி விபத்தின் காரணங்கள்! கற்ற பாடங்கள்!
யந்திர சாதனங்கள் யாவும் முறிவதற்கு முன்பு, தமது தனி ஊமை மொழியில் குறி சொல்லும்! பழுதான டர்பைன் சுழற் தட்டுகளின் அதிர்வுகளைக் கண்காணிக்கப் பல உளவிகள் [Vibration Probes] உள்ளன! சுழற் தட்டுகள் முறிந்த நரோரா டர்பைன் மாடல், முந்தைய கல்பாக்க அணுமின் நிலையங்களிலும் நிறுவன மானது! ஏற்கனவே கல்பாக்கத்தில் அந்த மாடல் டர்பைன் இயங்கும் போது, அதிர்வுப் பிரச்சனைகள் [Vibration Problems] இருந்ததாக அறியப் படுகிறது! நரோரா கீழ் அழுத்த டர்பைனில் எதிர்பார்க்கப் பட்ட, அதே பிரச்சனைகள் சரிவரக் கண்கணிக்கப் படாது போனால், அநேக சுழற் தட்டுகள் ஒரே சமயத்தில் முறிந்து போகும் வரை முற்ற விட்டதாக அறியப் படுகிறது!
விபத்துக்கு முன்பு நரோரா ஆட்சி அறையில் எச்சரிக்கை செய்த டர்பைன் அதிர்வு மானிகளை [Vibration Monitors], இயக்குநர் புறக்கணித்ததாக அறியப் படுகிறது! ஜனனியில் வெப்பம் தணிக்கும் ஹைடிரஜன் வாயு கசிவதைக் கண்காணிக்கும் உளவிகளும், எச்சரிக்கை ஏற்பாடுகளும் அமைக்கப் பட்டுள்ளன! ஆகவே மின்சார ஜனனியில் ஹைடிரஜன் வாயுக் கசிவின் [Hydrogen Gas Leakage] எச்சரிக்கைகள், டர்பைன் இயக்குநர் கவனத்தைக் கவராதது ஆச்சரியமாக உள்ளது! இவ்விரண்டு எச்சரிக்கைகளை இயக்குநர் கவனமாகக் கையாண்டிருந்தால், டர்பைன் வெடி விபத்து நேர்ந்திருக்காது! நிலையம் முடமாகி மின்சக்திப் பரிமாறாமல், செப்பணிடுவதில் இரண்டாண்டு காலம் வீணாகிப் போயிருக்காது! பல கோடி ரூபாய்ச் செலவை இழுத்து விட்ட நரோராவின் கோர விபத்துக்கு மனிதத் தவறுகளும் யந்திரப் பழுதுகளுமே காரணம்!

1. ‘சாதனத் தரக் கட்டுப்பாடுத் திட்டம் ‘ [Equipment Quality Assurance Program] அணுமின் நிலைய அமைப்புக் கலாச்சாரமாக [Quality Culture] டிசைன், உற்பத்தி, நிறுவகம், சோதிப்பு, இயக்கம், பராமரிப்பு [Design, Manufacturing, Construction, Commissioning, Operation & Maintenance] ஆகிய அனைத்து நிலைகளிலும் புகுத்தப் பட்டது!
2. இரட்டை அணுமின் நிலைய அமைப்புகளில் தீப்பற்றி அழிக்காதவாறு, மின்சாரம் பரிமாறும் வயர்களும், கேபிள்களும் பிரிக்கப் பட்டுத் தீக் கவசக் குகைகளில் அமைக்கப் பட்டன! அணுமின் சாதனங்களுக்குத் தனித் தனியாக இரட்டை மின்சார வினியோகக் கேபிள்களைப் பதித்து, ஒன்றில் பழுது ஏற்பட்டால், அடுத்த வழியில் மின்சக்தி கிடைக்குமாறு பிரிக்கப் பட்டது.
3. அபாய காலத்தில் ஆட்சி அறையில் இயக்குநர் பணி புரியமாறு மாற்றங்கள் செய்யப் பட்டன.
4. முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மின்சாரப் பரிமாறலும் துண்டிக்கப் பட்டு, நீடித்த நிலைய இருட்டடிப்பு [Extended Station Blackout] சமயத்தில், அணு உலைப் பாதுகாப்பு, கொதி உலைக்கு நீரனுப்பல் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க ஆய்வு முறை வழிகள் தயாரிக்கப் பட்டன.
5. இயக்கத்திற்கு முன்பும், பின்பும் செய்ய வேண்டிய டர்பைன், ஜனனிகளின் கண்காணிப்பு, செப்பணிடும் சோதனைகள் [Pre-Service, In-Service Inspections] எதுவும் புறக்கணிக்கப் படாமல் சரியான சமயத்தில் முடிப்பதற்குக் கட்டாய விதிகள் நிலைநாட்டப் பட்டன.
6. அணு உலை நீராவி ஆக்கும் ஏற்பாடுகளைத் தவிர்த்து [Outside the Nuclear Steam Supply Systems] பொதுத்துறைச் சாதன ஏற்பாடுகள் [Conventional Systems] எவை யெல்லாம் அணு உலைப் பாதுகாப்பைப் பாதிக்கலாம் என்பது ஆராயப் பட்டது.
7. தீ அணைப்பு நீர், தீயை அணைக்கப் பயன்படும் போது, அதே சமயத்தில் அணு உலை வெப்ப நீக்கப் பாதுகாப்புக்கும், கொதி உலைக்கு அபாய கால நீர் அனுப்பவும், மற்றும் பாதுகாப்புக்கு உடந்தையான ஏற்பாடுகளுக்கும் வேண்டிய நீர் செலுத்தவும், தீ அணைப்பு நீர் ஏற்பாடு [Fire Figting System] உதவுமா வென்று ஆராயப் பட்டது.
நரோரா விபத்தைப் போல் மீண்டும் பாரத அணுமின் நிலையங்களில் நிகழுமா ?
அணு உலைப் பாதுகப்புக்குச் சுயக் கட்டுப்பாடு முறைகள் எத்தனை இருந்தாலும், இயக்கத்தின் போது மனிதக் குறுக்கீடுகள் எழுவதைத் தடுக்க முடியாது! மனிதர் அறிந்தோ, அறியாமலோ செய்யும் கைத் தவறுகளையோ [Physical Errors], அல்லது சீர் தூக்கிப் பார்த்துச் சிந்திக்கும் மூளைத் தவறுகளையோ [Judgemental Errors] யாராலும் கட்டுப் படுத்த முடியாது! கைத் தவறுகளைக் கண்காணிப்புகள் மூலம் குறைக்கலாம்! ஆனால் ஆட்சி அறை எச்சரிக்கைக் காட்சிகளை உடனே ஆராய்ந்து, சீக்கிரம் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் மூளைத் தவறுகளை எவராலும் தடுக்க முடியாது!
நரோராவில் ஏற்பட்ட தீ விபத்து போல், பாரதத்தின் புதிய அணு உலைகளில் மீண்டும் நேர்ந்திட வழியில்லை! ஆனால் வேறுவித விபத்துகள், மானிடத் தவறுகளால் தூண்டப் பட்டு அணு உலைகளில் நேரலாம்! மனிதத் தவறுகளைப் பயிற்சி முறைகள் மூலமும், தொடர்ந்த கண்காணிப்புகள் மூலமும் குறைக்க முயற்சி செய்ய வேண்டும்! அடிக்கடி நினைவூட்டும் இயக்குநர் பயிற்சிகளும், அனுபவ இயக்குநரின் கண்காணிப்பும் அணு உலைகளில் அபாயங்கள் நிகழப் போவதை நிச்சயமாகத் தடுக்க முடியும்! அடுத்து யந்திரச் சாதனங்கள் தயாரிப்பின் போது புரியும் முக்கிய பணியான ‘தரக் கட்டுப்பாடுகள் ‘ [Quality Controls] பழுதுகள் முதலிலே ஏற்படாமல் தடை செய்யும்! ஆரம்ப நிலை யந்திரத் தரக் கட்டுப்பாடும், மனிதத் தவறுகளைக் குறைக்கும் குறிக்கோளுடன் நடத்தும் முற்போக்குப் பயிற்சி முறைகளும், அனுபவ இயக்குநர் கண்காணிப்பும் கடைப்பிடிக்கப் பட்டால், விபத்துக்கள் நேராமல் பாரதத்தில் அணுமின் உலைகளில் மின்சக்தி உற்பத்தி செய்ய முடியும்!
*****************

அமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள்.



“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும். அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும். அகில நாடுகளின் அணுசக்திப் பேரவை (IAEA) தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

மேம்பட்ட படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு பாதை இருக்குமானால், அதனால் விளையப் போகும் பாதிப்புகளின் முழுத் தோற்றத்தை முதலில் ஆழ்ந்து அறிந்த பிறகுதான் அதைக் கட்ட ஆரம்பிக்க வேண்டும்.

தாமஸ் ஹார்டி [Thomas Hardy 1840--1928]

மனிதக் கரங்கள் மூளைக்கு முந்திச் செய்த அவசரத் தவறை அறிந்த வுடனே விரைவாய்த் திருத்தச் செல்கையில் மீண்டும் ஒரு தவறைப் புரிகின்றன ! பிறகு இரண்டு தவறுகள் நான்கு பழுதுகளை உண்டாக்கும் ! அப்படியே தவறுச் சங்கிலித் தொடரியக்கம் விரிந்து கண்ணிமைப் பொழுதில், மீள முடியாத ஒரு கோர விபத்து கண்முன்னே அரங்கேறுகிறது !



முன்னுரை: 1979 ஆண்டு அமெரிக்காவில் முதன்முதலில் நேர்ந்த திரிமைல் தீவு (TMI-2) அணுமின் நிலைய  விபத்து, உலகில் வாணிப அணுமின் சக்தி வளர்ச்சியின் வரலாற்றையே முற்றிலும் மாற்றி  விட்டது! இந்தியாவில் 1983 ஆண்டு நிகழ்ந்த போபால் விஷ வாயு விபத்தையும், TMI-2  அணு உலை விபத்தையும் ஒப்பிட்டால், அபாய வேளையில் பணி செய்த இயக்குநர் கையாட்சிப்  பண்பாட்டில் பல ஒற்றுமைகள் காணப் படுகின்றன! அவ்விரண்டு நுணுக்கக் கூடங்களை  உருவாக்கிய உரிமை நிறுவகங்கள் அமெரிக்காவின் யூனியன் கார்பைடு [UCC] & ஜெனரல் பப்ளிக் யுடிலிடாஸ் [GPU]! அதே சமயம் டெல்லிக் கருகே நரோரா அணுமின் நிலையத்தில்  1993 ஆண்டு நேர்ந்த வெடிப் போடு ஒப்பிட்டால், பாரத இயக்குநர்கள் அணு உலையைக்  கண்காணித்து, வெப்பத் தணிப்பு நீரிழப்பு நிகழாது, எரிக்கோல்கள் சூடாகாமல்  காப்பாற்றியது, பாராட்டத் தக்க ஓர் தீரச் செயலாகும்!
1959 ஆண்டுக்குப் பிறகு இருபது வருடங்களாக இயங்கிக் கொண்டிருந்த முதல் பிறப்பு  பழைய அணுமின் உலைகள் [First Generation Power Reactors] அனைத்தின் தலை விதிகளை  TMI-2 மாற்றி விட்டது! 1979 ஆண்டுக்குப் பிறகு இருபது ஆண்டுகளில் உருவாகப் போன  இரண்டாம் பிறப்பு [Second Generation Power Reactors] அணுமின் உலைகளின் டிசைன்,  பாதுகாப்பு, இயக்க நெறிகள், பராமரிப்பு, இயக்குநர் தேர்ந்தெடுப்பு, பயிற்சி, தேர்ச்சி  முறைகள், அபாய காலப் பயிற்சிகள், அபாய எதிர்பார்ப்பு உளவுகள், அபாய நேரத்  தொடர்புகள் அனைத்தும் பல கோணங்களில் ஆராயப் பட்டு முற்றிலும் மாற்றப் பட்டன!

செர்நோபிள் அணு உலை வெடிப்பைப் போன்று, திரி மைல் தீவு பேரழிவைப் பென்ஸில்வேனியா  ஹாரிஸ்பர்கில் உண்டாக்க வில்லை! அணு உலையும், அதைச் சுற்றி யுள்ள  சாதனங்களும் வெடித்துத் தகர்க்கப் பட்டது போல், திரிமைல் தீவில் நிகழ வில்லை! சுமார்  1700 டன் மிதவாக்கிக் கரித்திரள் கட்டிகள் [Moderator Graphite Blocks] எரிந்து கதிரியக்கத்  துணுக்குகள் சூழ்மண்டலத்தில் தூவப் பட்டது போல் அமெரிக் காவின்  பென்ஸில்வேனியாவில் நேர  வில்லை!  செர்நோபிள் விபத்துத்தின் போது சில தினங்களில் பலியானவர்கள்: வெடிப்பில்  இயக்குநர் இருவர், பெருங் கதிரடியில் தீயணைப்புப் படையினர் 29 பேர் மற்றும்  கதிர்வீச்சுக் காய்ச்சலில் 13 பேர்; ஆக மொத்தம் உயிரிழந்தவர் 44 மாந்தர்!
ஆனால் திரி மைல் தீவு விபத்தில் யாரும் மரணம் அடைய வில்லை! எவரும் பேரளவுக்  கதிரடி பட்டுத் துன்புற வில்லை! செர்நோபிள் விபத்தில் கதிர்வீச்சாலும், கதிரியக்கத்  தீண்டலாலும், மானிடருக்கு நீண்ட கால இன்னல்கள் விளைந்தன! இன்னும் 50  ஆண்டுகளுக்கு புற்று நோய் மரண அதிகரிப்பு உண்டாகும் என்று கதிரியல்  விஞ்ஞானி களால் யூகிக்கப் படுகிறது! ஆனால் திரி மைல் தீவு விபத்தில், கதிர்வீச்சால்  அவ்விதம் நீண்ட கால விளைவுகள் எதுவும் நிகழ வில்லை!  ஆனால் அமெரிக்காவில் அடுத்துக் கட்டப் போகும் புதிய அணுமின் நிலையங்கள் நிறுத்த மாயின.  கட்டப் பட்டுவரும் அணுமின் உலைகளும், இயங்கி வரும் அணுமின் உலைகளும் மென்மேலும் ஆராயப் பட்டுப் பேரளவில் மேம்படுத்தப் பட்டன !

திரிமைல் தீவு விபத்துக்கும் ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகள் விபத்துக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள்
திரிமைல் தீவு அணுமின் உலை விபத்து 1979 இல் யந்திரத் தவறோடு மனிதத் தவறால் தூண்டப் பட்டு வெப்பத் தணிப்பு நீரிழப்பால் (Loss of Coolant Accident -LOCA) பேரளவு எரிக்கோல்கள் அணு உலையில் முறிந்து, உருகிப் போயின.  அதனால் வெளிப்பட்ட கதிரியக்கத் துணுக்குகள், திரவக் கழிவுகள் எவையும் வெளியேறாமல் அணு உலைக் காங்கிரீட் கோட்டைக்குள் தங்கின !  ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகளில் 9.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தாலும், 30 அடி உயரத்தில் தாக்கிய சுனாமியாலும் விபத்து தூண்டப்பட்டு எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரிழப்பால் ஓரளவு முறிந்தோ அல்லது உருகியோ சிதைந்து போயின.  ஆனால் தொடர்ந்து சிறிதளவு & பேரளவுக் கதிரியக்கம் மாறி மாறி, நீர் வழியாகவும், வாயு வழியாகவும் அணுமின் உலைகளை விட்டு விட்டு வெளியேறியது. திரிமைல் தீவில் விபத்து ஓர் அணுமின் உலையில் மட்டும் நேர்ந்தது.  புகுஷிமாவில் நான்கு அணுமின் உலைகளில் விபத்துக்கள் நேர்ந்தன.  பதினாறு நாட்கள் (மார்ச் 26, 2011) ஆயினும் இன்னும் சில அணுமின் உலைகளில் தொடர்ந்து ஜப்பான் இயக்குநரால் வெப்பத் தணிப்பு நீர் எரிக்கோல்களுக்குச் செலுத்த முடியவில்லை.
ஓர் அணுமின் உலையில் இணைக்கப் பட்ட நீர்த் தடாகத்தில் சேமிப்பான எரிக் கோல்கள் (Spent Fuel Storage Pool) நீர் மட்டம் கீழாகிச் சூடேறத் துவங்கின.  நீர்க் கவசமின்றி தடாகத்தில் கதிரியக்கம் மிகையானது.  செலுத்தப்பட்ட கதிர்வீச்சுத் தணிப்பு நீர் தங்கும் வளையம் நிரம்பி தரையில் சேரத் தொடங்கியது.  அந்த நீர் பணியாளர் காலணிகளில் புகுந்து பீட்டா கதிர்வீச்சால் கால் எரிப்புண்கள் (Beta Ray Burns) உண்டாயின.  வெப்பத் தணிப்பு நீரிழப்பால் முறிந்த / உருகிய எரிக்கோல்கள் புகுஷிமாவில் திரிமைல் தீவைப் போல் சுமார் நான்கு மடங்கு எண்ணிக்கை !  புகுஷிமா அணுமின் உலைகளின் சீர்கேட்டையும், கதிரியக்கப் பேரிடரையும் அனுதினம் தொலைக் காட்சியில் கண்டவர் இன்னும் கவனித்து வேதனை அடைந்து வருபவர் உலகில் பல பில்லியன் மாந்தர்.  செர்நோபிள் பேரிடர் நிலை இலக்கம் 7 என்றும், திரிமைல் தீவு விபத்து நிலை இலக்கம் 5 என்றும் புகுஷிமா அணுமின் உலைகளின் விபத்துக்கள் நிலை இலக்கம் 6 என்றும் IAEA ஆல் எடை போடப் படுகின்றன.

அமெரிக்க அணுமின் உலைத் திட்டங்களை நிறுத்திய விபத்து !
TMI-2 அணு உலையில் எதிர்பாராமல் துவங்கியது சிறிய நிகழ்ச்சி யாயினும், பிறகு அது  அசுர வடிவெடுத்து அணு உலை எரிக்கோல்களுக்குப் பெருமளவில், வெப்பத் தணிப்பு  நீரை இழக்கச் செய்து விட்டது! பிரதம வெப்பத் தணிப்பு நீரிழப்பு [LOCA, Loss of Coolant  Accident] அணு உலைக்குப் பேரழிவு விளைவிப்பதைத் தடுக்கப் பலவித அபாயத் துணை  ஏற்பாடுகள் சுயமாக இயங்கக் காத்துக் கொண்டிருக்கின்றன! அவ்விதம் தவிர்ப்பு முறைகள்  TMI-2 இல் இருந்தாலும், அறிவற்ற இயக்குநரின் கையாட்சியால் பேரளவுச் சேதம் அணு  உலையில் உண்டானது! அவரது மூடத்தனத்தால் இரண்டு மணி நேரத்திற்குள் நான்கு  வித அபாய விபத்துகள் கட்டுப் படுத்த முடியாமல் பூத உருவில் விரிந்தன!
1. எரிக்கோல்களின் உஷ்ணம் 2800 டிகிரி C ஏறி, 50 டன் [50%] யுரேனியம் ஆக்ஸைடு  கோல்கள் உலைக் கலனில் உருகிக் கட்டிகளாய்ச் சேர்ந்தன!
2. வீரிய கதிரியக்க முள்ள, யுரேனியப் பிளவுக் கழிவுகள் சேர்ந்த 600,000 காலன் வெப்பத்  தணிப்பு நீர், அணு உலையிலிருந்து கசிந்து வெளியேறி, கோட்டைத் தளத்தில்  தடாகமாய்ப் பெருகியது!

3. அணு உலையில் 2800 டிகிரி C உஷ்ண நீராவி அருகில் உள்ள ஸிர்கோனிய [Zirconium]  உலோகத்துடன் இணைந்து பேரளவு ஹைடிரஜன் வாயு முகிலாகி, மூர்க்கமுடன்  ஆக்ஸிஜனுடன் பிணைந்து பெரு வெடிப்பை [Hydrogen Explosion] உண்டாக்கப்  பயமுறுத்தியது! செர்நோபிள் அணுமின் உலையில் எழுந்த இரண்டாவது வெடிப்பு  இவ்விதம்தான் ஏற்பட்டது!
4. உருகித் திரண்ட யுரேனியக் கட்டிகள் அணு உலை நீரில் ‘விரைவுப் பூரண வெடிப்பைத் ‘  [Prompt Criticality Explosion] தூண்டி விடுமோ என்ற பேரச்சத்தை வேறு உண்டாக்கியது!
நல்ல வேளையாக கடைசி இரண்டு கோர நிகழ்ச்சிகளும் நேரவில்லை!
1983 இல் உலகெங்கும் இயங்கி வந்த அணு உலைகளின் எண்ணிக்கை 284! உலகில்  அப்போது கட்டப் பட்டு உருவாகி வந்தவை 192! அதே சமயத்தில் அமெரிக்காவில் மட்டும்  ஓடிக் கொண்டிருந்தவை 79! நிறுவன நிலையில் வளர்ந்து கொண்டு வந்தவை 55! TMI-2  விபத்துக்குப் பிறகு உலகில் ஓடிக் கொண்டிருந்த அணுமின் உலைகளும், கட்டப்படும்  அணுமின் உலைகளும் தீர்க்கமாய் ஆய்வு செய்யப் பட்டு மேபடுத்தப் பட்டன!  அமெரிக்காவில் அணுமின் உலைகளின் மீது நம்பிக்கை குன்றி கட்டப்படும் 55 அணு  உலைகளில் 30 நிலையங்கள் முழுவதும் கட்டப் படாமலே பாதியில் நின்று போயின!  காரணம் NRC [Nuclear Regulatory Commission] எதிர்கால அணுமின் உலைகளுக்குக் கடும்  நிபந்தனைகளிட்டுப் பாதுகாப்பு நெறிகளையும், முறைகளையும் மிகையாக்கியதால்,  கட்டுமான நிதித் தொகை மிக மிக ஏறிவிட்டது!

திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் என்ன நிகழ்ந்தது ?
1979 மார்ச் 28 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு அமெரிக்காவின் மாபெரும் அணுமின்  நிலைய விபத்து, இரட்டை உலைகளில் ஒன்றான யூனிட்-2 நிலையத்தில்தான் நேர்ந்தது!  TMI-2 [Three Mile Island Unit-2] அணுமின் நிலையம் நியூ யார்க், நியூ ஜெர்ஸி மாநிலங்களுக்கு  அண்டையில் உள்ள பென்ஸில்வேனியா மாநிலத்தில் ஓடும் ஸஸ்குவான ஆற்றின்  கரையில் உள்ள மிடில்டன் நகரில் [Middletown near Harrisburg on the Susquehanna River]  அமைந்துள்ளது. 1978 டிசம்பர் முதல் வாணிப ரீதியாக இயங்கி வரும் TMI-2 அணுமின்  உலை விபத்தன்று 97% [870 Mwe] மின்னாற்றலில் ஓடிக் கொண்டிருந்தது.
பராமரிப்புக்குப் பிறகு எதிர்பாராத விதமாக மூடப்பட்ட ஒரு வால்வால் [Valve] நீராவி  ஜனனிகளுக்குத் தொடர்ந்து நிரப்பும் தூய நீர் தடைபட்டது! அதன்பின் பிரதம நிரப்பு நீர்ப்  பம்பும் [Main Feedwater Pump], ஓடிக் கொண்டிருந்த பிரதம டர்பைனும் [Main Turbine] நிறுத்தம்  அடைந்து, 870 MWe மின்னாற்றல் இழப்பானது! உடனே அபாய நிரப்புப் பம்ப் தானாக  இயங்க ஆரம்பித்தாலும், நீராவி ஜனனிகளுக்கு நீரனுப்ப முடியாது போயிற்று!  ஏனென்றால் கடந்த வாரத்தில் மூடப் பட்ட சில வால்வுகள், சோதனை முடித்ததற்குப்  பிறகு திறக்கப் படாமல் கிடந்தன! ஆட்சி அறை அரங்கில் [Control Roon Panels] காணப்படும்  மூடிய அந்த வால்வுகளின் மினி விளக்கு, அருகில் தொங்கும் பராமரிப்பு எச்சரிக்கை  அட்டை எதுவும், இயக்குநர் கண்களுக்குத் தெரியாமல் போனது, ஓர் விந்தை நிகழ்ச்சி!

அணு உலையில் தொடர்ந்து உண்டாகும் 2700 MWt வெப்பசக்தி [870 MWe] ஜனனிகளில் நீர்  இருந்தால்தான் நீராவி யாக்கப்பட்டு டர்பைனை ஓட்டுகிறது. அவ்வழியில் அணு உலைக்கு  நீராவி ஜனனிகளே பிரதம ‘வெப்ப விழுங்கிகள் ‘ [Steam Generators are the Main Heat Sinks for  the Reactor]! வெப்ப விழுங்கிகள் நீரற்று முடமானதால், அணு உலையின் வெப்பமும்,  தணிப்புநீர் அழுத்தமும் அளவு மீறி, அணு உலைத் தானாக நிறுத்த மானது! நீர் அழுத்தம்  ஏறியதும் தானாய் இயங்கும் தணிவு வால்வு [Power Operated Relief Valve (PORV)] ஒன்று  திறந்து அணு உலைப் பிரமத வெப்பத் தணிப்பு நீரை [Primary Coolant] வெளியேற்றியது!  திறந்த PORV அழுத்தம் குன்றியதும் மூடாமல் துரதிஷ்ட வசமாகச் சிக்கிக் கொண்டதால்,  நீர் வற்றிப் போய்க் கனலான எரிக்கோல்கள் நீர் மட்டம் குன்றி வரட்சியில் உஷ்ணம் ஏறி  எரியத் தொடங்க ஆரம்பித்தன! அதாவது வெப்ப எரிக்கோல்கள் ‘தணிப்பு நீர் இழப்பு விபத்தில் ‘ [Loss of Coolant Accident (LOCA)] மாட்டிக் கொண்டது!
வெப்ப எரிக்கோல்கள் தணிப்பு நீர் இழப்பு விபத்தில் உருகின!
PORV இல் ஒழுகும் கதிர்வீச்சு நீர் சேமிப்புத் தகழி [Contaminated Water Storage Tank]  நிரம்பியதும் அதனுடைய காப்புத் தகடு [Rupture Disc] உடைந்து, தீவிரமான கதிரியக்க  திரவம் கோட்டைத் தளத்தில் கொட்ட ஆரம்பித்தது! வெப்பத் தணிப்பு நீரழுத்தம்  குன்றியதும், சுயமாகவே அபாய எருக்கருத் தணிப்பு நீர் ஏற்பாடு [Emergency Core Cooling  System] துவங்கியது! அணு உலையின் மீது பட்ட நீர் உடனே ஆவியான போது, அழுத்தக்  கலனில் [Pressurizer] நீர் நிரம்பிப் பொங்குவதாக எண்ணித் தப்பாகப் புரிந்து கொண்ட ஆட்சி  அறை இயக்குநர், அபாயப் பணிப் பம்பை மூடத்தனமாக நிறுத்தினர்! அத்துடன் நில்லாது,  மேலும் தணிப்பு நீரை நீக்க சில வால்வுகளைச் சிந்திக்காமல் திறந்து விட்டார்கள்!  அவசரத்திலும், அச்சத்திலும் செய்யும் பல அபாயத் தடுப்பு வேலைகள் அனைத்தும்  அடுத்தடுத்த தவறுகளாகி அணு உலையின் கனலான எரிகோல்கள் நீரற்று உஷ்ணத்தில்  உருகி உலைக் கலனின் அடியில் ஓடித் தங்கின!

நீராவி ஜனனிகளின் மூடிய அபாயப் பணி நீரனுப்பி வால்வுகளைக் கண்டு இறுதியில்  திறந்து, ஜனனிகளுக்கு நீரைத் திறந்து விட்டார்கள்! ஆனால் திறந்து மூடாமல் சிக்கிக்  கொண்ட PORV நீரை வீணாகக் வெளியேற்றுவதை இயக்குநர் இன்னும் கண்டு  கொள்ள வில்லை! அணு உலையில் தங்கிய நீர் ஆவியாகி, அதன் உஷ்ணம் மிகையாகி, உலையின் உலோகத்துடன் பிணந்து ஏராளமான ஹைடிரஜன் வாயுக் குமிழ் [Hydrogen Gas  Bubble] உண்டாகி வெடித்து விடப் பயமுறுத்தியது! செர்நோபிள் அணு உலையில் நிகழ்ந்த  இரண்டாவது பயங்கர வெடிப்பு, ஹைடிரஜன் வாயுக்குமிழ் மூர்க்கமாக ஆக்ஸிஜனுடன்  இணைந்ததால் ஏற்பட்டதே!
தீவிரமாய்க் கதிர்வீசும் கழிவுகளைத் தாங்கிய நீர் தொடர்ந்து கொட்டிக், கோட்டை  அரணின் தளத்தில் நிரம்பத் துவங்கியது! விபத்து நிகழ்ந்து 2 மணி 18 நிமிடங்கள் கழித்து  PORV திறந்து தணிப்பு நீரை வெளியாக்குவது தெரிய வந்து அது மூடப் பட்டது! உடனே  தணிப்பு பம்புகளை இயக்க ஆரம்பித்து, எரிகோல்களின் கனல் வெப்பம் தணிக்க நீரனுப்பி,  அணு உலை நிரப்பப் பட்டு அணு உலை கட்டு படுத்தப் பட்டது! ஆனால் அதற்குள் பல எரிக்கோல்கள் உருகி விபத்தின் மீளா விளைவுகள் ஏற்பட்டு விட்டன!

வெப்பத் தணிப்பு நீரிழப்பால் அணு உலைக்கு நேர்ந்த சிதைவுகள்
PORV திறந்து 600,000 காலன் வெப்பத் தணிப்பு நீரைக் கோட்டை அரணில் கொட்டி  வெளியாக்கியது! TMI-2 அணு உலையில் 37,170 தனி யுரேனியம் டையாக்ஸைடு  எரிக்கோல்கள் கொண்ட 177 கட்டுகள் [177x210 =37170] நீரில் மூழ்கும்படி முதலில்  நுழைக்கப் பட்டிருந்தன. எரிக்கோல்களின் மேற்புறம் நீரில் மூழ்காமல், 315 டிகிரி C  உஷ்ணத்தில் இயங்கியவை, தணிப்பு நீர் குன்றி உஷ்ணம் 2800 டிகிரிக்கும் மேல்  ஏறியதால், 50 டன் [50%] எரிக்கோல்கள் எரிந்துருகிச் சிதைவடைந்தன! அணு உலையில்  எரிக்கோல்கள் மேற்புறம் பிளந்து, தீவிரக் கதிரியக்க துணுக்குகளைக் [Cesium134, Cesium135,  Strontium90] கக்கியதால், அவற்றைச் சுமந்து கொண்டு வெளியேறிய தணிப்பு நீர் பெரிய  தடாகம் போல், கோட்டைத் தளத்தில் சேர்ந்தது! 100 டன் மொத்த எரிக்கோல்களில் 16-20  டன் அணு உலையில் காணப் படவில்லை! அப்பகுதி தணிப்பு நீரில் கசிந்து கோட்டைத்  தளத்தில் கிடந்தது! மேலும் 50 டன் உட்கருச் சாதனங்களும் சிதைந்து, ஆக மொத்தம் 150  டன் கதிர்வீச்சுக் குப்பைகள் உலைக்குள் சேர்ந்து விட்டன!
தீவிரக் கதிர்வீச்சுள்ள நீரை இரசாயன, மற்றும் யந்திர வடிகட்டு வழிகளில் சுத்திகரித்துப்  பல டன் அணுப்பிளவுத் துணுக்குகளைக் கவசக் கலன்களில் பாதுகாப்பாகச் சேமிப்பது ஓர்  இமாலயச் சாதனை! அதை விட 150 டன் கதிரியக்கக் குப்பைகளைக் கவசம் அணிந்து,  அணு உலையிலிருந்து சிறுகச் சிறுக அறுத்தெடுத்து கவசக் கலன்களில் மூடி,  வாகனங்களில் அனுப்பிப் புதைப்பது, அதைவிடப் பெரிய சாதனை!

அணு உலையின் 20-30 அடி ஆழத்தில் மண்டியான நீரில், 150 டன் கதிரியக்கக்  குப்பைகளை, பதினெட்டு அங்குள விட்டமுள்ள துளை வழியாக உறிஞ்சி எடுக்கப் பலவித  சுய இயக்கத் தூரக் கருவிகள் பயன்படுத்தப் பட்டன! 1000 பவுண்டுக்கும் மேலான  யுரேனியக் கழிவுகள் வெப்பத் தணிப்பு பைப்புகள், பம்புகள், மற்ற சாதனங்களிலும்  நீரோடத்தால் பரவி விட்டன!
யுரேனியம் உருகித் திரண்டு பலவித வடிவங்களில் நீருக்குள் அணு உலையின்  அடித்தளத்தில் சேர்ந்து, ‘விரைவுப் பூரண வெடிப்பு ‘ [Prompt Criticality Explosion] நேர்ந்து  விடுமோ என்ற பேரச்சம் உண்டானதால், மித மிஞ்சிய நியூட்ரான் விழுங்கியான ‘போரான்  திரவத்தை ‘ [Boron Liquid 5000 parts per million] அணு உலைக்குள் செலுத்தினார்கள்!

TMI-2 அணு உலைத் திருத்தத்தில் பணிநபர் பட்டக் கதிரடிகள்
(1 Sv = 100 Rem) (1 mSv = 0.1 Rem)
கதிர்வீச்சு அளவுகள் அணு உலையின் உள்ளே பல தளங்களில், பல திசைகளில் உளவு  செய்து குறிக்கப் பட்டன. பணியாளிகள் வேலை செய்யும் அணு உலையின் மேற்தளத்தில்  கவச மற்ற அளவுகள்: 40-600 Rem/hr. அணு உலையின் மூடியின் உள்ளே 700-800 Rem/hr.  ஈயத்தால் ஆன கவசம் அணிந்து வேலை புரிவதால் பணியாளருக்குப் படும் கதிரடி மிக  மிகக் குன்றிய அளவிலே [50-250 milliRem/hr] இருக்கும்!
TMI-2 அணு உலைச் சுத்திகரிப்புக்குக் கதிரடி மதிப்பீடு சுமார் 8000 man-Rem. கதிரடி  வரையறை உலைப் பணியாளிக்கும் (0.5 Rem/yr, Max 5 Rem/yr), வெளிப் பணியாளிக்கும் (0.2  Rem/yr) [Administrative Control 0.5 Rem/yr (Max 5 Rem/yr) for Radiation Worker & 0.2 Rem/yr for Non- Radiation Worker] என்று அழுத்தமாகக் கட்டுப் படுத்தப் பட்டன. அம்முறையில் உதாரணமாக  உலைப் பணியாளிகள் 500 பேர் என்றும், வெளிப் பணியாளிகள் 3000 நபர் என்றும்  வைத்துக் கொண்டால் ஓராண்டில் 500×0.5 +3000×0.2 =850 man-Rem. அந்த வீதத்தில் வேலை  முடியக் குறைந்தது 9.5 ஆண்டுகள் [8000/850] ஆகும்!

கோட்டை அரண் தளங்களில் கதிர்வீச்சு 35 R/hr! அரணின் அடித்தளத்தில் மட்டும்  கதிர்வீச்சு 1000 R/hr! 1986-1988 ஆண்டுகளில் பணியாளிகளின் கதிரடி 900-1000 man-Rem! 1989  இல் அணு உலைப் பணியில் பங்கு கொண்டவர்கள் சுமார் 500 நபர்கள். அவர்களின்  அவ்வாண்டுக் கதிரடி மட்டும் 615 man-Rem! TMI-2 அணு உலைச் சுத்திகரிப் புக்கு இறுதியில்  மதிப்பீடுக்கும் [8000 man-Rem] குறைவாகவே செலவானது: 6000 man-Rem!
கோட்டை அரணுள் அடைபட்ட கதிரியக்க நோபிள் வாயுக்களை [Noble Gases] வெளியே  அனுப்பும் போது, வரையறைக் குட்பட்டு 1% அளவே அனுமதி பெற்று புகைபோக்கி  வழியாகச் சென்றது! மிஞ்சியவை சிறிது சிறிதாக வடிகட்டப் பட்டுக் கோட்டையி லிருந்து  1% அளவை மீறாமல் வெளியாக்கப் பட்டது!

கதிரியக்க விளைவுகளால் பொது நபருக்கு ஏற்பட்ட பாதிப்புகள்
விபத்து நேர்ந்து இரண்டு நாட்களில் NRC [Nuclear Regulatory Commission] TMI-2 அணு உலைக்கு  5 மைல் வட்டாரத்தில் வாழும் கர்ப்பவதிகளையும், சிசுக்களையும் வீடுகளை விட்டு வேறு  இடங்களுக்குப் புகும்படி, பென்ஸில்வேனியா ஆளுநர் [Governor] மூல மாக ஆணை  பிறப்பித்தது! ஐந்து மைல் சுற்றளவில் குடியிருந்த 60% நபர்கள், 15 மைல் வட்டாரத்தில்  வாழ்ந்த 39% மக்கள் ஆணைக்குக் கீழ்படிந்து வெளியேறினர்! பிறகு அபாய வேளை  கடந்ததும் ஏப்ரல் 2 ஆம் தேதி அனைவரும் தம் வீடுகளுக்கு மீள அழைக்கப் பட்டனர்!  1999 மார்ச்சில் வெளியான TMI-2 ‘இருபது ஆண்டு கடப்பு நிகழ்ச்சி ‘ [Twentieth Anniversary]  அறிக்கையில் ஜாக் ராஸோ கூறியது:
1. கோட்டை அரணிலிருந்து வெளிவந்த கதிர்வீச்சு வாயுக்கள், திரவத்தின் கசிவால் பொது  நபருக்கு விளையும் மிகுதியான அபாய எதிர்பார்ப்புகள் [Extra Health Risks] மிகக் குறைந்த  அளவே!
2. TMI-2 அருகில் 50 மைல் வட்டாரத்தில் வாழும் மாந்தருக்கு அவரது வாழ்நாளில்  எதிர்பார்க்கப்படும், மதிப்பீடு செய்யப் பட்ட மிகுதிப் புற்று நோய் மரணம் [Extra Terminal  Cancer] ஒன்று! மற்றும் வேறு மரண நோய்கள், மரண மற்ற நோய்கள் இரண்டு!

1996 இல் பென்ஸில்வேனியா அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தின் [US District Court of  Pennsylvania] நீதிபதி ஸில்வியா ராம்போ [Sylvia Rambo] TMI-2 விபத்தால் சமர்ப்பிக்கப் பட்ட  2100 உடல்நலக் கேடு வழக்குகளை மெய்யில்லை என்று நிராகரித்துத் தள்ளினார்!
30 ஆண்டுகளுக்குப் பிறகு TMI-2 அணு உலையின் தற்போதைய நிலை!
1986 ஜூலை முதல் ரயில், மோட்டார் வாகனங்களில் கதிர்வீச்சுக் குப்பைக் கலன்களின்  பயணங்கள் தொடங்கின! 1990 ஜனவரி மாதம் TMI-2 அணு உலையில் உருகி கடும்  உலோகப் பாறையாய்ப் போன யுரேனியப் பிளவுக் கட்டிகள் யாவும் நீக்கப் பட்டன!  ஆயிரக் கணக்கான ராஞ்சன் கதிரியக்கம் கொண்ட பிளவுக் கழிவுகள் கவசக் கலன்களில்  ஏற்றப் பட்டு அமெரிக்க எரிசக்தித் துறையகத்தின் இதாஹோ தேசீயப் பொறியியல்  ஆய்வுக் கூடத்திற்குச் [U.S. Dept of Energy, Idhaho National Engineering Laboratory] சோதிக்கவும்,  அதன் பின் புதைக்கவும் அனுப்பப் பட்டன! பென்ஸில் வேனியாவிலிருந்து பத்து  மாநிலங்களைத் தாண்டி இதாஹோ இடுகாடுப் புதை பூமியில் கலன்களை இறக்கி விட்டு,  ஒரு முறை மீள 90,000 டாலர் [1989 நாணய மதிப்பீடு] செலவானது!
கதிர்த்தளக் கட்டுப்பாட்டு மேல் நிர்வாகி, டேல் மெர்ச்சென்ட் [Dale Merchant,Radiological Control  Field Operations] கூறியது: ‘TMI-2 அணு உலையின் பத்தாண்டு பராமரிப்பு முடிந்ததாகப்  பெருமை அடைகிறேன்! இதுவரைத் தொழிற் துறையில் யாரும் மேற்கொள்ளாத ஒரு  மாபெரும் சாதனை இது! தூரத்தில் தானாய்ச் செய்யும் ‘சுயப்பணி யந்திரங்கள், தொலை  இயக்குக் கருவிகள், பேரறுவை, உறிஞ்சல் பொறி நுணுக் கங்கள்,  [Robotics, Remote Toolings,  Cutting-Edge & Vacuum Technology, Handling Hot Radioactive Particles] யாவும் புதியதாய் வடிக்கப்  பட்டுப் பயன்படுத்தப் பட்டன!

1990-1993 ஆண்டுகளில் மிஞ்சிய அற்பப் பணிகள் யாவும் தீர்க்கப்பட்டு, முடிவாகச் சுத்தம்  செய்யப்பட்டு, 1993 டிசம்பரில் TMI-2 அணு உலை நிரந்தரக் கண்காணிப்பு நிலையில்  [Monitored Storage Condition] ஓய்வெடுத்தது! அதன் இரட்டைப் பிறவியான TMI-1 முற்றிலும்  செம்மைப் படுத்தப்பட்டு 1989 ஆண்டு முதல் 100% ஆற்றலில் [900 MWe] சிறப்பாக இயங்கி  வருகிறது!
திரி மைல் தீவு அணு உலையைச் சுத்தம் செய்ய நிதிச் செலவு
1979 TMI-2 அணுமின் உலை விபத்து நிகழும் போது, அமெரிக்க அதிபதியாக இருந்தவர்,  அணுவியல் துறையில் வல்லமை பெற்ற எஞ்சினியரான, ஜிம்மி கார்டர் [Jimmi Carter]!  விபத்து நேர்ந்த சில தினங்களில் கார்டர் நேராகச் சென்று TMI-2 விளைவுகளைக்  கண்டறிந்தார்! அணுமின் உலைகளின் மீதுள்ள பொதுநபர் மதிப்பை மேற்படுத்த அமெரிக்க  அரசு திரி மைல் தீவின் கோர விளைவுகளுக்குப் பொறுப்பேற்று, விபத்தின் காரணத்தை  ஆய்ந்து, நிலையத்தைச் சுத்தம் செய்யும் இமாலயப் பணியையும் மேற்கொண்டது!  அமெரிக்க அணுமின் உலைகளைக் கண்காணிக்கும் ‘அணுக்கருக் கட்டுப்பாடு பேரவை ‘  [Nuclear Regulatory Commission] அனைத்து பராமரிப்புப் பணிகளையும் ஆணை யிட்டு  மேற்பார்வை செய்தது! TMI-2 அணுமின் நிலைய உரிமையாளி G.P.U. [General Public Utilities  Corp. Parsipanny, N.J.].
900 MWe ஆற்றல் கொண்ட TMI-2 அணு உலை இயக்குநர் மூடத்தனத்தால் விபத்தில்  சிக்கிச் சிதந்த பிறகு, பத்தாண்டுகளுக்கு மேல் நிறுத்தம் ஆகி பராமரிப்பில் கால  தாமதமானதால், பல பில்லியன் டாலர் பணம் விரையமானது! 1987 ஆண்டு மதிப்பீடு  நிதியில் வெளியே வாங்க வேண்டிய ஆற்றலுக்கு மேற்கொள்ளும் பணத்தின் ஏற்ற  இறக்கத்துக்குத் தக்கவாறு [Replacement Cost of Power], நாளொன்றுக்கு $500,000 -$1000,000  டாலர் முடங்கிய நிலையத்தின் நஷ்டச் செலவுத் தொகையாகும்!

TMI-2 அணு உலைச் சுத்திகரிப்புச் செலவு ஒரு பில்லியன் டாலர் என்று [1983 நாணய  மதிப்பு] மதிப்பீடு செய்யப் பட்டது! 1979-1983 நான்கு ஆண்டுகளில் மட்டும் 60 மில்லியன்  டாலர் செலவாகி விட்டது! GPU உரிமையாளிக்கு இன்ஸூரன்ஸ் கம்பேனி அளித்த  தொகை 300 மில்லியன் டாலர்! அமெரிக்காவின் தொழிற் துறை நிறுவகங்கள் 100  மில்லியன் டாலர் அளிக்க முன்வந்தன! மற்றும் அமெரிக்க மின்னாற்றல் உற்பத்தி  நிறுவகங்கள் [Power Utilities] 64.6 மில்லியன் டாலர் உதவி செய்ய உறுதி கூறின! அமெரிக்க  அரசு [Dept of Energy] 159 மில்லியன் டாலர் அளித்தது! ஜப்பான் மின்னாற்றல் கூட்டகம்  [Japan Federation of Electric Power] தனது 22 எஞ்சினியர்களைப் பங்கு கெள்ள அனுப்பி, 18  மில்லியன் டாலர் நிதி அளித்து அணு உலைச் சுத்திகரிப்பில் துணை புரிய முன்வந்தது!
இறுதியில் TMI-2 சுத்திகரிப்புக்கு மெய்யாகச் செலவான தொகை 973 மில்லியன் டாலர்  [March 1999 Report]!
விபத்தில் முறையாக இயங்கிப் பாதுகாத்த சாதனங்கள்
TMI-2 விபத்து மூலம் அமெரிக்காவின் அழுத்த அணுமின் உலை [PWR, Pressurized Water  Reactor] டிசைன் ஆக்கநெறி வெற்றியை ஒரு வகையில் நிரூபித்துக் காட்டியது!
1. அபாய விளைகளால் சேர்ந்த 600,000 கதிர்வீச்சுத் திரவத்தையும், யுரேனியக்  கழிவுகளையும், கதிரியக்க வாயுக்களையும் 3 அடித் தடிப்புக் கோட்டை அரண் [Containment]  உள்ளடக்கி, பொது நபர்களைத் தாக்காதவாறு காப்பாற்றி யுள்ளது!
2. கதிரியக்கம் பொங்கும் சிதைந்து போன 50 டன் உருகிய யுரேனியம், 50 டன் உருகாத  யுரேனியம், தகர்ந்து போன 50 டன் உலைச் சாதனங்களை 2800 டிகிரி C உஷ்ணத்தில், 2175  psi அழுத்தத்தில் [15 MPa] தாங்கிக் கொண்டு, ஒருவிதப் பிளவோ, கீரலோ இல்லாமல் அணு  உலைக்கலன் [Reactor Vessel] கட்டுப் படுத்தியது, சிறப்பான டிசைனைக் காட்டுகிறது!
3. மில்லியன் கியூரிக் கணக்கில் கதிரியக்கத் திரவம் கோட்டைக்குள் சேர்ந்தாலும், மிகக்  குன்றிய அளவே [Radioactive Emission] அரணை விட்டு வெளியேறியது!
4. அணு உலைக் கலனில் எங்கெல்லாம் நீர் [Core Cooling] இருந்ததோ, அங்கெல்லாம்  எரிக்கோல்கள் [50 டன் (50%)] சேதமடைய வில்லை!
5. எதிர்பார்த்த அளவுக்கு அணுப்பிளவுத் துணுக்குகளால் [Fission Product Behaviour]  இன்னலோ அல்லது இடைஞ்சலோ பணியாளிகளுக்கு ஏற்பட வில்லை!

TMI-2 விபத்தில் அமெரிக்கா கற்றுக் கொண்ட பாடங்கள்
TMI-2 அணுமின் உலை விபத்திற்கு மூல காரணமான இயக்குநர்கள் யாவரும்  வேலையிலிருந்து வெளியே தள்ளப் பட்டனர்! ஆனால் யந்திரத் தவறுகளும், சாதனப்  பழுதுகளும், இயக்கப் பராமரிப்புச் சீர்கேடு களும் பின்னக் கொண்டு, பில்லியன் டாலர்  விபத்து நேர்ந்த போது, ஒருதிசைக் கண்ணோட்டத்தில் அவர்களை மட்டும் தண்டித்தது  நியாயம் அற்ற கொடுஞ் செயல்! அணு உலை டிசைநர், கட்டுநர், இயக்குநர், பயிற்சி  அளிப்போர் ஆகிய அனைவரும் குற்றக் கூண்டில் ஏற்றப்பட்டு விசாரணைக் குள்ளாகித்  தண்டிக்கப் பட்டிருக்க வேண்டும்!
பணி புரிந்த இயக்குநர்களுக்கு, அணு உலை இயக்க நுணுக்கங்களில் போதிய பயிற்சிகள்  அளிக்காதது GPU உரிமையாளி செய்த முதற் தவறு! மிகவும் சிக்கலான அணு உலை  இயக்க ஏற்பாடுகளில் முரண்பாடுகள் நிகழ்ந்து அபாயம் விளையப் போகும் வேளைகளில்,  இயக்குநர் விரைவாகச் சிந்தித்துச் செயல்படாதது, அணுக்கரு விஞ்ஞானம், பொறியியல்,  வெப்ப யியக்கவியல் [Nuclear Physics, Nuclear Engineering & Thermodynamics] ஆகியவற்றில்  படிப்பில்லாமல் போனதையும், மின்சார நிலையத்தில் போதிய பயிற்சிகள் [Power Station  Operation Training] யில்லாமல் இயக்குநர் ஆனதையும் காட்டுகிறது!

1979 இல் அமெரிக்கா TMI-2 அணுமின் உலை விபத்திற்கும், இந்தியாவில் போபால் நகரில் 1983 இல் நேர்ந்த விஷ வாயு விபத்துக்கும் பல ஒற்றுமைகள் காணப் படுகின்றன!  இரண்டும் அமெரிக்க உரிமையாளிகளால் நிர்வாகம் செய்யப் பட்டன! இரண்டு  விபத்துகளும் தூண்டப் பட்டு பேரழிவும், பெருஞ் செலவும் ஏற்பட மூல காரணமானவர்  போதிய படிப்பற்ற, பயிற்சியற்ற, சிந்தனை குன்றிய இயக்குநர்களே! அவ்வாறு தரமற்ற  இயக்குநர்களை நுணுக்கமான பணிகளைச் செய்ய அனுமதித்த நிர்வாகிகளே முதற்  குற்றவாளிகளாக கருதப் பட்டு ஏனோ விசாரிக்கப் படவில்லை!
அணுமின் நிலைய ஆக்க நெறிகளில் நான்கு துறைகளில் செய்முறைகள் முற்றிலும்  திருத்த மாகி NRC தனது புதிய Nureg-0737 அறிக்கையை 1980 அக்டோபரில் வெளியிட்டது!
1. அணு உலை இயக்கப் பாதுகாப்பு [Reactor Operational Safety]
2. அணு உலைத் தள அமைப்பு & அணு உலை டிசைன் [Reactor Siting & Design]
3. பிரதம வெப்பத் தணிப்பு நீரிழப்பு, நீராவி ஜனனி நிரப்பு நீரிழப்பு ஆகிய அபாயங்களைக்  கட்டுப்படுத்தல் [Handling Loss of Primary Coolant & Loss of Secondary Coolant (Feedwater) Accidents]
4. அபாய நிகழ்ச்சிகளை எதிர்கொள்ள தயாரிப்பு முறைகள், கதிர்வீச்சுத் தாக்குதல் களைக் கட்டுப்படுத்தல் [Emergency Preparedness & Radiation Effects], அபாய காலத்தில் பொதுநபர்  பின்பற்றும் பாதுகாப்புப் பயிற்சிகள்.

அமெரிக்காவின் எதிர்கால அணுமின் உலைகளின் நிலை
TMI-2 விபத்துக்குப் பிறகு NRC எதிர்கால அணுமின் திட்டங்களுக்குக் கடும் விதிகளையும், பெரும் தேவைகளையும், நெடும் உளவு முறைகளையும் புகுத்தி முன்னறிவித்துப் பல புதிய லைஸென்ஸ் நெறி முறைகளை வகுத்தது! அவற்றில் நீடித்த இயக்குநர் பயிற்சிகள், உயர்தரத் தேர்ச்சி முறைகள் அழுத்தமாகக் கூறப் பட்டுள்ளன! அடுத்து புதிய நிலையங்கள் உருவாகும் முன்பே அவற்றின் ‘போலி அணுமின் உலை ஆட்சி அரங்குகள்’ [Reactor Simulator Panels] அமைப்பாகி, நிலைய இயக்குநருக்கு அணுமின் உலையின் அபாய வேளைப் பயிற்சிகள் அனைத்தும் முன்பாகவே கற்பிக்கப்பட்டு இயக்குநர் சோதிக்கப் பட வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது!
அமெரிக்காவில் இப்போது 104 அணுமின் உலைகள் இயங்கிக் கொண்டு 97,400 MWe [20%] மின்னாற்றலைப் பாதுகாப்பாகப் பரிமாறி வருகின்றன! 1979 ஆண்டில் நேர்ந்த TMI-2 விபத்திற்குப் பிறகு மூடப்பட்ட நிலையங்கள் பல புத்துயிர் பெறப் போகின்றன!  அடுத்து பழையதாய்ப் போய் மூடப்பட்ட நிலையங்கள் பல புதுப்பிக்கப் படப்  போகின்றன!  அணுமின் சக்திக்கு அமெரிக்காவில் மீண்டும் பச்சைக் கொடி காட்டப் பட்டுள்ளது ஓர் நல்ல திருப்பமே ஆயினும், இப்போது ஜப்பானிய புகுஷிமா விபத்து (மார்ச் 11, 2011) அணுமின் உலைகளின் தலை விதியை நேர் மாறாக முற்றிலும் மாற்றி விடலாம்.  கடற்கரை ஓரங்களில் நிறுவப் பட்டு இயங்கி வரும் அணுமின் உலைகள் மீளாய்வு செய்யப் பட்டு மீண்டும் சீராக்கப் படலாம்.  காரணம் பல மாநிலங்களில் இப்போது அடிக்கடி இருளாட்சியும் [Blackouts (Complete Shutdown)], பழுப்பாட்சியும் [Brownouts (Partial Shutdown)] இடையிடையே உண்டாகி மின்சக்தியின் தேவையும், தொடர்ந்த சேவையும் உலகில் மிகையாகி வருகிறது!
.............................................................